உங்கள் வருகைக்கு நன்றி

ஆரோக்கியம் தான் சொத்து

வியாழன், 20 ஜூலை, 2017

உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்தால் அது ஆரோக்கியம் நிறைந்த சொத்தாக மாறுகிறது! தினமும் ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கீரை சாப்பிட்டவுடன் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். 

இரும்புச்சத்து, தாது உப்புக்கள், கால்சியம் நிறைந்து இருப்பதால் உடல் சீராக இயங்க கீரை வகைகள் உதவும். எலும்புகள் உறுதிப்படும். புதிதாக பறிக்கும் கீரைகளை அதற்கு தகுந்தபடி உடனேயே பொரியல் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 

நோய் அண்டாது. குழந்தைகளை எல்லாவிதமான காய்கறிகளையும் உண்ணப் பழக்க வேண்டும். வயதானவர்கள் நீர்ச்சத்து, நார்ச்சத்து அடங்கி உள்ள அவரைக்காய், புடலங்காய், பூசணி, பீன்ஸ், வாழைத்தண்டு, கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம். 

தினமும் இரண்டு விதமான காய்கறிகள் சேர்த்து கொண்டால் உடலுக்கு நல்லது. பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, அக்ரூட் போன்ற பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம். மொத்த பருப்பு வகைகளையும் கலந்து அதில் தினமும் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவில் சாப்பிடவேண்டும். 

இதனால் உடல் எடையும் கூடும். குழந்தைகளின் உடல் உறுதியாகும். சருமம் பொலிவடையும். முளைவிட்ட பயறு வகைகளில் நீர்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. கூடவே ரிபோபிளேவின் பி காம்பிளக்ஸ் வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். 

அப்படியே சாப்பிடாமல் வெந்நீரில் போட்டு லேசாக வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். தினமும் 50 கிராம் அளவுக்கு முளை விட்ட தானியத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். உணவில் எண்ணெயை அளவோடு சேர்த்து கொண்டால் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். 

எண்ணெய் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு தேவையில்லாத கொலஸ்டிரால் உருவாகி பல நோய்களை உண்டுபண்ணும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயறு வகைகள் தேவை. அதே நேரத்தில் அதை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். தினமும் 50 முதல் 75 கிராம் வரை சாப்பிடலாம்.

டென்ஷன்' ஏன் ?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்று 'டென்ஷன்... டென்ஷன்' என்று தவித்துப் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். நவீன வாழ்க்கை முறை தந்த விரும்பத்தகாத பரிசுகளுள் ஒன்று இந்த 'டென்ஷன்' எனப்படும் மனஉளைச்சல்’. முன்பு எப்போதாவது என்று இருந்த டென்ஷன், பிறகு அவ்வப்போது ஆகி, இன்று அடிக்கடி என்றாகிவிட்டது.

மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்ட நெருக்கடி இது. இதிலிருந்து நவீன மனிதனால் முற்றிலும் விடுபட முடியாது. ஆனால் டென்ஷனை மேலாண்மை செய்ய முடியும். அதற்கு, டென்ஷன் என்றால் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்...

டென்ஷன் என்பது ஒரு பொருளின் இறுக்கத்தைக் குறிக்கும். உலகில் சில பொருள்கள் இயல்பில் இறுக்கமாகத்தான் இருக்க வேண்டும். உலோகங்கள், மரங்கள், கற்கள் போன்றவை அப்படி இறுக்கமாக இருந்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும். காகிதம், நூல், செடி கொடி போன்றவை நெகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்க்கலாம்.

சில பொருட்கள் இரண்டு அம்சங்களும் கொண்டவை. எடுத்துக்காட்டு, களிமண் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள். பொருளியல் பண்புகளான இவை, நம் உடலுக்கும் பொருந்தும். நமது உடல் இறுகு பொருள்களும், நெகிழ் பொருள்களும் கலந்த கலவை. எலும்பு, தசை நார், தோல், ரத்தக் குழாய் ஆகியவற்றின் கூட்டுப்படைப்புதான் நம் உடம்பு.

இவற்றில் சில, நெகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். சில, இறுக்கமாக இருக்க வேண்டும். நெகிழ்ச்சி உறுப்புகள் இறுகக் கூடாது. அதேபோல் இறுகு உறுப்புகள் நெகிழக் கூடாது. எலும்பு நெகிழ்ந்தால் எலும்புருக்கி நோயாகவும், ரத்தக்குழாய் இறுகினால் ரத்த அழுத்தமாகவும் ஆகும்.

இந்தப் பண்பு மனதுக்கும் பொருந்தும். நமது மனம் இளகியும், இறுகியும் இருக்க வேண்டும். நோக்கத்துக்கு ஏற்ப அது அமையும். பசி, தாகம் எடுக்கும்போதும், உறக்கம், பாலுணர்வு உந்தும் போதும் மனம் இறுகிவிடும். ஒற்றைக் குறிக்கோள் என்றால் மனம் இறுகத்தான் வேண்டும். மாறாக, எதை உண்பது, எங்கே படுப்பது எனும் போது இளக வேண்டும்.

விலங்குகள் அப்படித் தான் வாழ்கின்றன. அதனால் அவற்றுக்கு இயற்கையாகவே இறுகுதன்மை உள்ளது. இது ஆபத்தில்லாதது. மனிதனிடம் செயற்கை இறுகுதன்மையே அதி கமாக உள்ளது. இதைத்தான் சாப்பிட வேண்டும், இங்கேதான் படுக்க வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்களிடம் மிகுதியாக இருக்கிறது.

அப்படி அமையாதபோது டென்ஷன் ஆகிறான். எனவே டென்ஷன் என்பது நாமாக ஏற்படுத்திக் கொள்வது. அப்படி ஏற்படுத்திக்கொள்ள சமூகமே கற்றுக்கொடுக்கிறது. ஓர் எண்ணத்தைச் செயல்படுத்த விடாமல் சில எண்ணங்கள் அல்லது சூழல் நெருக்கும்போது டென்ஷன் ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று, அந்த எண்ணத்தின் மீது நாம் ஏற்படுத்திக்கொள்கிற அதீத ஆவல். மற்றொன்று, சூழலுக்கு ஏற்ப எண்ணத்தை மாற்றிக்கொள்ள இயலாமை. குறிப்பிட்ட நேரத்துக்குள் கொடுத்த வேலையை செய்ய முடியாமல் போனாலோ, எடுத்த பணியை முடிக்காமல் போனாலோ நிச்சயம் டென்ஷன் தான்.

யாரேனும் நமக்கு ஒத்துப்போகவில்லை என்றாலும் டென்ஷன் ஏற்படும். அச்சூழலுக்கு, இரு மனங்களின் நெகிழ்ச்சிக் குறைபாடே காரணமாகும். ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு டென்ஷன் பட்டியல் கட்டாயம் இருக்கும். அவற்றை நாம் முழுவதும் போக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது.

மாறாக, அவற்றால் அதிக பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம். நேரத்தை திட்டமிடுவது போன்றவை டென்ஷனை தவிர்க்கும். நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்கிற டென்ஷன்களை தவிர்த்தாலே, பெரும்பாலும் நிம்மதி தான்! 


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets