உங்கள் வருகைக்கு நன்றி

வருமானம் தரும் கோதுமைப் புல் பொடி!

வெள்ளி, 31 டிசம்பர், 2021

வீட்டுத் தோட்டம் அமைத்து கொடுப்பது, பசுமைக் குடில் போட்டுத் தர்றது, பூங்கா உருவாக்குறது, சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது என, பல வேலைகளைப் பார்த்தேன்.ஒரு கட்டத்தில், மனதில் வெறுப்பு ஏற்பட்டது. இந்த வருமானத்தை நம் ஊரிலேயே சம்பாதிக்கலாம் என தோன்றி, வேலையைத் துாக்கிப் போட்டு விட்டு ஊருக்கு வந்து விட்டேன்.இங்கு வந்ததும், விவசாயம் செய்யப் போறேன்னு சொன்னதும், வீட்டுல கொலை வெறியாகிட்டாங்க; நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எதையும் கண்டுக்காம என் முடிவில் தெளிவாக இருந்தேன்.திண்டுக்கல்லை விட்டு வெளியேறி, வட மாநிலங்களுக்குப் போயிட்டேன். ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள்ல இருக்கிற மக்கள், கோதுமை ஜூஸ் குடிப்பதைப் பார்த்தேன்; அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவர்களிடம் விசாரித்ததில், நம் ஊரில் டீ குடிப்பது போல, அங்கு கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பது வழக்கம் என தெரிந்தது. உடனே அதைப் பற்றிய தகவலைத் தேட ஆரம்பித்ததில், அது உடம்பு ஆரோக்கியத்துக்கு நல்லது என்று தெரிந்தது.

இரண்டு கிலோ கோதுமை விதையுடன் திண்டுக்கல் திரும்பினேன். கோதுமைப் புல் வளர்த்து, அதைப் பொடி செய்து, பாட்டிலில் அடைத்து விற்கப் போறேன்னு சொன்னதும், மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கோதுமைப் புல் சாகுபடி செய்வதில் முனைப்பாக இறங்கினேன். எங்களுக்குச் சொந்தமான, 50 சென்ட் நிலத்தை உழுது பாத்தி பாத்தியாகத் தயார் செய்தேன். ௧ கிலோ கோதுமையை விதைத்தால், 3 கிலோ புல் கிடைக்கும்.
அதை வெட்டி, காய வைத்து அரைத்து பொடியாக்கினால், 100 முதல் 150 கிராம் வரை கிடைக்கும். மறுபடியும் அந்தப் பொடியை காய வைத்து பாட்டிலில் அடைத்து, விற்பனைக்கு அனுப்புகிறேன்.தினமும், 30 முதல் 40 பாட்டில் வரை விற்பனையாகிறது. சராசரியாக, 30 பாட்டில் வீதம், 10 ஆயிரத்து 470 ரூபாய் வருமானம் கிடைக்கும். சில சமயம் விற்பனையாகாமலும் இருக்கும்.
அந்த வகையில் மாதக் கணக்குப் பார்த்தால், 20 நாட்களுக்கு, 2 லட்சத்து 9 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்கும். அதில், செலவு 70 ஆயிரம் ரூபாய் ஆகி விடும். அதுபோக, 1 லட்சத்து 39 ஆயிரத்து 400 ரூபாய் லாபமாக கிடைக்கும்.நாம் அருகம்புல் ஜூஸ் குடிப்பது போல், வட மாநிலத்தில் கோதுமை புல் ஜூஸ் குடிப்பது நமக்கு லாபத்தை ஏற்படுத்துகிறது.தொடர்புக்கு:97878 87288

கோதுமைப் புல் வளர்த்து அதை அரைத்துப் பொடியாக்கி, 'அமேசான்' வாயிலாக விற்பனை செய்து வரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார்:

Read more...

வீட்டை இப்படி பாதுகாக்க

 மழைக் காலத்தில் வீட்டின் உட்புற சுவர்களில் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். வெளிப்புறச் சுவர் நேரடியாக மழை நீரில் நீண்ட நேரம் படும்போது, அது சுவர்களில் ஈரப்பதத்தை ஏற்படுத்தும். வெளிப்புற பூச்சு வேலை, பெயின்டிங்கின் தரம் மற்றும் வேலைப்பாடு மோசமாக இருந்தால், அது உள்சுவர்களின் ஈரப்பதத்துக்கு வழிவகுக்கும்.

நீரைத் தடுக்கும் பூச்சு செய்யப்படாவிட்டால், தண்ணீர் கசியும்; இது சுவர்களிலும் ஈரப்பதத்தை ஏற்படுத்தும்.ஒரு வீடு; அதனுள்ளே தண்ணீர் தேங்கவில்லை; ஆனால், வெளியே வீட்டைச் சுற்றி ஓரடிக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்நிலையில், அந்த வீட்டின் அடித்தளத்தில் உள்ள செங்கற்களில் நீர் ஊறும். அதன் தொடர்ச்சியாக அதன் மேலுள்ள செங்கற்களிலும் நீர் ஏறி, ஊறும்; இதை, 'கேப்பிலரி' என்கிறோம்.
இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளாமலிருக்க, அடித்தளத்தில் கான்கிரீட்டுடன், 'வாட்டர் ப்ரூபிங்' ரசாயனத்தைக் கலந்து, செங்கற்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் போடுவதன் வாயிலாக, ஈரப்பதம் தங்குவதைத் தவிர்க்கலாம். வெளிப்புறச் சுவரில் சிறிய விரிசல்கள் இருந்தாலும், அது சுவரில் ஈரப்பதத்துக்கு வழிவகுக்கும்; இதுவும் பூஞ்சையை உருவாக்கும்.
ஈரப்பதம் காரணமாக உருவான பூஞ்சையை, மழைக்காலம் முடிந்த பின் உப்புத் தாள் பயன்படுத்தி தேய்க்கலாம்; அதன்பின் மறுபடியும் பெயின்ட் அடித்துக் கொள்ளலாம். வெளிப்புறச்சுவரில், 'டேம்ப் ஷீத் ப்ரைமர்' என்ற பூச்சை, முதல் பூச்சாக பூச வேண்டும். கட்டடம் கட்டி முடித்ததும், வெளிப்புறத்தில் 'ஒயிட் சிமென்ட்'டால் பூசுவர். அதற்கு பதில் டேம்ப் ஷீத் ப்ரைமரை அடித்தால், கட்டடத்தை ஈரம் ஊடுருவாமல் பாதுகாக்கும்
இன்று பெரும்பாலான வீடுகளின் சுவர்களில் விரிசல்களைப் பார்க்கிறோம். அந்த விரிசல்களின் வழியே தண்ணீர் ஊடுருவி, சுவர்களில் ஈரப்பதம் தேங்கும். ஹார்டுவேர் கடைகளில், 'க்ராக் பில்லிங் பேஸ்ட்' என்றே பிரத்யேகமாக கிடைக்கும்; சிறிய விரிசல்களில் இந்த பேஸ்ட்டை வைத்து நிரப்புவர். சற்றே பெரிய விரிசல் என்றால், சிமென்ட்டும், நீரும் கலந்த கலவையான சிமென்ட் பால் கலவையை சிறிய குழாய் வழியே விரிசலுக்குள் செலுத்துவர். அது உள்ளே பயணித்து நிரம்பி, விரிசல்களை மூடும். வீட்டை இப்படி பாதுகாக்கலாம்!

சென்னையைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் எஸ்.சதீஷ்குமார்

Read more...

வயதான பின் வருந்துவதில் பயனில்லை.

செவ்வாய், 27 ஜூலை, 2021

ஓய்வுபெற்ற பின் நிம்மதியாக இருக்க, இளமையிலேயே முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பாதுகாப்பான இடத்திற்கு நகர்வது என்பது தான். அலைந்து, திரிந்து வருகிறீர்கள். சற்று ஓய்வெடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். ஒரு கட்டடத்தின் கீழ் அமர்கிறீர்கள். அந்த கட்டடம் எப்போது வேண்டுமானாலும் விழும் அளவில் உள்ளது. அங்கே நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியுமா? அதுமாதிரி தான், ஒவ்வொரு மனிதரின் ஓய்வுகாலமும். ஆணோ அல்லது பெண்ணோ, 60 வயதுக்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பொருளாதார கஷ்டங்களை அனுபவிக்காமல், பாதுகாப்பான மனநிலையில் இருப்பது தான் நிம்மதியான ஓய்வு காலத்திற்கு அடிப்படை.ஆனால், ஓய்வு காலத்தை நெருங்குபவர்களின் நிலையும், இன்னும் சில ஆண்டு களில் ஓய்வுபெறப் போகிறவர்களின் நிலையும் அப்படியா இருக்கிறது? அரசுத்துறை ஊழியர்களுக்காவது 'பென்ஷன்' கிடைத்து விடுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு, பென்ஷன் என்று எதுவும் கிடையாது. பி.எப்.,பில் சேர்த்து வைத்த சில லட்சங்களை, வாரிசுகளின் திருமணத்திற்கு அல்லது பிற குடும்ப செலவுகளுக்கு செலவழித்து விட்டு, வெறும் கையுடன் தான் பெரும்பாலானோர் இருப்பர். வயதான காலத்தில், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் நேரத்தில் மனைவியுடன், கையில் சொற்ப பணத்துடன், மனதுக்கு பிடிக்காத வேலையுடன் தான் எஞ்சிய காலத்தை ஓட்ட வேண்டிய நிலை இருக்கும்.வாழ்நாள் முழுக்க, குடும்பத்திற்காக உழைத்து விட்டு, 60 வயதுக்கு பின் தனக்கும், தன் மனைவிக்கும் போதிய பணமில்லாமல், வாரிசுகளை நம்பி பிழைக்க வேண்டிய நிலை தான் பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது. அப்போது தான் புரியும், 'இளம் வயதிலேயே, கை நிறைய சம்பாதிக்கும் காலத்திலேயே, ஓய்வுக்கு பிறகு நிம்மதியாக இருக்க, போதிய பணத்தை முதலீடு செய்திருக்காமல் விட்டு விட்டோமே' என்று. அந்த எண்ணம், 60 வயதுக்கு பிறகு, 60ஐ நெருங்கும் போதோ வந்து பயனில்லை. இளம் வயதிலேயே வர வேண்டும்; ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு காலத்திற்கான பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். பொதுவாக இளம் வயதில் தான் நாம் அதிகமாக சம்பாதிப்போம். அப்போதே ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வுக்கு பிறகு தேவைப்படும் செலவுகளுக்காக ஒதுக்க வேண்டும். இதை மொத்தமாக செலவு செய்ய முடியாது; சிறுக சிறுக செய்ய வேண்டும். ஓய்வுக்கு பின், எவ்வளவு பணம் மாதந்தோறும் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப சேமிப்பு, முதலீடு போன்றவற்றை செய்யவேண்டும்.இப்படி செய்தால், முதிய காலத்தில் பணத்திற்காக, பிறரிடம் போய் நிற்க வேண்டிய தேவை ஏற்படாது!

Read more...

எதுவாக இருந்தாலும் யோசிக்கனும்!.

வியாழன், 8 ஜூலை, 2021

ஒரு பொருளை வாங்குவதற்கு முன், அதை வாங்கணுமா என்று பல முறை யோசிப்பது சிக்கனத்திற்கான முக்கியமான வழி. ஆனால், அந்த யோசனை நம்மை வாங்க விடாமல் செய்யுமா என்பது சந்தேகம் தான்.

நாம் வாங்க விரும்பும் பொருட்கள் தொடர்பான தகவல்களும், விளம்பரங்களும் நம் ஆசையை தொடர்ந்து துாண்டிக் கொண்டே இருக்கும். 'ஆசையை, இன்னும் ஏழு நாட்களுக்கு தள்ளிப் போடுவோம்' என மனதில் உறுதியாக நினைத்து தள்ளி போட வேண்டும். ஒரு வாரத்திற்கு அப்படி தள்ளிப் போடும் போது, நாம் விரும்பிய, அதிக தேவையற்ற பொருள் மீதான ஆசை குறைந்திருக்கலாம் அல்லது மிகவும் அதிகரித்திருக்கலாம்.
மிகவும் அதிகரித்திருக்கும் பட்சத்தில், அந்த பொருளை வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலான நேரங்களில் நாம் வாங்க நினைத்த பொருள், அதிக முக்கியத்துவம் இல்லாத பொருளாக இருந்தால், அந்த ஏழு நாட்களில் நம் ஆசை குறைந்து விடும். இந்த முறை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட முறை. எனவே, பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என நினைப்பவர்கள், இந்த முறையை பின்பற்றலாம்.ஆசைப்பட்ட பொருளை ஏழு நாட்கள் கழித்து வாங்கலாம் என்று முடிவெடுத்து விட்டால், அந்த இடைவெளி நாட்களில், கிரெடிட் கார்டை இந்த பொருள் வாங்க பயன்படுத்தி தான் ஆக வேண்டுமா;  இ.எம்.ஐ., கட்ட சிரமமாக இருக்குமே என்பன போன்ற மன ஓட்டங்கள் அதிகரித்து, ஏழு நாட்கள் முடிவில், அந்த பொருள் மீதான ஆசையை அறவே துண்டித்து விடும்.அதுபோல, மற்றொரு பொருள் மீதான ஆசை, அதன்பின் வர வாய்ப்பு உள்ளது. முந்தைய பொருளை, கையில் பணம் கிடைக்கும் போது வாங்கிக் கொள்ளலாம் என தள்ளிப் போடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி நாட்களை தள்ளிப் போடுவதால், நல்ல பொருட்களை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு கிடைக்கும். உதாரணமாக, பிரபலமான பிராண்ட் ஒன்றின் பொருளை, அதிக விலைக்கு வாங்க முடிவு செய்திருப்பீர்கள். அதுபோன்ற பொருள், விலை குறைவாகவும் கிடைக்கும். இப்படி தள்ளிப் போடுவதால், விலை குறைந்த பொருளை வாங்கவும் நம்மால் முடியும். இதனால் வீணாக கூடுதல் பணம் கொடுப்பது குறைந்து விடும்.முக்கியமாக, 'ஆபர்' போட்டுள்ளனர் என்பதற்காக, பார்த்த உடனே வாங்க துடிக்க கூடாது. அந்த எண்ணத்தை தள்ளிப் போட்டால், ஏழு நாட்களில் அந்த ஆபர் மீதான ஆர்வம் நம்மிடம் குறைந்திருக்கும். இதுபோன்ற 'டெக்னிக்'குகளை பயன்படுத்தி, வீணான பொருட்களை வீட்டில் சேர்க்காமல் இருக்க முடியும்!

Read more...

வாகன காப்பீடு.

சனி, 19 ஜூன், 2021

இந்த கொரோனா நேரத்தில் பொது போக்கு வரத்து முடங்கியுள்ளதாலும், அதிக தொற்றுக்கு வாய்ப்பு இருப்பதாலும், தனியார் தங்கள் வாகனங்களைத் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இதனால் விபத்து அபாயமும், நிறுத்தியுள்ள இடத்தில் திருட்டு அபாயமும் உள்ளது. விபத்தில் வாகனம்சேதமடைந்தால், அதற்கான இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் செய்துள்ள நிறுவனத்திடம் இருந்து பெறலாம்.அதற்கு முதலில் செய்ய வேண்டியது, விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவலை, முறைப்படி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். காவல் துறையும், இன்சூரன்ஸ் நிறுவனமும் தெரிவிக்கும் வரை, விபத்து நடந்த இடத்திலிருந்து வாகனங்களை அப்புறப்படுத்தக் கூடாது. அனுமதி கிடைத்த பிறகு வாகனங்களை எடுத்துச் சென்று பழுது பார்த்தால், அதற்கான தொகை கிடைக்கும்.ஒரு வேளை வாகனம் திருட்டு போய்விட்டது என்றாலும், உடனடியாக அந்த வாகனம் நிறுத்தியிருந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக திருட்டு போன வாகனம் குறித்த தகவலை, காப்பீடு செய்துள்ள நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.பின், வாகனம் திருடப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை, ஓட்டுனர் சான்று, வாகன பதிவுச் சான்று ஆகியவற்றை, காப்பீடு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். 90 நாட்களுக்கு பிறகும் வாகனம் கண்டுபிடிக்கப்படாவிட்டால், வாகனம் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவலை சான்றாக, காவல் நிலையத்திடம் பெற வேண்டும். அதை வைத்து விண்ணப்பித்தால் தான், 'கிளெய்ம்' நடைமுறைகளை காப்பீடு நிறுவனம் துவக்கும்.எனினும், இப்போது பல முன்னணி நிறுவனங்கள், மொபைல் போன் செயலி அல்லது இணையதளம் மூலம் உடனடியாக, 'ஸ்பாட் கிளெய்ம்' பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளன. விபத்து நடந்த இடத்தில் வாகனம் இருக்கும் நிலையை படமாக எடுத்து, 'அப்லோடு' செய்தால், கிளெய்ம் வழங்கும் நடைமுறையை, காப்பீடு நிறுவனம் துவக்கும். அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், 20 நிமிடங்களில் கூட காப்பீடு நிறுவனம், நம் வங்கிக் கணக்கிற்கு, தொகையை மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.எனவே, மோட்டார் வாகன இன்சூரன்ஸ், வாகனங்களுக்கு அவசியமானது மட்டு மின்றி, இந்த காலத்தில் மிகவும் அவசியமானது!

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ராமலிங்கம்: 


Read more...

ஒவ்வொரு குடும்பமும் அழகானது

சனி, 12 ஜூன், 2021

என் மகன் பள்ளியில் படித்த போது, ஒரு நாள் வந்து, 'அம்மா, என் நண்பன் தன் பிறந்த நாளை, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொண்டாடினான். அதில் நான் பங்கேற்றேன்; மகிழ்ச்சியாக இருந்தது. அதுபோல, என் பிறந்த நாளையும், அந்த நட்சத்திர ஓட்டலில் கொண்டாட வேண்டும்' என்றான்.'அதற்கு எவ்வளவு பணம் செலவாகும்?' எனக் கேட்டேன். '8,000 ரூபாய் ஆகும்' என்றான். அவனிடம் நான், 'அந்த பணத்தை நம் வீட்டில் வேலை பார்க்கும் அல்லது தெருவோரத்தில் சிரமமான முறையில் வாழ்க்கை நடத்தும் ஒருவரின் மகளுக்கோ அல்லது மகனுக்கோ கல்வி செலவுக்காக கொடுத்தால், ஓராண்டுக்கு அந்த பணம் உதவும். 'அதை நீ சில மணி நேரத்தில் ஆடம்பரமாக செலவழித்தால், அதனால் எந்த பயனும் இருக்காது' என்றேன்.மகனும் கேட்டுக் கொண்டான். எனவே, பணம் தொடர்பான விஷயங்களை குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள். வீட்டில் பணத்திற்கு என்ன கஷ்டம் இருக்கிறது; பணம் எப்படி செலவாகிறது; எவ்வளவு வருமானம் உள்ளது போன்ற விபரங்களை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.குழந்தைகளை உங்களுடன் சேர்த்து வீட்டு வேலைகளில் பழக்குங்கள். நிறைய பெற்றோர் வீட்டு வேலைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காமல் இருக்கின்றனர்; அது தவறு. செல்லமாக வளர்க்க வேண்டியது தான். அதற்காக, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சமையலில் சிறிய அளவில் உதவி போன்றவை கூட செய்யாமல் இருக்கக் கூடாது. குழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுக்கும் போது, அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு, தேவைப்பட்டால் தனியாக சமைத்து சாப்பிட முடியும்.என் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த போது, அவர்களை பார்த்துக் கொள்வதற்காக, வேலைக்கு சென்ற நான், மூன்று மணி நேரம் மட்டுமே பணியாற்றினேன். அதன் பிறகு, அவர்கள் பள்ளிக்கு சென்ற போது, ஐந்து மணி நேரம் பணியாற்றினேன். அவர்கள் வெளிநாடுகளில் படிக்க, பணியாற்ற சென்ற போது, 'ஓவர் டைமில்' நான் பணியாற்றினேன்.எனவே, வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப வேலை பார்க்க வேண்டும். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணின் பின்னணியிலும் ஒரு ஆண் இருப்பார். அவர் கணவராகவோ, மகனாகவோ, தந்தையாகவோ கூட இருக்கலாம். எனவே, ஆண்களை பெண்கள் மதிக்க வேண்டும்.ஒவ்வொரு குடும்பமும் அழகானது தான். அவர்களை போல இல்லையே என, ஒப்பிட்டு பார்க்காதீர்கள். நம் குடும்பத்தை அழகாக வைப்பது நம் கையில் தான் உள்ளது!

 

'இன்போசிஸ்' கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி:

 

Read more...

உங்கள் மொபைல் எங்கேயுள்ளது ?.

அனைவரும் மொபைல் போன் வைத்துள்ளோம். எல்லா இடங்களுக்கும் அவற்றை எடுத்துச் செல்கிறோம். அது தொலைந்து விட்டால் எப்படி கண்டு பிடிப்பது; அதில் உள்ள விபரங்களை அழிப்பது எப்படி?  நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக, 'ஸ்மார்ட் போனும், ஆப்'களும் மாறிவிட்ட நிலையில், அதன் பாதுகாப்பும் மிக அவசியமாகிறது.எனவே, ஸ்மார்ட் போனை பத்திரப்படுத்தி வைப்பதுடன், ஒருவேளை தொலைந்துவிட்டால் என்ன செய்யலாம் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பாக இருப்பதற்கு முயல வேண்டும். அப்படியும் பிரச்னைகள் ஏற்பட்டால், அதில் இருந்து வெளியில் வருவதற்கும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.நாம் ஆசை ஆசையா வாங்கிய ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டதா... கவலை வேண்டாம்; கண்டுபிடித்து விடலாம்.முதலில் போனை வாங்கியவுடன், போனின், ஐ.எம்.இ.ஐ., எண்ணை தெரிந்து கொள்ளணும். போனில், '*#06#' என்று டைப் செய்து டயல் செய்தால், போனின் ஐ.எம்.இ.ஐ., எண் வெளிப்படும்; அதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து, அந்த ஸ்மார்ட் போனில் நமக்கான, 'இ - மெயில்' முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் அக்கவுன்ட் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.போன் தொலைந்து போனால், அந்த அக்கவுன்ட் மூலம் நம் போன் எங்குள்ளது என, தெரிந்து கொள்ள முடியும். அதோடு, அதை, 'லாக்' செய்யவும் முடியும்; அதிலுள்ள தகவல்களை அழிக்கவும் முடியும்.எனவே, போனின் மாடல் எண், ஐ.எம். இ.ஐ., எண், போன் அக்கவுன்டுக்கான இ - மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் போன்ற வற்றை மறந்து விடாமல் இருக்க, பத்திரமாக எங்கேனும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.நம் போன் காணாமல் போனால்android.com/devicemanager ' அல்லது https://findmymobile.samsung.com/' என்ற 'வெப்சைட் லிங்க்கு'கள் மூலம் கண்டுபிடித்து விட முடியும்.இந்த இணைய தளத்திற்கு சென்று, நம், 'ஜி - மெயில்' முகவரி மற்றும் 'பாஸ்வேர்டு' மூலம் 'லாகின்' செய்து கொள்ள வேண்டும். இப்போது கிடைக்கும் திரையில், 'ரிங், லாக், எரேஸ்' என, மூன்று விபரங்கள் இருக்கும்.'ரிங்' என்ற விபரத்தைகிளிக் செய்தால், ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி செய்து எங்கிருக்கிறது என, கண்டறியலாம்.'லாக்' ன்ற விவரத்தை கிளிக் செய்தால், நம் மொபைல் லாக் ஆகும்படி செய்து விடலாம். 'எரேஸ்' என்ற விவரத்தை கிளிக் செய்தால், நம் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி செய்து கொள்ளலாம்.முக்கியமாக, நம் போன் தொலைந்து விட்டால், போன் தொலைந்த அடுத்த நிமிடம் கம்ப்யூட்டர் மூலம் நம் இ - மெயில், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிட வேண்டும்.      'காம்கேர்' கே.புவனேஸ்வரி:

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets