உங்கள் வருகைக்கு நன்றி

கொண்டாட்டம் திண்டாட்டமாகி விடும்.

புதன், 31 அக்டோபர், 2018

பண்டிகைகள் தித்திக்க, திட்டமிடல். கீழ், நடுத்தர மக்களுக்கு சிறுசேமிப்பு என்பது, மிகவும் அவசியம். கடன் வாங்காமல் இருப்பது தான், முதல் சேமிப்பு. வரும் வருமானத்தில் குடும்பம் நடத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வது தான் முக்கியம்.கூடிய வரை, கடன் வாங்காமல் எப்படி சமாளிக்க முடியும் என்பதை பார்க்க வேண்டுமே தவிர, கடன் வாங்கி முழிக்கக் கூடாது.அது, தேவையற்ற மன உளைச்சல், நெருக்கடி, கடனை அடைப்பதற்காக, குறுக்கு வழியில் பணம் ஈட்டும் எண்ணங்களுக்கு வழி வகுக்கும். எனவே, கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இப்போது அரசு அலுவலகங்கள், சிறு சிறு தனியார் நிறுவனங்களில், ஊழியர்கள் ஒரு குழுவாக சேர்ந்து, 'பண்ட்' பிடிக்கின்றனர். அவர்களுக்குள்ளேயே கடன் கொடுத்து, அந்த சேமிப்பை பெருக்குகின்றனர். இந்தத் திட்டத்தில் இணைந்து, பண்டிகை போன்ற காலங்களில் வெளியே கடன் வாங்காமல் தவிர்க்க முடியும். பண்டிகைகள் என்பது, ஆண்டு தோறும் வரும் செலவினம். அதை, முன்கூட்டியே தீர்மானித்து, வழி செய்து கொள்ள வேண்டும். அதேபோல், சில நேரங்களில் உபரியாக கிடைக்கும் பணம், வருமானத்தை செலவழிக்காமல் சேமிக்க வேண்டும். உதாரணத்திற்கு, அதிலிருந்து, சில ஆயிரம் ரூபாய் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். அதை எடுத்து, 'ஜாலி'யாக செலவு செய்யக் கூடாது.அந்தப் பணத்தை, தனியாக எட்த்து வைப்பது தான் புத்திசாலித்தனம். அத்தியாவசிய செலவான கல்விக் கட்டணம்,   பண்டிகை காலங்களுக்கு, அந்தப் பணத்தை செலவிடலாம். சிறு சேமிப்பு என்பது, அந்த நேரத்தில் ரொம்ப சின்னதாக இருக்கும். ஆனால், முதிர்வடையும் போது,  மலைப்பான தொகையாக தெரியும். உறவும், நட்பும் எல்லா காலகட்டத்திலும் உதவி செய்வர் என்று எதிர்பார்க்கக் கூடாது. எந்த வேலையிலும், உத்தரவாதமும் கிடையாது என்ற நிலையில், சுய சம்பாத்தியத்தில் சேமிப்பது அத்தியாவசியம். பண்டிகையை ஆடம்பரமாக கொண்டாட நினைத்தால், கொண்டாட்டம் திண்டாட்டமாகி விடும். எது நமக்கு சந்தோஷம் தருகிறதோ, அதை செய்ய வேண்டுமே தவிர, நம்மை சுற்றி இருப்பவர்களை ஈர்க்க வேண்டும் என்பது, கட்டாயம் இல்லை. சிக்கனமாக செலவு செய்தால், அடுத்த ஆண்டு கடன் வாங்காமல் கொண்டாடலாம்.

Read more...

உடற்பயிற்சியால் மட்டுமே சாத்தியம்.


முதியவர்களுக்கான உடற்பயிற்சி பற்றி கூறும், டாக்டர் வ.செ.நடராஜன்: உடலை உறுதியாக்கி, நோயிலிருந்து நம்மை மீட்கும் சக்தி, உடற்பயிற்சிக்கு உண்டு. குழந்தை முதல், முதியோர் வரை அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம். அதிலும், முதுமை பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி, உடற்பயிற்சியால் மட்டுமே சாத்தியம்.உடற்பயிற்சி செய்வதால், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு, உடற்பருமனை குறைக்கிறது; நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்தை தருகிறது. மாரடைப்பு வருவதை தடுப்பதுடன், எலும்பை வலிமை பெறச் செய்கிறது; மலச்சிக்கலை தடுக்கிறது. வலுவிழக்கும் சதைகளை உறுதி பெறச் செய்கிறது; தள்ளாடும் நடையை சீராக்க உதவுகிறது; மன நலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.முதியவர்கள், தங்கள் உடல் நலம், பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலையை மனதில் கொண்டு, உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சியை செய்யலாம். தினமும், 3 - 5 கி.மீ., நடப்பது நல்லது அல்லது 45 நிமிடங்கள் வரை, உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து, 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், இடைவெளி விட்டு, உடற்பயிற்சி செய்யலாம். நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் கைத்தடி, வாக்கரை உபயோகப்படுத்தி, நடைபயிற்சி செய்யலாம்.உணவு உட்கொள்வதற்கு முன்பே, உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலையில் திறந்த வெளியில் உடற்பயிற்சி செய்வது நல்லது. பெண்கள் வீட்டிலேயே உட்கார்ந்தபடி, தரையில் படுத்த படி செய்யலாம். கண் பார்வை குறைஉள்ளவர்கள், பக்கவாதம் மற்றும் மூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருக்கையிலேயே, உடம்பின் மேற்பகுதிக்கு மட்டும் உடற்பயிற்சி செய்வது நல்லது.தொடர்ந்து படுத்துக் கிடப்பவர்களுக்கு, படுக்கை புண், நெஞ்சில் சளி கட்டுதல், எலும்பு வலிமை இழத்தல், மலச்சிக்கல், மனச்சோர்வு போன்றவை வரலாம். இதை தடுக்க, தினமும் காலையிலும், மாலையிலும் பிறர் உதவியுடன், சிறிது நேரமாவது வீட்டிற்குள்ளேயே நடப்பது அவசியம். உடல் ரீதியாக தொல்லை, சற்று அதிகமாக இருந்தால், இயன்முறை சிகிச்சை நிபுணரின் உதவியுடன், உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.முதுமைக்கு ஏற்ற, 'டானிக்' உடற்பயிற்சியே. செலவுகள் ஏதுமில்லை; பக்கவிளைவும் இல்லை. ஆனால், பலன்கள் ஏராளம். அதை தினமும் கடைபிடித்து, முதுமைக்கு விடை கொடுங்கள். நம்மை நோயின்றி நிம்மதியாக வைத்திருக்கும்.

Read more...

ஊதுவத்தி, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி


ஊதுவத்தி, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி தயாரித்து விற்பனை செய்து வரும், மதுரையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் விஜயலட்சுமி: ஊதுவத்திக்கு ஏழு வகையான மூலப் பொருட்கள் தேவை. அனைத்தும், 'கெமிக்கல்' விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். குறைந்தபட்சம் கிலோ அளவுக்குத் தான் கொடுப்பர்.பெரும்பாலும் இந்த மூலப் பொருட்களை, தரம் வாரியாகப் பிரித்து வைத்திருப்பர்; அதற்கேற்ப விலையும் வேறுபடும். பிசினசாகச் செய்ய விரும்புவோர், தரமான பொருட்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. ஊதுவத்திகளிலும், 'கோல்டு, சில்வர்' என, 'கிளிட்டர்' கலர்கள் வந்துவிட்டன.அதேபோல், ஒரே ஒரு, 'சென்ட்டை' மட்டும் உபயோகித்து செய்யலாம்; ஒன்றுக்கு மேலான, 'சென்ட்' வகைகளைக் கலந்தும் செய்யலாம். இப்போது ஆயிரக்கணக்கான, 'சென்ட்' வகைகள் வந்துவிட்டன. மல்லிகை, மரிக்கொழுந்து, 'சென்ட்'டுகளின் விலை கொஞ்சம் அதிகம். 2 கிலோ ஊதுவத்திகள் செய்ய, 120 - 150 ரூபாய் வரை முதலீடு தேவை. குச்சிகளின் எண்ணிக்கையையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.'கம்ப்யூட்டர்' சாம்பிராணிக்கு, 10 வகையான மூலப் பொருட்கள் தேவை. வாசனை எதுவும் கலக்க மாட்டோம். சாம்பிராணியின் வாசம் தான், இதில் ஸ்பெஷல். மூலிகைகள் கலந்த, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி தான், இப்போது, 'ட்ரெண்டில்' இருக்கிறது. உதாரணத்துக்கு வேப்பிலை, துளசி என, நம் தேவைக்கேற்ப மூலிகைகளைக் கலந்து செய்யலாம்; இதற்கு, 120 ரூபாய் முதலீடு தேலைப்படும்.விரல் தடிமன் அளவு கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கான, 'மோல்டு'கள் கடைகளில் கிடைக்கும். 'கப்' வடிவ மோல்டு வேண்டுமானால், பட்டறையில் ஆர்டர் கொடுத்து செய்து தான் வாங்க வேண்டும். ஊதுவத்திகளைப் பொறுத்தவரை, போடுகிற முதலீட்டைப் போல, இரு மடங்கு லாபம் எடுக்க முடியும்.'சென்ட்' கலக்காமல் வெறும் ஊதுவத்திகளை மட்டும் தயாரித்து, மொத்த வியாபாரக் கடைகளுக்கு விற்பனைக்கு கொடுக்கும் வாய்ப்பும் உண்டு. 'கம்ப்யூட்டர்' சாம்பிராணியில், இரு மடங்கு லாபம் கிடைக்கும். சாதாரண சாம்பிராணியா, மூலிகை கலந்த ஸ்பெஷல் சாம்பிராணியா என்பதைப் பொறுத்து, விலையில் மாற்றம் செய்யலாம். அட்டைப் பெட்டிகளில் அடுக்கி, சாம்பிராணியை ஏற்றிவைக்கும் குட்டித் தட்டு போன்றவற்றுடன் கொடுக்கலாம். வெறுமனே சாம்பிராணிகளை, 'கவரில் பேக்' செய்தும், கடைகளில் மொத்தமாகக் கொடுக்கலாம்.நாம் வாங்கும் சாம்பிராணி, சில நேரம் ஏற்றி வைத்ததும் உதிர்ந்து போவதைப் பார்த்திருப்போம். கலவை நுணுக்கம் தெரியாமல் செய்யும் போது தான் அப்படி ஏற்படும். அதற்கும், வாசனை போகாமல் இருப்பதற்கான, சூட்சுமங்கள் பயிற்சியில் கற்றுத் தரப்படும். சென்னை மற்றும் மதுரையில், ஒரே நாள் பயிற்சியாக, 800 ரூபாய் கட்டணத்தில், ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்க கற்றுக் கொடுக்கிறேன்.

Read more...

பல தரப்பட்ட பொடி வகைகளை தயாரித்து விற்கலாம்.

திங்கள், 15 அக்டோபர், 2018


பலதரப்பட்ட பொடி வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும், கோவையைச் சேர்ந்த சுகன்யா செல்வராஜ்: என் உறவினரின் பெண் படித்த பள்ளியில் நடந்த, உணவு கடை விழாவில் வைப்பதற்காக, என் மாமியார், வீட்டில் தயாரித்த பொடி வகை களை, பிளாஸ்டிக் கவர்களில் நிரப்பி எடுத்துச் சென்றாள். மாலை வந்தவள், ஒரு சில மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும், சுவை, வாசனை, நிறம் நன்றாக உள்ளதாக அனைவரும் பாராட்டியதாகவும், உற்சாகத்துடன் சொல்ல, அது எனக்கு ஆச்சரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது.எந்தெந்த பொடி வகைகளைத் தயாரிக்கலாம் என்பதை, மாமியாரிடம் ஆலோசித்து முடிவு செய்தேன். பருப்பு, பூண்டு, கடலை, முருங்கை, கறிவேப்பிலை, தேங்காய் மற்றும் எள் என, பல வகைப் பொடிகளையும், சாம்பார் பொடி, ரசப் பொடி, வத்தக்குழம்பு மசாலா, சிக்கன் - மட்டன் மசாலா என சைவ, அசைவ உணவுப் பொடிகளையும் தயாரித்தேன்.என் மகன், 'கிராண்ட்மாஸ் குட்ஸ்' என, பெயர் சூட்டி மெருகேற்றினான். சென்னை மற்றும் கோவையில் உணவுத் திருவிழாக்களில் கடை அமைத்தும், முகநுால் மற்றும் 'வாட்ஸ் ஆப்' மூலமும் விற்பனையை ஆரம்பித்தோம். சுவையைத் தக்கவைப்பது ஒரு பெரிய கலை; ஆரம்பத்தில் அது எனக்குப் பிடிபடவில்லை. மாமியாரிடம் ஆலோசனை கேட்டு, ஒரு சில மாதங்களில் சரியான விகிதத்தில் பொருட்களைச் சேர்க்கும் வித்தையை கற்றேன்.உணவுத் திருவிழாக்களில் கடைகள் அமைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப மாற்றங்களைச் செய்து, புது வகைகளை அறிமுகம் செய்கிறேன். உணவு கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், செயற்கை நிறமூட்டி சேர்க்காததால், மார்க்கெட் போட்டியில், எங்கள் பொடிகளை மக்கள் முந்த வைக்கின்றனர்.எந்த வகை பொடி என்பதை பொறுத்து, குறைந்தபட்சம், நான்கு மாதம் முதல், அதிகபட்சமாக, எட்டு மாதங்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும். ஊறுகாய் மற்றும் தொக்கு வகைகளையும் விரைவில் தயாரிக்க உள்ளோம்.உங்கள் கைகளில் ருசி இருக்கிறதா... வீட்டில் நேரம் இருக்கிறதா... பொடி, நொறுக்குத் தீனி, உணவு வகைகள் என்று ஆர்வமுள்ள களத்தைத் தேர்ந்தெடுங்கள், தைரியமாக முதல் அடியெடுத்து வையுங்கள்.தொடர்புக்கு:99655 20839

Read more...

மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா ?

வெள்ளி, 5 அக்டோபர், 2018


ஒவ்வொரு பெண்ணுக்கும், மாதவிடாய் நேர வலிகள் வேறுபட்டவை. அன்றாட வேலைகளை கூடச் செய் முடியாத அளவுக்கு இருக்கும்; அந்த நாட்களில் ஓய்வெடுப்பதும், சத்துமிக்க உணவை சாப்பிடுவதும் அவசியம். மூளையிலிருந்து உறுப்புகளுக்கு செய்திகளை எடுத்துச் செல்லும் வேதிப்பொருட்களான, 'ஹார்மோன்' மாற்றங்களால், மாதவிடாய் காலத்தில், உடல் பாரமாக இருப்பதாக உணர்வர். இந்த வேதிப் பொருட்களின் சமநிலையற்ற தன்மையால், மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு கவலை உணர்வு மேலோங்கி இருக்கும். சிலர் அதிக கோபத்துடனும், பதற்றத்துடனும் காணப்படுவர். மார்பகங்கள் வீங்கியிருப்பது போல தோன்றும்; வலியும் ஏற்படும். மேல் வயிறு பெரிதானது போல தோன்றும். அடிவயிறு பகுதியில் இழுத்துப் பிடிப்பது போன்ற வலி ஏற்படும். இந்த சிரமங்களால், மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யக் கூடாது என, பெண்கள் நினைக்கின்றனர். ஆனால், அப்போது சில உடற்பயிற்சிகளை செய்வது, நல்ல பலன் களை கொடுக்கும்.சாதாரணமாக, சைக்கிள் ஓட்டுவது நல்ல பயற்சி. அதுவும், 'ஜிம்'மில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி சைக்கிள் ஓட்டுவதால், தொடைப்பகுதி வலிமை அடையும். கைகளுக்கான பயிற்சிகளையும் செய்யலாம். 'கார்டியோ' உடற்பயிற்சிகளில் வகைப்படுத்தப்பட்டிருக்கும், 'சைக்கிளிங், ட்ரெட்மில்'லில் ஓடுவது போன்றவற்றை, 20 முதல், 40 நிமிடங்கள் வரை செய்யலாம். நடைபயிற்சியும், மிதமான ஓட்டமும் கூட உதவும். சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருக்கலாம். எனவே, வயிற்றுக்கான பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் உடற்பயிற்சிகள் செய்வதால், மூளையில், ஒருவித அமிலம் சுரந்து, வலியை உணரும் சக்தி குறையும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், மாதவிடாய் கால ரத்தப் போக்கு அதிகரிக்காது. ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தசைகள் வலிமையடைந்து, மாதவிடாய் காலச் சோர்வு குறைந்து, புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணரலாம்.
சுகப்பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் இருந்தும், சிசேரியன் என்றால், ஒரு வாரம் கழித்தும், உடற்பயிற்சிகள் செய்யலாம். உடல் செயல்பாட்டுகளின் அடிப்படையில், காலை வேளை தான், உடற்பயிற்சிக்கு ஏற்றது. சில பெண்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில், காலை நேரத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள், மாலையில் உடற்பயிற்சி செய்யலாம்.

பிசியோதெரபிஸ்ட், ரம்யா செந்தில்குமார்


Read more...

உலர் முருங்கை இலை, விதை விற்பனையில் வருமானம்.

வியாழன், 4 அக்டோபர், 2018


பிளேட்டோசென் சமரசம்: பி.டெக்., - எம்.பி.ஏ., முடித்த நான், பிலிப்பைன்ஸ் நாட்டில், அரசு சாரா அமைப்பின் இயக்குனராக இருந்த போது, விவசாயம், சுற்றுச்சூழல் என, நிறைய, 'புராஜெக்ட்' செய்தோம். அப்போது, வெளிநாடுகளில் முருங்கை இலைக்கு, அதிகத் தேவை இருப்பது தெரிய வந்தது.அதன்பின், இந்தியா திரும்பி, உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். அந்த நேரத்தில், ஓய்வு பெற்ற அப்பாவிடம், முருங்கைச் சாகுபடி பற்றி கூறியதும், ஏற்றுக் கொண்டார். நிறைய ஊர்களுக்குப் போய், முருங்கை விவசாயிகளைப் பார்த்துப் பேசியதில், இலை அறுவடைக்கு, செடி முருங்கை ஏற்றது என, தெரிந்தது.இது, மொத்தம், 40 ஏக்கர் நிலம்; நல்ல செம்மண். 10 ஏக்கரில் நெல்லி, 5 ஏக்கரில் நாட்டு ரக எலுமிச்சை, 15 ஏக்கரில் மாமரங்கள், 5 ஏக்கரில் செடி முருங்கை, 2 ஏக்கரில், முருங்கை விதைக்கு என விட்டு உள்ளோம். மீதி, 3 ஏக்கரை, முருங்கைச் சாகுபடிக்காகத் தயார் செய்து வைத்துள்ளோம். காய வைத்த முருங்கை இலையை எங்களிடம் இருந்து வாங்கி, ஜெர்மன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். 45 நாளுக்கு ஒருமுறை, இலை அறுவடை செய்யலாம். மழைக்காலங்களில் அறுவடை செய்ய மாட்டோம். அந்த வகையில், ஆண்டுக்கு, ஐந்து தடவை அறுவடை செய்யலாம். 1 ஏக்கர் செடி முருங்கையில், ஓர் அறுப்புக்கு, 4,000 - 4,500 கிலோ இலை கிடைக்கும்.மேலும், 1,000 கிலோ இலையைக் காய வைத்தால், 100 கிலோ உலர்ந்த இலை கிடைக்கும். ஆண்டுக்கு, 2,000 கிலோ உலர்ந்த இலை கிடைக்கிறது. 1 கிலோ, 130 ரூபாய் என, ஆண்டுக்கு, 1 ஏக்கர் மூலமாக, 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும். இடுபொருள், பராமரிப்பு, அறுவடை, போக்குவரத்து எல்லாம் சேர்த்து, 85 ஆயிரம் ரூபாய் செலவு போக, 1.50 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் வரும்; ஒரு முறை நடவு செய்தால், ஐந்து ஆண்டு வரை வருமானம் பார்க்கலாம்.தொடர்புக்கு: பிளேட்டோசென் சமரசம்: 95661 01102; சமரசம்: 94437 35902.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets