உங்கள் வருகைக்கு நன்றி

வாகன காப்பீடு.

சனி, 19 ஜூன், 2021

இந்த கொரோனா நேரத்தில் பொது போக்கு வரத்து முடங்கியுள்ளதாலும், அதிக தொற்றுக்கு வாய்ப்பு இருப்பதாலும், தனியார் தங்கள் வாகனங்களைத் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இதனால் விபத்து அபாயமும், நிறுத்தியுள்ள இடத்தில் திருட்டு அபாயமும் உள்ளது. விபத்தில் வாகனம்சேதமடைந்தால், அதற்கான இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் செய்துள்ள நிறுவனத்திடம் இருந்து பெறலாம்.அதற்கு முதலில் செய்ய வேண்டியது, விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவலை, முறைப்படி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். காவல் துறையும், இன்சூரன்ஸ் நிறுவனமும் தெரிவிக்கும் வரை, விபத்து நடந்த இடத்திலிருந்து வாகனங்களை அப்புறப்படுத்தக் கூடாது. அனுமதி கிடைத்த பிறகு வாகனங்களை எடுத்துச் சென்று பழுது பார்த்தால், அதற்கான தொகை கிடைக்கும்.ஒரு வேளை வாகனம் திருட்டு போய்விட்டது என்றாலும், உடனடியாக அந்த வாகனம் நிறுத்தியிருந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக திருட்டு போன வாகனம் குறித்த தகவலை, காப்பீடு செய்துள்ள நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.பின், வாகனம் திருடப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை, ஓட்டுனர் சான்று, வாகன பதிவுச் சான்று ஆகியவற்றை, காப்பீடு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். 90 நாட்களுக்கு பிறகும் வாகனம் கண்டுபிடிக்கப்படாவிட்டால், வாகனம் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவலை சான்றாக, காவல் நிலையத்திடம் பெற வேண்டும். அதை வைத்து விண்ணப்பித்தால் தான், 'கிளெய்ம்' நடைமுறைகளை காப்பீடு நிறுவனம் துவக்கும்.எனினும், இப்போது பல முன்னணி நிறுவனங்கள், மொபைல் போன் செயலி அல்லது இணையதளம் மூலம் உடனடியாக, 'ஸ்பாட் கிளெய்ம்' பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளன. விபத்து நடந்த இடத்தில் வாகனம் இருக்கும் நிலையை படமாக எடுத்து, 'அப்லோடு' செய்தால், கிளெய்ம் வழங்கும் நடைமுறையை, காப்பீடு நிறுவனம் துவக்கும். அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், 20 நிமிடங்களில் கூட காப்பீடு நிறுவனம், நம் வங்கிக் கணக்கிற்கு, தொகையை மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.எனவே, மோட்டார் வாகன இன்சூரன்ஸ், வாகனங்களுக்கு அவசியமானது மட்டு மின்றி, இந்த காலத்தில் மிகவும் அவசியமானது!

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ராமலிங்கம்: 


Read more...

ஒவ்வொரு குடும்பமும் அழகானது

சனி, 12 ஜூன், 2021

என் மகன் பள்ளியில் படித்த போது, ஒரு நாள் வந்து, 'அம்மா, என் நண்பன் தன் பிறந்த நாளை, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொண்டாடினான். அதில் நான் பங்கேற்றேன்; மகிழ்ச்சியாக இருந்தது. அதுபோல, என் பிறந்த நாளையும், அந்த நட்சத்திர ஓட்டலில் கொண்டாட வேண்டும்' என்றான்.'அதற்கு எவ்வளவு பணம் செலவாகும்?' எனக் கேட்டேன். '8,000 ரூபாய் ஆகும்' என்றான். அவனிடம் நான், 'அந்த பணத்தை நம் வீட்டில் வேலை பார்க்கும் அல்லது தெருவோரத்தில் சிரமமான முறையில் வாழ்க்கை நடத்தும் ஒருவரின் மகளுக்கோ அல்லது மகனுக்கோ கல்வி செலவுக்காக கொடுத்தால், ஓராண்டுக்கு அந்த பணம் உதவும். 'அதை நீ சில மணி நேரத்தில் ஆடம்பரமாக செலவழித்தால், அதனால் எந்த பயனும் இருக்காது' என்றேன்.மகனும் கேட்டுக் கொண்டான். எனவே, பணம் தொடர்பான விஷயங்களை குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள். வீட்டில் பணத்திற்கு என்ன கஷ்டம் இருக்கிறது; பணம் எப்படி செலவாகிறது; எவ்வளவு வருமானம் உள்ளது போன்ற விபரங்களை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.குழந்தைகளை உங்களுடன் சேர்த்து வீட்டு வேலைகளில் பழக்குங்கள். நிறைய பெற்றோர் வீட்டு வேலைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காமல் இருக்கின்றனர்; அது தவறு. செல்லமாக வளர்க்க வேண்டியது தான். அதற்காக, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சமையலில் சிறிய அளவில் உதவி போன்றவை கூட செய்யாமல் இருக்கக் கூடாது. குழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுக்கும் போது, அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு, தேவைப்பட்டால் தனியாக சமைத்து சாப்பிட முடியும்.என் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த போது, அவர்களை பார்த்துக் கொள்வதற்காக, வேலைக்கு சென்ற நான், மூன்று மணி நேரம் மட்டுமே பணியாற்றினேன். அதன் பிறகு, அவர்கள் பள்ளிக்கு சென்ற போது, ஐந்து மணி நேரம் பணியாற்றினேன். அவர்கள் வெளிநாடுகளில் படிக்க, பணியாற்ற சென்ற போது, 'ஓவர் டைமில்' நான் பணியாற்றினேன்.எனவே, வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப வேலை பார்க்க வேண்டும். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணின் பின்னணியிலும் ஒரு ஆண் இருப்பார். அவர் கணவராகவோ, மகனாகவோ, தந்தையாகவோ கூட இருக்கலாம். எனவே, ஆண்களை பெண்கள் மதிக்க வேண்டும்.ஒவ்வொரு குடும்பமும் அழகானது தான். அவர்களை போல இல்லையே என, ஒப்பிட்டு பார்க்காதீர்கள். நம் குடும்பத்தை அழகாக வைப்பது நம் கையில் தான் உள்ளது!

 

'இன்போசிஸ்' கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி:

 

Read more...

உங்கள் மொபைல் எங்கேயுள்ளது ?.

அனைவரும் மொபைல் போன் வைத்துள்ளோம். எல்லா இடங்களுக்கும் அவற்றை எடுத்துச் செல்கிறோம். அது தொலைந்து விட்டால் எப்படி கண்டு பிடிப்பது; அதில் உள்ள விபரங்களை அழிப்பது எப்படி?  நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக, 'ஸ்மார்ட் போனும், ஆப்'களும் மாறிவிட்ட நிலையில், அதன் பாதுகாப்பும் மிக அவசியமாகிறது.எனவே, ஸ்மார்ட் போனை பத்திரப்படுத்தி வைப்பதுடன், ஒருவேளை தொலைந்துவிட்டால் என்ன செய்யலாம் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பாக இருப்பதற்கு முயல வேண்டும். அப்படியும் பிரச்னைகள் ஏற்பட்டால், அதில் இருந்து வெளியில் வருவதற்கும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.நாம் ஆசை ஆசையா வாங்கிய ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டதா... கவலை வேண்டாம்; கண்டுபிடித்து விடலாம்.முதலில் போனை வாங்கியவுடன், போனின், ஐ.எம்.இ.ஐ., எண்ணை தெரிந்து கொள்ளணும். போனில், '*#06#' என்று டைப் செய்து டயல் செய்தால், போனின் ஐ.எம்.இ.ஐ., எண் வெளிப்படும்; அதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து, அந்த ஸ்மார்ட் போனில் நமக்கான, 'இ - மெயில்' முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் அக்கவுன்ட் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.போன் தொலைந்து போனால், அந்த அக்கவுன்ட் மூலம் நம் போன் எங்குள்ளது என, தெரிந்து கொள்ள முடியும். அதோடு, அதை, 'லாக்' செய்யவும் முடியும்; அதிலுள்ள தகவல்களை அழிக்கவும் முடியும்.எனவே, போனின் மாடல் எண், ஐ.எம். இ.ஐ., எண், போன் அக்கவுன்டுக்கான இ - மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் போன்ற வற்றை மறந்து விடாமல் இருக்க, பத்திரமாக எங்கேனும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.நம் போன் காணாமல் போனால்android.com/devicemanager ' அல்லது https://findmymobile.samsung.com/' என்ற 'வெப்சைட் லிங்க்கு'கள் மூலம் கண்டுபிடித்து விட முடியும்.இந்த இணைய தளத்திற்கு சென்று, நம், 'ஜி - மெயில்' முகவரி மற்றும் 'பாஸ்வேர்டு' மூலம் 'லாகின்' செய்து கொள்ள வேண்டும். இப்போது கிடைக்கும் திரையில், 'ரிங், லாக், எரேஸ்' என, மூன்று விபரங்கள் இருக்கும்.'ரிங்' என்ற விபரத்தைகிளிக் செய்தால், ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி செய்து எங்கிருக்கிறது என, கண்டறியலாம்.'லாக்' ன்ற விவரத்தை கிளிக் செய்தால், நம் மொபைல் லாக் ஆகும்படி செய்து விடலாம். 'எரேஸ்' என்ற விவரத்தை கிளிக் செய்தால், நம் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி செய்து கொள்ளலாம்.முக்கியமாக, நம் போன் தொலைந்து விட்டால், போன் தொலைந்த அடுத்த நிமிடம் கம்ப்யூட்டர் மூலம் நம் இ - மெயில், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிட வேண்டும்.      'காம்கேர்' கே.புவனேஸ்வரி:

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets