உங்கள் வருகைக்கு நன்றி

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்துக்கு அடிமையாகும் குழந்தைகள்

திங்கள், 24 செப்டம்பர், 2018

இயற்கையின் மீது பிடிப்பு உண்டாகும்!

சிறு குழந்தைகளை, திரையரங்குகள் மாதிரியான, கூட்டம் மிகுந்த இடங்களுக்கு அழைத்துச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அங்கிருக்கும் சத்தம் மற்றும் மனித நெருக்கடி குழந்தைகளுக்கு அசவுகரியத்தை அளிக்கும். மேலும், குழந்தைகளுக்கு நோய் தொற்று  ஏற்படும் அபாயம் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல, 'ஐஸ்கிரீம், சிப்ஸ்' உள்ளிட்டவற்றை பெற்றோர் சாப்பிடும் போது, இதைப் பார்க்கும் குழந்தையும், அதன் வாசத்தில் கிறங்க ஆரம்பிக்கும்; 'எனக்கும் வேணும்' என, நாக்கை நீட்டி கேட்கும். பெற்றோரும், குழந்தையின் நாக்கில் ஐஸ்கிரீமைத் தடவுவது, சிப்சை துாளாக்கி வாயில் திணிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்வர். இது போன்ற உணவுகளை சிறுவயதிலேயே சுவைக்கும் குழந்தைகள், கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அடிமையாகி விடுவர். விளைவு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்துக்கு வழிவகுக்கும்.
திரையரங்கிற்கு பதிலாக, சிறு வயது முதலே குழந்தைகளை,  பிரார்த்தனைக் கூடங்களுக்கு அழைத்துச் செல்வதால், அங்கிருக்கும் நல் அதிர்வுகள், குழந்தைகளை மேம்படுத்தும்; அவர்களை மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைக்கும்.
அதுமட்டுமல்லாமல், சினிமா உள்ளிட்ட, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றால் மட்டுமே, குழந்தைகளுக்கு அனுபவம் கிடைக்கும் என்ற தவறான எண்ணம், பெற்றோர் மத்தியில் இருக்கிறது.  ஆனால், உண்மை அதுவல்ல! வீட்டின் மொட்டை மாடியில், குழந்தைகளை உங்களின் கண்காணிப்பிலேயே விளையாட வைக்கலாம். 
இப்படி, மொட்டை மாடியில் குழந்தைகள் சிறிது நேரம், தங்களின் நேரத்தை செலவிடும் போது, ஆகாயம், பறவைகள்  உள்ளிட்டவற்றைப் பார்த்து ரசிப்பர்; இயற்கையின் மீது ஒருவித பிடிப்பு உண்டாகும். மாசு அதிகம் இல்லாத காலை நேரத்தில், வானிலையும் சிறப்பாக இருக்கும் போது, குழந்தைகளை அழைத்து, காலாற ஒரு நடை போகலாம்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை குழந்தைகள், இதன் மூலம் தெரிந்து கொள்வர். பரந்து விரிந்த இந்த உலகம் குறித்த புரிதல், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பிக்கும்!

Read more...

தன் தேவைகளை தானே செய்து பழக வேண்டும் ஏன் ?

செவ்வாய், 18 செப்டம்பர், 2018


நடுத்தர வயதிலிருந்தே, தன் தேவைகளை தானே செய்து பழக வேண்டும். ஏனெனில், திடீரென கணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், பின்னாளில் சிரமம் ஏற்படாததுடன், மற்றவர்களை சார்ந்திருக்காமல், தனியாக வாழும் தைரியத்தையும் ஏற்படுத்தும். இல்லையெனில், அவர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், முதிய மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீர் போல, வாழக் கற்றுக் கொள்வது நல்லது. வீட்டுக்கு வருவோரிடம், உங்கள் புராணத்தை பாடாமல், அவர்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். அது, அவர்களை உற்சாகப்படுத்தி, உங்களை அடிக்கடி காண வரச் செய்யும். பிரச்னை இல்லாத மனிதர்கள், உலகில் யாருமே இல்லை. எனவே, 'நான் என்ன பாவம் செய்தேனோ; எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்...' என, மற்றவர்களிடம் புலம்புவதை தவிர்க்க வேண்டும்.சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும், முதுமைக் காலத்தில் அவசியம். முடிந்த அளவுக்கு, குடும்பத்துடன் சுற்றுலா செல்வதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்களை, உயிருக்கு உயிராக நேசியுங்கள். உறவு கள் கைவிட்ட காலத்தில், நட்பு கைகொடுக்கும். உடலுக்கு ஏதாவது தொல்லை வந்துவிட்டால், பெரிதாக கற்பனை செய்து, அலட்டவும் கூடாது; அதே சமயம், அலட்சியப்படுத்தவும் கூடாது.மேலும், எந்த ஒரு டாக்டரிடமும் முழு நம்பிக்கை வைக்காமல், இவரிடமிருந்து அவர், அவரிடமிருந்து இவர் என மாறாதீர். தன் மறைவுக்குப் பின், யார் யாருக்கு, சொத்து போய்ச் சேர வேண்டும் என்பதை தெளிவாக, சாட்சிகள் முன்னிலையில் எழுதி வைப்பது மிக அவசியம். இதனால், பிற்காலத்தில் பிள்ளை கள், அவர்களின் துணை மற்றும் வாரிசுகளுக்கிடையே ஏற்படும் மோதல் தொல்லைகளைத் தவிர்க்கலாம். முதுமை காலத்தில் வசிக்கப் போகும் இடம், வீடு பற்றி ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளுங்கள். நல்ல உடல்நலம், தினமும் செய்யும் உடற்பயிற்சி, சத்தான உணவு, மன உறுதி, ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றோடு கொஞ்சம் பணமும் இருந்தால் போதும்... பலருக்கு புயலாக வரும் முதுமைக்காலம், உங்களுக்குப் பூங்காற்றாக வீசும்!

Read more...

சிறு துவக்கம், நிச்சயம் கைகொடுக்கும்.


விளையாட்டுப் பொருட்களை, விளையாடி முடித்த பின் எடுத்து வைக்க, ஒன்றாம் வயதிலிருந்தே, குழந்தையை பழக்க வேண்டும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க கற்றுக் கொடுத்தால், பொறுப்பு உணர்வும், நேர மேலாண்மையும் அவர்களுக்கு கைகூடும்.குழந்தைகளை, ஆறு, ஏழு மாதங்களில் இருந்தே, தின்பண்டங்கள், பொம்மைகளை மற்றவர்களுடன் பகிரும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்நாக்ஸ் பாக்சில் கூடுதலாக இரண்டு பிஸ்கெட், சாக்லேட் வைத்து, 'உன் ப்ரெண்டு யாராச்சும் கேட்டா, 'ஷேர்' பண்ணு' என்று சொல்லி அனுப்பலாம். எதிர்காலத்தில் உங்கள் குழந்தை தலைமைப் பண்புடன் விளங்க, இந்த சிறு துவக்கம், நிச்சயம் கைகொடுக்கும்.குழந்தைகளுக்கு, 2 வயதுக்குள், 'டாய்லெட் ட்ரெய்னிங்' கொடுப்பது அவசியம். சாப்பிடும் முன், விளையாடிய பின் கைகளைக் கழுவுவது,  இரு வேளை பல் துலக்குவது மற்றும் குளிப்பது என, ஆரோக்கிய விஷயங்களையும், வளர வளரக் கற்றுக் கொடுக்கலாம். மூன்று வயதுக்குப் பின், குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பு குறித்து கூறலாம். தினமும் அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுத்து, உண்டியலில் சேமிக்கச் சொல்லலாம்.அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு, பெற்றோர் அனுமதியுடன், சேமிப்புப் பணத்தில் இருந்து எடுத்து செலவிட அனுமதிக்கலாம். பணத்தின் மதிப்பை உணர்வதால், பார்க்கும் பொருட்களை எல்லாம் அடம் பிடித்து கேட்கும் பழக்கம் அவர்களை அண்டாது. குழந்தைகளின் வயதுக்கும், ஆர்வத்துக்கும் ஏற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுத்தால், ஒரு குட்டி ஜீனியசை உருவாக்க முடியும்.பத்து வயது குழந்தைகளுக்கு, 'ஓர் இடத்திலோ அல்லது யாரிடமோ பேசும்போது, நீ மட்டுமே பேசாமல், மற்றவர்கள் சொல்வதையும் உள்வாங்க வேண்டும்' என, வலியுறுத்த வேண்டும்.அதேபோல, குழந்தைக்கு அதுவரை தெரியாத விஷயம் பற்றிய பேச்சு வந்தால், 'அதெல்லாம் எனக்கு தெரியாது' என்று ஒதுங்காமல், புதிய விஷயங்களை கவனித்து கேட்கஅறிவுறுத்தலாம்.உணவு உண்ணும் போது சிந்தாமல், மிச்சம் வைத்து வீணாக்காமல் இருக்கப் பழக்கப்படுத்த வேண்டும்.பொது இடங்களில் சாப்பிடும்போது ஸ்பூன், போர்க், டவல் பயன்படுத்தினால் கடைபிடிக்க வேண்டிய, 'டேபிள் நாகரிகம்' மற்றும் மற்றவர்களின் அறைக்குச் செல்லும் முன், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியை கேட்கும் நாகரிகத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்.மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.அழகு, அறிவு,பொருளாதாரம் என, எதன் அடிப்படையிலும், அடுத்தவர்களின் மனம் புண்படும்படி தாழ்த்திப் பேசுவது தவறு என்பதை சொல்லி கொடுப்பதன் வாயிலாக, உங்கள் குழந்தையை மனித நேயத்துடன் வளர்த்தெடுக்கலாம்.


Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets