உங்கள் வருகைக்கு நன்றி

உடற்பயிற்சியால் மட்டுமே சாத்தியம்.

புதன், 31 அக்டோபர், 2018


முதியவர்களுக்கான உடற்பயிற்சி பற்றி கூறும், டாக்டர் வ.செ.நடராஜன்: உடலை உறுதியாக்கி, நோயிலிருந்து நம்மை மீட்கும் சக்தி, உடற்பயிற்சிக்கு உண்டு. குழந்தை முதல், முதியோர் வரை அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம். அதிலும், முதுமை பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி, உடற்பயிற்சியால் மட்டுமே சாத்தியம்.உடற்பயிற்சி செய்வதால், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு, உடற்பருமனை குறைக்கிறது; நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்தை தருகிறது. மாரடைப்பு வருவதை தடுப்பதுடன், எலும்பை வலிமை பெறச் செய்கிறது; மலச்சிக்கலை தடுக்கிறது. வலுவிழக்கும் சதைகளை உறுதி பெறச் செய்கிறது; தள்ளாடும் நடையை சீராக்க உதவுகிறது; மன நலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.முதியவர்கள், தங்கள் உடல் நலம், பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலையை மனதில் கொண்டு, உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சியை செய்யலாம். தினமும், 3 - 5 கி.மீ., நடப்பது நல்லது அல்லது 45 நிமிடங்கள் வரை, உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து, 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், இடைவெளி விட்டு, உடற்பயிற்சி செய்யலாம். நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் கைத்தடி, வாக்கரை உபயோகப்படுத்தி, நடைபயிற்சி செய்யலாம்.உணவு உட்கொள்வதற்கு முன்பே, உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலையில் திறந்த வெளியில் உடற்பயிற்சி செய்வது நல்லது. பெண்கள் வீட்டிலேயே உட்கார்ந்தபடி, தரையில் படுத்த படி செய்யலாம். கண் பார்வை குறைஉள்ளவர்கள், பக்கவாதம் மற்றும் மூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருக்கையிலேயே, உடம்பின் மேற்பகுதிக்கு மட்டும் உடற்பயிற்சி செய்வது நல்லது.தொடர்ந்து படுத்துக் கிடப்பவர்களுக்கு, படுக்கை புண், நெஞ்சில் சளி கட்டுதல், எலும்பு வலிமை இழத்தல், மலச்சிக்கல், மனச்சோர்வு போன்றவை வரலாம். இதை தடுக்க, தினமும் காலையிலும், மாலையிலும் பிறர் உதவியுடன், சிறிது நேரமாவது வீட்டிற்குள்ளேயே நடப்பது அவசியம். உடல் ரீதியாக தொல்லை, சற்று அதிகமாக இருந்தால், இயன்முறை சிகிச்சை நிபுணரின் உதவியுடன், உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.முதுமைக்கு ஏற்ற, 'டானிக்' உடற்பயிற்சியே. செலவுகள் ஏதுமில்லை; பக்கவிளைவும் இல்லை. ஆனால், பலன்கள் ஏராளம். அதை தினமும் கடைபிடித்து, முதுமைக்கு விடை கொடுங்கள். நம்மை நோயின்றி நிம்மதியாக வைத்திருக்கும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets