உங்கள் வருகைக்கு நன்றி

விழுவதை சாதாரமாக நினைக்க வேண்டாம்.

திங்கள், 23 டிசம்பர், 2019


கீழே விழுவது என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும், எந்த வயதிலும் ஏற்படுகிற சாதாரணமான ஒரு நிகழ்வு.
வயது ஆக ஆக கீழே விழும் சம்பவங்களும், அதனால் ஏற்படும் காயங்களும் அதிகரிக்கும். 65 வயதுக்கு மேலானவர்கள் இப்படி கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வதால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும். கீழே விழுவதால் தலையில் அடிபடுவது, தோள்பட்டை மற்றும் கைகளில் முறிவு, முதுகெலும்பில் முறிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வயதானவர்கள் கீழே விழுவதில் சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு அதிகம் இருக்கும். அதையும் மீறி விழுந்தவர்களுக்கு பலமான காயங்கள் ஏற்படலாம். அதற்கான சிகிச்சைக்காக பல மாதங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டி வரலாம்.
கீழே விழுந்து அடிபட்டுக் கொள்பவர்களில் 65 வயதை கடந்த முதியவர்களே அதிகம். தவறி கீழே விழுபவர்களின் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. அவர்களில் பெண்களே அதிகம். இடுப்பெலும்பு முறிவு ஏற்படும் நபர்கள் பெரும்பாலும் அதிலிருந்து முழுமையாக விடுபடுவது இல்லை. பலரும் அதற்கு பிறகு நடக்க முடியாமல் முடங்கிப் போகின்றனர். இன்னும் சிலருக்கு கைத்தடி அல்லது வாக்கர் உதவியின்றி நடமாடுவது சிரமமாகிறது. சில நேரங்களில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் ஒரு வருடத்துக்குள் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

எனவே கீழே விழும் வாய்ப்பை அதிகரிப்பதில் முதுமைக்கு முக்கிய பங்கு உண்டு. பார்வைத் திறன் குறைவது, உடலில் சக்தியே இல்லாமல் இருப்பது போல் உணர்வது போன்றவை இயல்பு. இவை எல்லாமே விழுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பவை.

உடல் இயக்கம் இல்லாமை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை போன்றவை உடலின் சமநிலையை பெரிய அளவில் பாதிக்கும். எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். புகை மற்றும் மது பழக்கங்கமும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிப்பவை. குறிப்பாக மதுப்பழக்கம் ஒருவரது நிலைத்தன்மையை பெரிதும் பாதித்து கீழே விழும் வாய்ப்புகளை பல மடங்கு அதிகரிக்கும்.

வழுவழுப்பான தரை, ஈரமான தரை, வெளிச்சமற்ற வீடு, கால்களுக்கு சரியான பிடிமானத்தை தராத காலணிகள், நடமாடும் இடங்களில் இடறி விழும் அளவுக்கு பொருட்களை அடைத்து வைப்பதால் முதியவர்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே தவறி விழுகிறார்கள். மாடி படிகளில் ஏறி இறங்கும்போதும், சமையலறையில் வேலை பார்க்கும்போதும், குளியலறை மற்றும் கழிவறைகளிலும் இவர்கள் கீழே விழுவது அதிகமாக நடக்கிறது.


Read more...

குழந்தை வளர்ப்பு.

வெள்ளி, 20 டிசம்பர், 2019


வீட்டின் சின்னச்சின்ன வேலைகளில், குழந்தைகளை ஈடுபடுத்துவதால், அவர்களின் ஆற்றல் மேம்படு.,  குழந்தை கள், 2 வயதாக இருக்கும் போது, தட்டில் இருக்கும் சாப்பாட்டை எடுத்து தாங்களே சாப்பிட துவங்குவர். பெற்றோர் போல, ஆபிஸ் கிளம்புவது, சமைப்பது என, நடிக்கத் துவங்குவர். குழந்தைக்கு, 3 வயதானதும், கழிவறைக்கு தானே சென்று வர பழக்க வேண்டும். 4 வயதானதும், கழிவறையை சுத்தப்படுத்த, அந்தக் குழந்தையை பழக்க வேண்டும். இப்படியே, 5 வயது குழந்தை, பள்ளிக்கூட பை மற்றும் சாப்பாட்டு கூடையை மறக்காமல் எடுத்து வர வைக்க வேண்டும்.நன்கு நடமாட, பேச, வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் தெரிய துவங்கிய குழந்தைகளுக்கு, வீட்டின் சின்னச்சின்ன வேலைகளை செய்ய கொடுக்கலாம். உதாரணமாக, பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது; சாப்பிட உணவு தட்டை எடுத்து வருவது; ஷூ பாலிஷ் போடுவது; விடுமுறை நாட்களில், வீட்டின் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது என்பன போன்ற வேலைகளை செய்ய சொல்லலாம்.எனினும், சமையல் அறையில் நேரடியாக ஈடுபடுத்துவது, துணிகளை இஸ்திரி போடுவது போன்ற கடினமான பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தவே கூடாது. மாறாக, மீன் வளர்த்தல், பறவை, நாய்க்குட்டி, பூஞ்செடிகள் பராமரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளச் செய்யுங்கள். இவ்வாறு அவர்கள் வேலை செய்யும் போது, அவற்றில் குறைகளை காண்பிக்காமல், இன்னும் சிறப்பாக செய்வது எப்படி என்பதை, பக்குவமாக சொல்லிக் கொடுங்கள். முடிந்த வரை, மொபைல் போன்கள், கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சி போன்றவற்றில், அவர்களின் ஆர்வம் செல்லாத வகையில், பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.இதனால், எந்தச் சூழ்நிலை என்றாலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் மனப் பக்குவம், திறமை குழந்தைகளுக்கு வந்து விடும். இதற்கு, பெற் றோரின் ஒத்துழைப்பும், அரவணைப்பும் குழந்தைகளுக்கு அவசியம்.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், 'அன்றாட வீட்டு வேலைகளில் இருந்து குழந்தைகளை விலக்கி வைப்பது தவறு. அவ்வாறு செய்தால், குழந்தைகளின் திறன் குறைய வாய்ப்பு உள்ளது. மன தைரியம், வெற்றி, தோல்விகளை பகுத்தறியும் பக்குவம், உடனிருப்போருடன் உறவாடும் உளவியல் தன்மை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும்' என்கிறது.வீடு என்றால், வேலைகளை எல்லாரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை, குழந்தைகளுக்கும் உணர்த்துங்கள்!
நாகர்கோவில்குழந்தைகள் டாக்டர் ஷபி:

Read more...

கழுத்து வலி வரலாம் எச்சரிக்கையாக இருங்கள்.

புதன், 4 டிசம்பர், 2019

* கழுத்து வலிக்கான காரணம்
அலைபேசியை பார்ப்பதால் கழுத்து வலி ஏற்படுகிறது .கழுத்தை குனிந்து கொண்டே தொடர்ந்து அலைபேசியை பயன்படுத்தும் போது வலி துவங்குகிறது.
அலைபேசியில் கேம்ஸ் விளையாடுவதால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

*
கழுத்துவலி எவ்வாறு பரவும்
கழுத்து வலி முதலில் கழுத்தில் உணர்ந்தாலும் முதுகெலும்பு பிரச்னைகளாலும் ஏற்படலாம். கழுத்து, மேல் முதுகு இரண்டிலும் தசை இறுக்கம் அல்லது முதுகெலும்பிலிருந்து வெளிப்படும் நரம்புகளை ஜவ்வு அழுத்துவதன் காரணமாக கழுத்து வலி ஏற்பட்டு வலி பரவும்.


*
வேறு எந்த விதத்தில் கழுத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
நமது தலை நேராக இருக்கும் போது 4 கிலோ எடை உள்ள எலும்புகளை நமது கழுத்து பகுதி தாங்கி கொள்ளும். இதுவே 15 டிகிரியில் கழுத்து குனியும் போது 12 கிலோ எடை, 30 டிகிரியில் 17 கிலோ, 45 டிகிரியில் 20 கிலோ, 60 டிகிரியில் 27 கிலோ எடையை கழுத்து சுமக்கிறது. வேறுபட்ட அதிக அளவு எடையானது கழுத்திலுள்ள தசை நார்கள் மற்றும் எலும்புகளை பாதிக்கிறது.   இதனால்தான் கம்ப்யூட்டர், அலைபேசியை அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு அதிக அளவில் கழுத்து வலி ஏற்படுகிறது.


*
கழுத்துவலிக்கான அறிகுறிகள்
தலை முன்னோக்கி நகர்ந்திருப்பது, சிலருக்கு பின் கழுத்தில் மேடான பகுதி உருவாகியிருப்பது (வலியில்லாத வீக்கமான பகுதி), தோள்பட்டை வழக்கத்தை விட முன்னோக்கி நகர்ந்திருப்பது, சில நேரங்களில் கழுத்து இயக்கத்தில் ஏற்படும் வலி, தோள்பட்டை, கை, விரல்களில் ஏற்படும் மதமதப்பு, தலைவலி, தலை சுற்றல் கழுத்து வலியின் அறிகுறிகளாகும்.

*
இதை தவிர்ப்பது எப்படி
அலைபேசியை பயன்படுத்துபவர்கள் தலையை நேராக வைத்து கொண்டு கண்ணிற்கு நேர் எதிராக வைத்து பயன்படுத்த வேண்டும். தசைகள் இறுக்கத்தை குறைக்க, தளர்வடைய செய்யும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பலவீனமான தசைகளை பலப்படுத்த பயிற்சி செய்ய வேண்டும். நாற்காலி அல்லது கீழே அமரும் போது சரியான உடல் மற்றும் முதுகெலும்பு அமர்வை மேற்கொள்வது அவசியம். அன்றாட செயல்களில் கழுத்தை கவனித்து கொள்வது அவசியம்.

டாக்டர் சி.டேவிட் பிரேம் குமார்
பிசியோதெரபி்ஸ்ட்
அருப்புக்கோட்டை
96777 24772

Read more...

ஆரோக்கியம் என்பது எதில் உள்ளது ?.

வெள்ளி, 29 நவம்பர், 2019


* பல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் ஏன்
எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம் என்றாலும், அந்த தலைக்கே வாய் தான் கண்ணாடியாக திகழ்கிறது. வாயின் ஆரோக்கியம் என்பது பற்களை பராமரிப்பதில் இருக்கிறது. ஆரோக்கியமான பற்களே உடலுக்கு நல்லது. வாயிலும், பற்களிலும் ஏற்படும் நோய்களால் ஒட்டு மொத்த உடம்பும் பாதிக்கப் படுகிறது. எனவே வாயையும் பற்களையும் துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

*
குழந்தைகள் எந்த வயதில் பல் துலக்க தொடங்க வேண்டும்
குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாதத்தில் பல் முளைக்கத் துவங்கும். அப்போதிருந்தே பல் துலக்கி விடுவதை துவங்க வேண்டும். ஐந்து வயது வரை பெற்றோர் உதவியுடன் பல் துலக்க வேண்டும்.

*
வாய்ப்புண் ஏற்பட காரணம் என்ன
பீடி, சிகரெட் பிடித்தல், புகையிலை, பாக்கு போடுதல் போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு வாய்ப்புண் ஏற்படும். இதனால் உதடு, கன்னம் தசைகளில் நெகிழித்தன்மை குறைந்து வாய் திறக்க முடியாமலும் போகும். அதிகமான காரம், புளிப்பு உணவுகளாலும் வாயில் எரிச்சல் தன்மை கூடி வாய்ப்புண் ஏற்பட வழிவகுக்கும்.

*
வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம்
வாயில் உள்ள அழுக்குகளே காரணம். வாயிலும், பற்களிலும் உணவு துகள் தங்குவதால் ஏற்படும் பாக்டீரியாக்கள், உணவு துகள்களுடன் சேர்ந்து கெட்டுப்போய் துர்நாற்றம் ஏற்படுகிறது. வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கதினமும் இரண்டுமுறை பல் துலக்குவதுடன் நாக்கை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வாய் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்குமாறு நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.

*
தெத்துபற்களால் பாதிப்பு உண்டா
தெத்துப்பற்கள், பற்களுக்கு இடையில் இடைவெளி அதிகம் உள்ள பல் அமைப்பு, நெருங்கிய பற்கள் ஆகியவற்றால் பல் ஈறு நோய் ஏற்படும். வாய் திறந்தபடி துாங்குதல், உதடு கடித்தல், நாக்கு மூலம் பற்களை தள்ளுதல், கீழ் உதடை உள்ளிழுத்து கடித்தல், ஆகியவற்றாலும் மரபு ரீதியாகவும் தெத்துப்பற்கள் உருவாகும். இதனால் பல் மற்றும் முக அமைப்பு மாறிவிடும். எனவே வளரும் பருவத்திலேயே இவற்றை சரிசெய்து கொள்ளவேண்டும்.
*
சொத்தை பற்களை எடுக்காமல் விடலாமா
கெட்டுப்போன சொத்தைப்பற்களை எடுக்காமல் விட்டால் தோல் நோய்கள், மூட்டு, இடுப்பு வலி, மூட்டுகளில் வீக்கம், கண்களில் புரை மற்றும் இருதய நோய் கூட ஏற்படலாம்.

*
பல் சொத்தை வராமல் முன்கூட்டியே தடுக்கலாமா
பற்களின் மேலே படியும் காரை அல்லது உணவு படலத்தின் மீது நுண்ணுயிரிகள் உண்டாக்கும் அமிலம் பற்களை பாதித்து பல்சொத்தை எற்படுகிறது. பற்களில் சொத்தை வருவதை தடுத்தல் என்பது கடினமான செயல். ஏனெனில் நமது பற்களின் அமைப்பு, உணவுமுறை, துலக்கும் முறைகளை பொறுத்தே பல் சொத்தை ஏற்படுவதால் அதை துல்லியமாக முன்கூட்டியே வராமல் தடுக்க முடியாது.

*
செயற்கை பல் கட்டுவது பற்றி...
விபத்தால் பல் உடைதல் உள்ளிட்ட காரணங்களால் பற்களை இழக்க நேரிடும் போது பல் கட்டுதல் அவசியமாகிறது. இரண்டு முறைகளில் பல் கட்டப்படுகிறது. தேவைக்கேற்ப அகற்றக்கூடிய அளவிலும் அல்லது நிரந்தமாக பொருத்தியும் பல் கட்டப்படுகிறது.

*
பற்களை பாதுகாப்பது எப்படி

காலை, இரவு பல் துலக்க வேண்டும். பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவு துகள்களை குச்சி, ஊசிகளை கொண்டு எடுக்கக்கூடாது. பிரஷ்களையே பயன்படுத்த வேண்டும். உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும், ஒட்டும் தன்மை கொண்ட மாவுச்சத்து பொருட்களை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறையாவது பல் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்றால் பல் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
டாக்டர். மா.ஆறுமுகம்
பல் மருத்துவர்
திருப்புத்துார்
98426 56617

Read more...

முயல் வளர்ப்பில் வருமானம்

ஞாயிறு, 17 நவம்பர், 2019


முயல் வளர்ப்பில் வருமானம் பார்த்து, தன் சொந்தக் காலில் நிற்கும், மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி சத்யா: பட்டப்படிப்பு படித்துள்ளேன். ஆசிரியை ஆக விருப்பம். பள்ளி ஒன்றில், சில காலம் பணியாற்றினேன்.அப்பா திடீரென இறந்ததால், திருமணம் செய்து வைத்தனர். ஆசிரியர் வேலை பார்ப்பதாக கூறி, திருமணம் செய்த கணவர், ஏமாற்றி திருமணம் செய்தது பின்னர் தெரிய வந்தது.அதையும் சகித்துக் கொண்டு வாழ்ந்தேன். கொஞ்ச நாட்களிலேயே, வரதட்சணை கொடுமை துவங்கியது. பணம் வாங்கி வா என, என்னை அடிக்கடி, அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பார். எவ்வளவு கொடுத்தாலும், அவருக்கு போதாது.ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு இதயத்தில் கோளாறு. அதை தெரிந்ததும், நிரந்தரமாக என்னை அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டார். கிடைத்த வேலைகளைப் பார்த்தேன். இதய ஆப்பரேஷனுக்கு பின், குழந்தைக்கு சரியானது.தற்செயலாக ஒரு பெரியவரைப் பார்த்தேன். 'ஐந்து குழந்தைகளை பெற்ற பிறகும், சோறு போட ஆளில்லை' என வருந்தினார். முயல் வளர்ப்பில், வருமானம் கிடைப்பதாகவும், அதை வைத்தே காலம் கழிப்பதாகவும் கூறினார். அவர் வழியை நானும் பின்பற்றினேன். முதலில், நான்கைந்து முயல்கள் வளர்த்தேன். தொழில் நுணுக்கங்கள் தெரிய வந்தன.அண்ணன் உதவியுடன், தனியாக இடம் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக, முயல்கள் எண்ணிக்கையை அதிகரித்தேன். இப்போது, என்னிடம், 300 முயல்கள் உள்ளன. ஒரு முயல், மாதத்திற்கு, அதிகபட்சம், 10 குட்டிகள் வரை போடும். அடுத்த, 30 நாட்களில் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடும்.விற்பனைக்கு பிரச்னையில்லை. திருச்சி, நாமக்கல், கரூர் வியாபாரிகள் வாங்கிக் கொள்கின்றனர். 1 கிலோ முயல், 300 - 400 ரூபாய்க்கு விற்கிறேன். வளர்ப்பு முயல், 600 - 800 ரூபாய். முயல் விற்பனையால், மாதம், 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. செலவு, 20 ஆயிரம் ரூபாய் தான். மீதி எல்லாம் லாபம்.முயல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் தான், என்னை தன்னம்பிக்கை பெண்ணாக மாத்தியிருக்குது. என்னைப் போல கஷ்டப்படுவோருக்கு, என்னால் முடிந்த உதவிகள் செய்கிறேன். தெரிந்தவர்களுக்கு, முயல் பண்ணை வைத்துக் கொடுக்கிறேன். பலருக்கு, இந்த தொழில் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறேன்.இந்த தொழில் செய்யலாம் என, விரும்பும் பெண்களுக்கு, என் பண்ணையிலேயே இலவசமாக பயிற்சி அளிக்கிறேன். என்னிடம் பயிற்சி எடுத்து, முயல் வளர்ப்போர், அவற்றை விற்க விரும்பினால், அதற்கான உதவியையும் செய்கிறேன்!
தொடர்புக்கு 98432 55495

Read more...

புதினாவின் பயன்களை அறிந்து கொள்வோம்.

புதன், 11 செப்டம்பர், 2019


நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ச்சத்து, உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின், '' மற்றும் தயாமின் ஆகிய சத்துக்கள், புதினா கீரையில் அடங்கியுள்ளன.
சட்னி, ஜூஸ் என, எந்த விதத்தில் பயன்படுத்தினாலும், இதன் பொது குணங்கள் மாறுவதில்லை.
அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும் சக்தி இதற்குண்டு. ரத்தத்தை சுத்திகரிக்கிறது; வாய் நாற்றம் மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது; பசியை துாண்டுகிறது; பெண்களின் மாதவிலக்கு பிரச்னைகளையும் தீர்க்கிறது.
ஆண்மை குறைவை நீக்கி, முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும், வயிற்றுப் புழுக்களை அழிப்பதோடு, வாய்வுத் தொல்லையையும் அகற்றுகிறது.
புதினாவை நீர் விடாமல் அரைத்து, பற்றுப் போட்டால், தசை வலி, நரம்பு வலி, தலை வலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.
மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை மற்றும் நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. முகப்பரு, வறண்ட சருமம் உள்ளவர்கள், இதன் சாற்றை முகத்தில் பூசி வர, நல்ல பலன் கிடைக்கும்.
புதினா கீரையை நிழலில் காய வைத்து, பாலில் சேர்த்து கொதிக்க விட்டு, டீக்கு பதிலாக அருந்தி வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
வயிற்றுப்போக்கின் போது, புதினாக்கீரை துவையலை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சரியாகும். கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த, கைகண்ட மருந்தாகவும் பயன்படுகிறது.
புதினா இலையை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, இந்த நீரை குடித்தால், மூச்சுத்திணறல் நீங்கும். புதினா, பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால், பொடுகு மறைந்து, கூந்தல் பட்டு போல் பளபளக்கும்.
கொஞ்சம் புதினா இலையை, தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டிய கஷாயத்தில், எலுமிச்சை சாறு சேர்த்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், செரிமானக் கோளாறு நிவர்த்தியாகும். கை, கால் மூட்டுகளில் ஏற்பட்ட வலிகள் குறைந்து விடும்.
தண்ணீரில் இஞ்சி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து, சில நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்த பின், புதினா இலைகளை சேர்த்து மறுபடியும் கொதிக்க விட்டு இறக்கி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்தக் கலவையை வடிகட்டி, எலுமிச்சை சாறு சேர்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம்.
புதினா இலைகளை வெயிலில் காய வைத்து, அதனுடன் தேவையான அளவு துாள் உப்பு சேர்த்து சலித்து, பாட்டிலில் சேமித்து வைக்கலாம். இந்த பொடியால், தினசரி பல் தேய்த்து வந்தால், வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. பற்கள் வெண்மையாக ஜொலிக்கும். ஈறுகளில் ரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவையும் நீங்கும்.
கடையில் வாங்கி வரும் புதினாக் கீரையில் இலைகளைப் பயன்படுத்திய பின், துார எறியும் தண்டுகளை, தொட்டி மண்ணில் ஊன்றி வைக்கலாம்.
இந்த காயகல்பத்தை, வீட்டிலேயே வளர்த்து, உணவில் சேர்த்து, ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets