உங்கள் வருகைக்கு நன்றி

வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால்

ஞாயிறு, 29 நவம்பர், 2020

 

வாழ்வில் சாதனைகளைப் படைத்திட ஒருவருக்கு புத்திசாலித்தனம் மட்டும் போதும் என்று நம்பிவந்த எண்ணம் இன்று பொய்த்து, உணர்வுசார் நுண்ணறிவு அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

 

மென் திறன், பேச்சு திறன் என்ற திறன்களுக்கு மத்தியில் இன்று தனிப்பட்ட வாழ்விலும் சரி தொழில் வாழ்விலும் சரி, உணர்வுசார் நுண்ணறிவு நம் வெற்றிக்கும், சந்தோஷத்திற்கும் முதன்மையாக விளங்குகிறது. சாதாரணமாக எல்லோருக்கும் மகிழ்ச்சி துக்கம், கோபம், பயம் , பொறாமை, அன்பு, பாசம், சினம், ஆசை, பொறாமை, வெறுப்பு, விரக்தி, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம்,எரிச்சல், சலிப்பு, மன உளைச்சல், அவநம்பிக்கை, தனிமை, வலி என்று பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். அது அளவிற்கு மீறி வெளிப்படும் போது நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதிக்கும் சூழ்நிலையை நாம் தினமும் பார்க்கிறோம்.

 

மன அழுத்தம்

 

உணர்ச்சிகளை கட்டுபடுத்தாததால் தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். மன அழுத்தத்தின் பொழுது நம் நாவும், செயல்பாடுகளும் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதன் விளைவாக பேசும் பேச்சும், நடவடிக்கைகளும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தின் பொழுது நாம் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் ஆக்கபூர்வமாக இருப்பதில்லை. ஆகையால் நம் வெற்றிக்கும், அமைதியான வாழ்விற்கும் உணர்வுசார் நுண்ணறிவு பெரிய பாலமாக அமைகிறது. அதை உணர்ந்து, அறிந்து செயல் பட்டால் வாழ்வில் வெற்றியை அடைவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. உணர்ச்சி நுண்ணறிவை எளிமையான முறையில் விளக்க முடியும். உணர்ச்சி நுண்ணறிவை நம்மிலும் மற்றவர்களிடமும் உள்ள உணர்ச்சிகளை அடையாளம் கண்டு புரிந்து கொள்ளும் திறன் என வரையறுக்கலாம்

 

உணர்ச்சி நுண்ணறிவு

 

உணர்ச்சி நுண்ணறிவு என்பது உணர்ச்சி புரிதலைப் பயன்படுத்தி முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. உணர்ச்சி நுண்ணறிவில் உணர்ச்சிகளை உணர்வது, பகுத்தறிவது, புரிந்துகொள்வது, நிர்வகிப்பது என நிலைகள் உள்ளன. கடந்த காலங்களில் உணர்ச்சிகளும் புத்திசாலித்தனமும் ஒன்றுக்கொன்று எதிர்ப்பாகவே கருதப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளில், உணர்ச்சி நுண்ணறிவு முழுமையான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பாதையில் நம்மை வழிநடத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது, உணர்ச்சிபூர்வமான மேற்கோள்(EQ) ஏன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது? அதிக உணர்ச்சி நுண்ணறிவு (EI) உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், சிறந்த சம்பளத்தைப் பெறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

 

மேம்படுத்துவது எப்படி

 

1.நீங்கள் அனைவரிடமும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்

2.துக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்

3.மன அழுத்த சூழ்நிலைகளுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள்

4.தோல்வி உணர்வை விரட்டுங்கள்.

5.உங்கள் பணிச்சூழலில் இருப்பவர்கள் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை உணருங்கள்

6.தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களை பற்றி யோசிக்கவோ பேசவோ பழகுங்கள்

7.உங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கிறீர்களா என்று யோசியுங்கள்

8.உங்கள் செயல்கள் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராயுங்கள்

9.&' கோபம் நம்மை ஆக்கிரமிப்பு செய்யாமல் கட்டுக்குள்வைத்திருங்கள்

10.உணர்ச்சிவசப்பட்டு எதையும் கூறவோ, செய்யவோ வேண்டாம்

11.ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனப்பக்குவத்தை வளருங்கள்

12.தியானம் செய்து பழகுங்கள்.

13.எவரிடமும் உங்கள் வெறுப்பை காட்டாதீர்கள்

14.மன நிலையை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

15.சுய மதிப்பீடு செய்யுங்கள்.

 

பணி இடத்தில் சாதிக்க

 

நெருங்கியவர்கள் செய்யும் செயல்களால் நம் மனம் நொறுங்கி போகும். அந்த சமயத்தில் எதையும் யோசிக்காமல் நாம் எடுக்கும் முடிவுகள் அந்த உறவை அறவே அழிக்கும். அவர்கள் என் அப்படி நடந்து கொண்டார்கள், காரணம் இருக்கும் என்று நாம் யோசிக்க கற்று கொண்டால் அந்த முடிவை தவிர்க்கலாம். எல்லோருக்கும் அவர்கள் செயல்களுக்கு ஒரு காரணம் இருக்கும் என்பதை உணர வேண்டும். அதை அவர்களிடம் பேசினால் நியாயமாக தோன்றும். உணர்ச்சி நுண்ணறிவு மதிப்புமிக்க திறமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 

பயிற்சி மூலம் மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்ற திறமையும் இதுதான். பணியிடத்தில் பலங்களையும் பலவீனங்களையும் அடையாளம் காணுங்கள். சக ஊழியர் உங்களை எரிச்சலடையச் செய்யலாம் அல்லது உங்கள் முதலாளி கடினமான பணியைத் தரக்கூடும். நீங்கள் எதிர்வினையாற்றுவதற்கு முன், இவை தற்காலிகமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணியிடத்தில் பிடித்த விஷயங்களில் மனதை செலுத்துங்கள். முடிவுகளை எடுப்பதற்கு முன் சிந்தியுங்கள். மற்றவர்கள் சொல்ல வருவதை பொறுமையோடு கேட்க பழகுங்கள்.

 

சொற்களற்ற தகவல்தொடர்புக்கு கவனம் செலுத்துங்கள். ஒருவர் தங்கள் உடல் மொழி மூலம் அனுப்பும் சமிக்ஞைகள் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய தெரிவிக்க முடியும். அலுவலக அரசியலில் இறங்குவதைத் தவிர்க்கவும்.பணி இடமாக இருந்தாலும் நம் தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், பிறரோடு இணைந்து செயல்பட்டு, பிறரைப் பாராட்டி, குறைகளை ஏற்றுக் கொண்டு, நம் உணர்ச்சி நுண்ணறிவைப் பயன்படுத்துவதின் மூலமாக வாழ்வில் வெற்றி மீது வெற்றிகளை குவிக்கலாம்.

 

-முனைவர் உஷா ஈஸ்வரன், தனித்திறன் மேம்பாட்டு ஆலோசகர்

 

Read more...

யூடியூப்பில் பணம் சம்பாதிப்பது எப்படி?

திங்கள், 28 செப்டம்பர், 2020

சமீபகால இளைஞர்களின் சுலபமான வேலைகளில் யூடியூப் சேனல் உருவாக்கமும் ஒன்று. மாடித்தோட்டம் அமைப்பது, செடி வளர்ப்பு முறைகள், சினிமா விமர்சனம், சமையல் குறிப்புகள், ஆடல்-பாடல்-நாடக பயிற்சிகள், மென்பொருள் மொழி வகுப்புகள், தொழில்வாய்ப்பு பயிற்சிகள், மீன்பிடி தொழில்நுட்பங்கள், படகு வாழ்க்கை முறைகள், கட்டிட வடிவமைப்பு திட்டங்கள், செல்லப்பிராணி வளர்ப்பு ஆலோசனைகள், மலிவு விலை சந்தை ரவுண்ட்அப், சுற்றுலா தலங்கள்.... என எத்தனையோ தலைப்புகளில், யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அதில் தினந்தோறும் புதுப்புது வீடியோக்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. விருப்பமான காட்சிகளை நம் கண்முன் கொண்டு வருவதால், மக்களும் அதை ரசிக்கிறார்கள். யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்கிறார்கள். இதனால் நமக்கு லாபம்தான், யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கும் லாபம்தான்.


ஆமாங்க....! யூடியூப் வீடியோக்களின் தரத்தை பொறுத்து, அதை பதிவேற்றிய, உருவாக்கிய சேனல்களுக்கு யூடியூப்பில் இருந்து வெகுமதி கொடுக்கப்படும். அதனால்தான், இளைஞர் பட்டாளம் கேமராவையும், மைக்கையும் கையில் ஏந்தியவாறு, சாலைகளில் உலா வருகிறார்கள். பிராங்க் கலாட்டா, கணவன்-மனைவி அன்பு சண்டைகள், குடும்ப உறவுகளின் பிரம்மாண்ட விழாக்கள், பாட்டி வைத்தியம், கிராமத்து சமையல், குழந்தைகளின் சுட்டித்தனம் என ரொம்ப எதார்த்தமான விஷயங்களை எல்லாம், வீடியோவாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்.

இதுபோல உங்களுக்கும் திறமை இருந்து, யூடியூப் சேனல் ஆரம்பிக்க ஆசை இருந்தால், இந்த கட்டுரை உதவியாக இருக்கும். படியுங்கள். யூடியூப்பில் சம்பாதியுங்கள்.

*
எப்படி சேனல் உருவாக்குவது?

யூடியூப்பில் உங்களுக்கு என தனிப்பட்ட கணக்கை உருவாக்கவேண்டும். டிரெண்டிங்கான பெயர்களை யூடியூப் சேனலுக்கு சூட்டினால், வெகு விரைவாகவே பிரபலமாகலாம். யூடியூப் சேனல் பெயர், வீடியோக்களில் தோன்றும் நபர்கள், பகிரும் கருத்துக்கள்... இவற்றை அடையாளமாக வைத்தே, சேனலின் வளர்ச்சி இருக்கும். ஒரே நாளில் பணக்காரனாக ஆகலாம் என்றெல்லாம் கனவு காணாதீர்கள்! ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் சம்பாதிக்கலாம், அது நீங்கள் பகிரும் வீடியோவைப் பொறுத்தது.

*
எதை வீடியோவாக மாற்றுவது?

எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறந்த கேமராவை அல்லது சிறந்த எடிட்டிங் மென்பொருள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடியுங்கள். நாய்க்குட்டி, பூனைக்குட்டி, குழந்தை செய்யும் சேட்டை, மனைவி செய்யும் சமையல், மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எதை வேண்டுமானாலும் வீடியோவாக உருவாக்கலாம்.

*
மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி?

யூடியூப் சேனலை பிரபலப்படுத்த நினைத்தால், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களின் வழியே பிரபலப்படுத்தலாம். சமூக வலைத் தளங்களில் உலா வரும் உங்கள் வீடியோக்களையும், யூடியூப் சேனல் பற்றிய தகவல்களையும் பார்த்து மக்கள், உங்கள் யூடியூப் கணக்கை பின் தொடர வாய்ப்பிருக்கிறது. எத்தனை நபர்கள் உங்களை பின் தொடர்கிறார்களோ, அதற்கு ஏற்ப பணம் உங்கள் வங்கி கணக்கில் வந்து சேரும்.

*
எப்படி பணம் பெறுவது?

யூடியூப்பின் பக்கத்தில் எனது சேனல்என்பதைக் கிளிக் செய்தால் இதற்கான வழிமுறைகள் தோன்றும். அதில் மோனெட்டைசேஷன் என்ற வசதி இருக்கும். அதை ஆக்டிவேட் செய்தால் உங்கள் வீடியோக்களைப் பொறுத்து விளம்பரம் தெரியும். அதில் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் பெறுவதற்கு ஆட்சென்ஸ்என்ற கணக்கு இருக்க வேண்டும். ஆட்சென்ஸ்கணக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை. யூடியூப் சேனலுக்காகவே புதிய கணக்கு தொடங்கி, அதில் பணம் பெறலாம்.

*
எதை பதிவேற்றக்கூடாது?

வர்த்தக உரிமம் இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்தக்கூடாது. கவர்ச்சியான காட்சிகள், கருத்துகளை தவிர்க்கவேண்டும். ஏற்கனவே யூடியூப்பில் இருக்கும் வீடியோவை பதிவிறக்கம் செய்து, அதை புதிய பெயரில் உங்கள் கணக்கில் பதிவேற்றக்கூடாது. அதேபோல பிறர் பாடுவது, ஆடுவது, நடிப்பது, விளையாடுவது ஆகியவற்றை அவர் அனுமதியின்றி வீடியோவாக எடுத்து, பதிவேற்றுவதையும் தவிர்க்கவேண்டும்.

*
எப்போது பணம் கிடைக்கும்?

பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க, குறைந்தது பத்தாயிரம் பார்வையாளர்கள் உங்கள் வீடியோவை பார்க்கவேண்டும். பல்வேறு விளம்பரங்கள் மூலம் தான் நீங்கள் பணம் சம் பாதிக்க முடியும். மேலும் உங்கள் சேனலில் உள்ள அனலிட்டிக்ஸ் விருப்பத்தை சொடுக்கவும். மதிப்பிடப்பட்ட வருவாய்கள் உங்களுக்கு கிடைக்கும். அனலிட்டிக்ஸை பொறுத்தவரை வீடியோ பார்வைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பலவற்றை இங்கே பார்க்கலாம். நீங்கள் எத்தனை வீடியோக்கள் அப்லோடு செய்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால் அதற்கேற்ற வருமானம்தான் கிடைக்கும்.

*
எதில் உஷாராக இருக்கவேண்டும்?

பதிவேற்ற இருக்கும் வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் யூடியூப் தரும் ஆடியோ ஸ்வேப் வசதியை பயன்படுத்தக் கூடாது. காரணம் அந்த ஆடியோ ஸ்வேப் வசதியைப் பயன்படுத்தும் வீடியோவுக்கு காட்டப்படும் விளம்பரங்களுக்கான வருமானம் உங்கள் கணக்கில் வந்து சேராது. மாறாக அது கூகிள் கணக்கில்தான் போய் சேரும்.

*
பணம் அதிகமாக சம்பாதிக்கும் விஷயங்கள் எவை?

சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தல வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள் போன்றவை அதிகமாக பணம் சம்பாதிக்க பயன்படும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets