உங்கள் வருகைக்கு நன்றி

யூடியூப்பில் பணம் சம்பாதிப்பது எப்படி?

திங்கள், 28 செப்டம்பர், 2020

சமீபகால இளைஞர்களின் சுலபமான வேலைகளில் யூடியூப் சேனல் உருவாக்கமும் ஒன்று. மாடித்தோட்டம் அமைப்பது, செடி வளர்ப்பு முறைகள், சினிமா விமர்சனம், சமையல் குறிப்புகள், ஆடல்-பாடல்-நாடக பயிற்சிகள், மென்பொருள் மொழி வகுப்புகள், தொழில்வாய்ப்பு பயிற்சிகள், மீன்பிடி தொழில்நுட்பங்கள், படகு வாழ்க்கை முறைகள், கட்டிட வடிவமைப்பு திட்டங்கள், செல்லப்பிராணி வளர்ப்பு ஆலோசனைகள், மலிவு விலை சந்தை ரவுண்ட்அப், சுற்றுலா தலங்கள்.... என எத்தனையோ தலைப்புகளில், யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அதில் தினந்தோறும் புதுப்புது வீடியோக்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. விருப்பமான காட்சிகளை நம் கண்முன் கொண்டு வருவதால், மக்களும் அதை ரசிக்கிறார்கள். யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்கிறார்கள். இதனால் நமக்கு லாபம்தான், யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கும் லாபம்தான்.


ஆமாங்க....! யூடியூப் வீடியோக்களின் தரத்தை பொறுத்து, அதை பதிவேற்றிய, உருவாக்கிய சேனல்களுக்கு யூடியூப்பில் இருந்து வெகுமதி கொடுக்கப்படும். அதனால்தான், இளைஞர் பட்டாளம் கேமராவையும், மைக்கையும் கையில் ஏந்தியவாறு, சாலைகளில் உலா வருகிறார்கள். பிராங்க் கலாட்டா, கணவன்-மனைவி அன்பு சண்டைகள், குடும்ப உறவுகளின் பிரம்மாண்ட விழாக்கள், பாட்டி வைத்தியம், கிராமத்து சமையல், குழந்தைகளின் சுட்டித்தனம் என ரொம்ப எதார்த்தமான விஷயங்களை எல்லாம், வீடியோவாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்.

இதுபோல உங்களுக்கும் திறமை இருந்து, யூடியூப் சேனல் ஆரம்பிக்க ஆசை இருந்தால், இந்த கட்டுரை உதவியாக இருக்கும். படியுங்கள். யூடியூப்பில் சம்பாதியுங்கள்.

*
எப்படி சேனல் உருவாக்குவது?

யூடியூப்பில் உங்களுக்கு என தனிப்பட்ட கணக்கை உருவாக்கவேண்டும். டிரெண்டிங்கான பெயர்களை யூடியூப் சேனலுக்கு சூட்டினால், வெகு விரைவாகவே பிரபலமாகலாம். யூடியூப் சேனல் பெயர், வீடியோக்களில் தோன்றும் நபர்கள், பகிரும் கருத்துக்கள்... இவற்றை அடையாளமாக வைத்தே, சேனலின் வளர்ச்சி இருக்கும். ஒரே நாளில் பணக்காரனாக ஆகலாம் என்றெல்லாம் கனவு காணாதீர்கள்! ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் சம்பாதிக்கலாம், அது நீங்கள் பகிரும் வீடியோவைப் பொறுத்தது.

*
எதை வீடியோவாக மாற்றுவது?

எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறந்த கேமராவை அல்லது சிறந்த எடிட்டிங் மென்பொருள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடியுங்கள். நாய்க்குட்டி, பூனைக்குட்டி, குழந்தை செய்யும் சேட்டை, மனைவி செய்யும் சமையல், மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எதை வேண்டுமானாலும் வீடியோவாக உருவாக்கலாம்.

*
மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி?

யூடியூப் சேனலை பிரபலப்படுத்த நினைத்தால், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களின் வழியே பிரபலப்படுத்தலாம். சமூக வலைத் தளங்களில் உலா வரும் உங்கள் வீடியோக்களையும், யூடியூப் சேனல் பற்றிய தகவல்களையும் பார்த்து மக்கள், உங்கள் யூடியூப் கணக்கை பின் தொடர வாய்ப்பிருக்கிறது. எத்தனை நபர்கள் உங்களை பின் தொடர்கிறார்களோ, அதற்கு ஏற்ப பணம் உங்கள் வங்கி கணக்கில் வந்து சேரும்.

*
எப்படி பணம் பெறுவது?

யூடியூப்பின் பக்கத்தில் எனது சேனல்என்பதைக் கிளிக் செய்தால் இதற்கான வழிமுறைகள் தோன்றும். அதில் மோனெட்டைசேஷன் என்ற வசதி இருக்கும். அதை ஆக்டிவேட் செய்தால் உங்கள் வீடியோக்களைப் பொறுத்து விளம்பரம் தெரியும். அதில் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் பெறுவதற்கு ஆட்சென்ஸ்என்ற கணக்கு இருக்க வேண்டும். ஆட்சென்ஸ்கணக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை. யூடியூப் சேனலுக்காகவே புதிய கணக்கு தொடங்கி, அதில் பணம் பெறலாம்.

*
எதை பதிவேற்றக்கூடாது?

வர்த்தக உரிமம் இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்தக்கூடாது. கவர்ச்சியான காட்சிகள், கருத்துகளை தவிர்க்கவேண்டும். ஏற்கனவே யூடியூப்பில் இருக்கும் வீடியோவை பதிவிறக்கம் செய்து, அதை புதிய பெயரில் உங்கள் கணக்கில் பதிவேற்றக்கூடாது. அதேபோல பிறர் பாடுவது, ஆடுவது, நடிப்பது, விளையாடுவது ஆகியவற்றை அவர் அனுமதியின்றி வீடியோவாக எடுத்து, பதிவேற்றுவதையும் தவிர்க்கவேண்டும்.

*
எப்போது பணம் கிடைக்கும்?

பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க, குறைந்தது பத்தாயிரம் பார்வையாளர்கள் உங்கள் வீடியோவை பார்க்கவேண்டும். பல்வேறு விளம்பரங்கள் மூலம் தான் நீங்கள் பணம் சம் பாதிக்க முடியும். மேலும் உங்கள் சேனலில் உள்ள அனலிட்டிக்ஸ் விருப்பத்தை சொடுக்கவும். மதிப்பிடப்பட்ட வருவாய்கள் உங்களுக்கு கிடைக்கும். அனலிட்டிக்ஸை பொறுத்தவரை வீடியோ பார்வைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பலவற்றை இங்கே பார்க்கலாம். நீங்கள் எத்தனை வீடியோக்கள் அப்லோடு செய்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால் அதற்கேற்ற வருமானம்தான் கிடைக்கும்.

*
எதில் உஷாராக இருக்கவேண்டும்?

பதிவேற்ற இருக்கும் வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் யூடியூப் தரும் ஆடியோ ஸ்வேப் வசதியை பயன்படுத்தக் கூடாது. காரணம் அந்த ஆடியோ ஸ்வேப் வசதியைப் பயன்படுத்தும் வீடியோவுக்கு காட்டப்படும் விளம்பரங்களுக்கான வருமானம் உங்கள் கணக்கில் வந்து சேராது. மாறாக அது கூகிள் கணக்கில்தான் போய் சேரும்.

*
பணம் அதிகமாக சம்பாதிக்கும் விஷயங்கள் எவை?

சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தல வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள் போன்றவை அதிகமாக பணம் சம்பாதிக்க பயன்படும்.

Read more...

கவனமாக செலவு செய்யுங்கள்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

பணம் சம்பாதிப்பது செலவு செய்யத்தான். ஆனாலும் எந்த ஒரு பொருளையும் தேவை இருந்தால் மட்டும் வாங்குங்கள்.

மக்கள் சமீப காலமாக அதிக அளவில் ரெஸ்டாரண்ட்டுக்கு போய் சாப்பிடுதல், மால்கள் மற்றும் பொழுதுபோக்கும் இடங்களில் தேவையற்ற செலவுகளை யோசிக்காமல் செய்வதை பார்க்கிறேன். பல திரையரங்குகளில் ஒரு டப்பா பாப்கார்ன் மனசாட்சியே இல்லாமல் நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் பலர் க்யூவில் நின்று வாங்கி பிள்ளைகளுக்கு தருகிறார்கள்.

முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை பொருட்காட்சி திடலில் மட்டும் சற்று செலவு செய்யும் தமிழ் குடும்பங்கள் இப்போது மாதத்தில் பல நாட்கள் இப்படி இஷ்டத்திற்கு வீண் செலவு செய்வது சாதாரனமாகிவிட்டது.

நடுத்தர குடும்பங்கள் ஏதோ நாளையோடு சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரும் கடைகள் மூடப்படுவதைப்போல என்னாளும் போய் அலைமோதுகிறார்கள்.

இதே போல துணி கடைகள், நகை கடைகள், விளம்பரத்தால் தூண்டில் போடும் ஆன்லைன் நிறுவங்கள் என நடுத்தர மக்களின் சேமிக்கும் பழக்கத்தை குழிதோண்டி புதைக்க பல வர்த்தக முதலைகள் வாயயை பிளந்து கொண்டு காத்திருக்கின்றன.

தேவைக்காக பொருள் வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது போலும். 
இப்பொதெல்லாம் ஏதாவது வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பல சமயம் முட்டாள் தனமாக செலவு செய்வது ஒரு ஃபேஷனாக ஆகிவிட்டது.

வெறும் டம்பத்திற்க்காக ஆடம்பர செலவு செய்வதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருமணங்கள். பெற்றோரின் ஆயுட்கால சேமிப்பை மணமக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயன்படாத வகையில் செலவு செய்வதற்கே திருமணங்கள் நடத்தப்படுகின்றதோ எனும் ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

"இப்பொதெல்லாம் வருமானம் அதிகம் ஸார் அதனால செலவு செஞ்சா தப்பில்ல" என்ற கருத்தும் பரவி வருவது மிக தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

சில ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட கடும் பொருளாதார சரிவின் போது இந்தியாவில் அதன் தாக்கம் மிக குறைவாகவே இருந்தது. காரணம், நமது நாட்டின் மிக பெரிய எண்ணிக்கையிலான நடுத்தர வர்கதின் சேமிப்பாகும்.

நுகர்வோர் கலாச்சாரம் வரம்பு மீறும் போது, க்ரெடிட் கார்ட் தரும் போலி தைரியத்தின் காரணமாக செலவுகள் எல்லை தாண்டும்போது நம் பொருளதாரத்தின் அடித்தளம் அசைவுகாணும், பலவீனம் அடையும்.

எனவே, அடுத்த முறை நீங்கள் ஒரு செலவை மேற்கொள்ளும் முன் அதன் அவசியத்தை கொஞ்சம் யோசித்து; அப்பொருளை நீங்கள் அதன் தேவை கருதி வாங்குகிறீர்களா அல்லது அதனை சும்மா விரும்புவதால், வேண்டும் என நினைப்பதால் வாங்குகிறீர்களா என்று வாங்குமுன் சற்று தயக்கம் காட்டுங்கள். உங்கள் முடிவு மாறலாம். அப்போது உங்கள் பணம் உங்களிடமே, உங்கள் உண்மையான தேவைக்காக பத்திரமாக இருக்கும். அது நீங்கள் உழைத்து ஈட்டியது. மறந்து விடாதீர்கள். 

 

Read more...

தயிரை விட மோர் நல்லதா?.

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

தயிர் நல்லதா, மோர் நல்லதா என்பதை கூறும், இயற்கை மருத்துவர், ஒய்.தீபா: பாலில் இருந்து கிடைத்தாலும், மோர், தயிருக்கு தனித்தனி குணாதிசயங்கள் உள்ளன. தயிரை, தண்ணீர் கலந்து, மோராக மாற்றும் போது, 'அல்கலைன்' உணவாக மாறுகிறது; எளிதாக ஜீரணமாகிறது. இரண்டும், ஒரே மாதிரியான ஊட்டச் சத்துகளையே கொண்டுள்ளன. ஆனால், கலோரி கணக்கு பார்த்தால், ௧௦௦ கிராம் தயிரில், ௯௦ கிராம் கலோரி இருக்கும்; ௧௦௦ கிராம் மோரில், ௪௦ கிராம் கலோரிகள் தான் இருக்கும். இரண்டிலும் கால்சியம் இருந்தாலும், தயிரை விட, மோரில் உள்ள கால்சியம் தான், உடல் கிரகித்துக் கொள்ள ஏதுவாக உள்ளது. மோரில், விட்டமின் பி ௧௨, ஜிங்க், புரதம் போன்றவை, உடலை வலுப்படுத்தும். தயிரில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. தயிர் சேர்த்த உணவுகளை, தினமும் உண்ணும் போது, செரிமான சக்தி வெகுவாகக் குறைந்து, உடலில் கபம் அதிகமாகும். கொழுப்பாக, உடலில் தங்கி விடும். தயிர் அதிகமாக எடுத்துக் கொண்டால், மலச்சிக்கல் கூட ஏற்படலாம். நாம் சாப்பிடும் உணவு, அமிலத் தன்மையோடு இருந்தாலும், நம் உடலில் உள்ள சோடியம், நாம் சாப்பிட்ட உணவை, அல்கலைனாக மாற்றும். அதிகமாக அமிலத் தன்மை உள்ள உணவை எடுத்துக் கொள்ளும் போது, நம் உடலில் உள்ள சோடியம் தீர்ந்து போகும். அப்போது, எலும்பில் சேர்ந்திருக்கும் கால்சியம் தான், நம் உணவை, அல்கலைனாக மாற்றும்; உடல் பலமற்று இருக்கும்.இதை சரி செய்ய, அதிகமாக மோர், காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும். இதன் மூலம், அசிட்டிக்கை, அல்கலைனாக மாற்றக் கூடிய சோடியம், கால்சியம் உடலில் அதிகரிக்கும். தயிரை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடலானது, அசிட்டிக்காக மாறும். அதே நேரத்தில், மோர் அதிகம் சாப்பிட வேண்டும் என்பதற்காக, தயிரை புறக்கணிக்கக் கூடாது. எடுத்துக் கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். உணவுக்கு பின், மோர் எடுத்துக் கொள்வதால், செரிமான சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்புகளை நீக்கும். உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், மோருக்குப் பதில், தயிரை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெயில் நேரங்களில், தயிரை தவிர்த்து, மோர் அதிகமாக சாப்பிட வேண்டும். இந்த காலத்தில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் குறையும். அப்போது மோர் குடிப்பதால், உடலில் நீர் வறட்சி ஏற்படாது; உடலும் புத்துணர்ச்சியாக இருக்கும். மோரில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து அருந்தினால், அமிர்தமாக இருக்கும்; உடலுக்கும் மிக நல்லது; பசியின்மை சரியாகும்.

Read more...

தொழில் உரிமம் பெறுவது எப்படி?

அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது சட்டம். இதுதான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும். தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது.

அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

யாருக்கு தொழில் உரிமம் தேவை?

ஒரு தொழிலை தொடங்குவதற்கு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கியிருந்தாலும், மாநகர, நகர பகுதியில் தொடங்குபவர்களுக்கு இந்த அனுமதி வேண்டும்.

குறிப்பாக தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், பதப்படுத்தும் நிறுவனங்கள், தீப்பெட்டி தயாரிப்பு, அச்சகம், வெல்டிங் பட்டறைகள், பெட்ரோல் பங்க் போன்றவை பிற அரசு துறைகள் மூலம் அனுமதிகள் வாங்கியிருந்தாலும் நகராட்சி அனுமதியும் வாங்க வேண்டும்.

தவிர உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள், பால் மற்றும் இறைச்சி விற்பனை யாளர்கள், பள்ளி, கல்லூரி உணவு விடுதிகள், சமையல் ஒப்பந்தக்காரர்கள் திருமண மண்டபம், ஓட்டல், மளிகை கடைகள், தேநீர் கடைகள், குளிர்பான கடைகள், மொத்தம் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்களும் இந்த அனுமதி வாங்க வேண்டும்.

அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களில் தொழில் நடத்துபவர்கள் என்றும், உணவு பொருள் தயாரிப்பு மற்றும் சாப்பிடும் நிலை வரை உள்ள அனைத்து உணவு வணிகர்கள் என்றும், மின்சக்தி மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி தொழில் செய்பவர்கள் என்றும் பல வகைகளில் இந்த தொழில்களை வகைப்படுத்துகிறது சட்டம்.

உரிமம் பெறும் நடைமுறை

விண்ணப்பதாரர் தங்களது பெயர் மற்றும் தொழில் விவரம், தொழில் நடத்தப்பட உள்ள இடத்தின் முகவரி போன்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ரூ.20க்கான முத்திரைத் தாளில் தொழில் உரிமத்திற்கான திட்டங் களைப் பின்பற்றுவேன் என்பதற்கான உறுதி மொழி பத்திரம் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் தொழில் உரிமம் கிடைக்கும். இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் உரிமம் புதுப்பிக்கப் படவில்லையென்றால் புது உரிமம் எடுக்க வேண்டும்.

ஏன் வாங்க வேண்டும்

இது போன்ற அனுமதிகளை நகராட்சிகள் மூலம் வாங்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்தால் அது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால்தான். என்ன தொழில் எந்த பகுதியில் தொடங்க உள்ளனர் என்பதை அறிந்து அதற்கேற்ப அனுமதி வழங்கப்படும். இதற்கு எழுத்து பூர்வமாக அத்தாட்சிகள் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

நடைமுறை என்ன?

தொழில் அமைய உள்ள கட்டடத்தின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் அல்லது மண்டல செயற்பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட சான்றிதழ், அந்த கட்டட உரிமையாளரின் ஆட்சேபணையில்லா சான்றிதழ், நடப்பு ஆண்டு வருமான வரியின் நகல், தொழில் வரியின் நகல், மாவட்ட தீயணைப்பு அதிகாரியின் ஆட்சேபனையில்லா சான்றிதழ், தொழிற்சாலை ஆய்வாளர்களிடமிருந்து பெற்ற சான்றிதழ், அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் என சட்டம் நடைமுறைகளை வைத்துள்ளது.

தங்கும் விடுதிகள் மற்றும் உணவகம் என்றால் குடிநீர் வாய்ப்புகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் என்றால் பணியிடம், கட்டிடம், அதற்கான இதர அனுமதிகள், எத்தனை பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர் என்கிற விவரங்கள் கொடுக்க வேண்டும். தவிர குறிப்பிட்ட தொழிற்சாலை தொடங்குவதற்கான திட்ட வரைபடம் போன்றவை இணைக்க வேண்டும்.

அந்த இடத்தின் காற்றோட்ட வசதி, தீ தடுப்பு வசதிகள், அறைகள், கட்டிட உயரம் போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தொழிற்சாலை ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டவர்களின் குறிப்பின்பேரில் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் பட்சத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் சட்டத்துக்குட்பட்ட தொழில்கள் என்கிற அடையாளமும் கிடைக்கிறது.

இந்த தொழில் உரிமம் பெறாமலோ அல்லது புதுப்பிக்கப்படவில்லை என்றாலோ தொழிலை முடக்கி வைக்கவும் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.

 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets