உங்கள் வருகைக்கு நன்றி

உடல் நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு இணையத்தில் தீர்வு தேடுகுறீர்களா?

சனி, 3 ஆகஸ்ட், 2019


மனநல பிரச்னை குறித்து கூறும், முன்பெல்லாம், உடல்நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு பெரியவர்களிடமோ, மருத்துவர்களிடமோ ஆலோசனை கேட்பர், மக்கள். இன்று கைவைத்தியம் காணாமல் போய், கணினி வைத்தியம் பிரபலமாகி விட்டது. உடல் நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு இணையத்தில் தீர்வு தேடுவது, வழக்கமாகி வருகிறது. இது, 'சைபர்காண்டிரியா' எனப்படும், மனநலப் பிரச்னையாக இருக்கலாம். சிலருக்கு தங்கள் ஆரோக்கியம் குறித்த பயம், எப்போதும் இருக்கும். எதையாவது படித்தாலோ அல்லது யாராவது தனக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக சொன்னாலோ, உடனே தனக்கும் அந்த பாதிப்பு இருக்குமோ என்று பயப்படுவர். இது, ஒரு வகையான பதற்றம். அடுத்த கட்டமாக சிலர், மருத்துவரை நாடி, அவரின் அறிவுரையை பின்பற்றுவர். இன்னும் சிலர், மருத்துவரின் அறிவுரையில் திருப்தி அடையாமல், கவலைப்பட ஆரம்பிப்பதுடன், மருத்துவர்களை மாற்றியபடியே இருப்பர். அடிப்படையில் இதற்கு, 'ஹைப்போகாண்டிரியா' என்று பெயர்; அதாவது, நோய்களை பற்றி அடிக்கடி நினைப்பது. இதிலிருந்து வந்த சொல் தான், 'சைபர்காண்டிரியா!'நோய்களை பற்றி அடிக்கடி நினைப்போர், ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை படிப்பர் அல்லது மருத்துவரை அணுகுவர். ஆனால், 'சைபர்காண்டிரியா'வால் பாதிக்கப்பட்டவர்கள், இணையத்தில் தேடுவர். இன்று, மருத்துவரை விட, இணையத்தை மக்கள் அதிகம் நம்புகின்றனர். தனக்கு இந்த அறிகுறிகள் இருப்பதாக ஒருவர், இணையத்தில் பதிவு செய்தால் போதும். 'உங்களுக்கு இந்த நோய்கள் இருக்கலாம்' என, தகவல்கள் கொட்டும்.உதாரணமாக ஒருவருக்கு, காலையில் தலைவலி ஏற்பட்டிருக்கலாம். முதல் நாள் இரவு, அவர் சரியாக உறங்காததே காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அவர், 'தலைவலி' என்று இணையத்தில் தேடும் போது, அது மூளைக்கட்டிக்கான அறிகுறி என்பதை, முதலில் காட்டும். உடனே பயந்து, 'ஸ்கேன்' எடுப்பார்; உடம்பு சரியில்லை என்ற எண்ணத்திலேயே இருப்பார். இந்த பயத்திலிருந்து, அவரால் மீளவே முடியாது.இணையத்தில் கொட்டி கிடக்கும் தகவல் அனைத்தும், உண்மை என நம்பக் கூடாது. இவர்களின் பயத்தை பயன்படுத்தி, பொய்யான தகவல்களை பரப்பி, தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வைத்து, பணம் பறிக்கும் ஏமாற்று வித்தைகளும் நடக்கின்றன. முடிந்தவரை இணையத்தில், பிரச்னைக்கான தீர்வை தேடாமல், மருத்துவரை அணுகுங்கள். அந்த மருத்துவர் சொன்ன தகவல்கள் சரியா, தவறா என, மீண்டும் இணையத்தில் தேடாதீர்கள். அந்த எண்ணத்திலிருந்து மீள முடியாவிட்டால், மனநல ஆலோசகரை அணுகுங்கள்.
மன நல மருத்துவர் ரங்கராஜன்: 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets