உங்கள் வருகைக்கு நன்றி

பணம்,வசதிகள் இருக்கின்றன. ஆனால் அமைதி இல்லை ஏன்?.

திங்கள், 31 டிசம்பர், 2012


மாணவர்கள் படிக்கும் காலத்திலே இலக்கை நிர்ணயித்து, அவற்றை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். முதல் வெற்றியே முழுமையான இலக்கை அடைவதில்லை; அது வெற்றியின் துவக்க நிலையாகும்.
வாழ்வில் புதுமை காண, ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை பெற்றிருக்க வேண்டும். இளமையில் ஏற்படும் தவறு ஏற்றுக்கொள்ளக் கூடியது; அதே சமயத்தில் அவற்றை திருத்தி, எதிர்கொள்ளும் தன்மையும் தேவை. பல்வேறு புத்தகங்களை படித்தாலும், ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வொரு விதமாகத்தான் வெளிப்படுத்த முடியும்.
வகுப்பறைகளில் பெறப்பட்ட ஆக்கத்திறனை உரிய இடங்களில் வெளிப்படுத்த வேண்டும். திறமைகளை நீங்களே வளர்த்துக்கொள்ள  வேண்டுமே தவிர, பிறரால் உங்களுக்குள் திணிக்க முடியாது. அதற்காக உங்கள் பெற்றோர்களை குறை கூறக் கூடாது. புதுமைகள் காண சிந்திக்க துவங்க வேண்டும்.
பெயர் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவது என்றில்லாது, சிறிய நிறுவனங்களில் கிடைக்கும் வேலைகளை நல்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடின பயிற்சி மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும்.  
ஒய் திஸ் யூத் வெறி? - மீடியாவுக்கு பொறுப்பு வேண்டும்!
என்னாச்சு இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு? சமீபத்தில் செய்திகள் அனைத்தும் மனத்தைப் பிசைவதாகவே இருக்கின்றன.
பெற்றோர்கள் ஊருக்குப் போயிருக்கும் சமயத்தில், ஒரு மாணவன் தன் நண்பன் மூலமாக தன் வீட்டிலேயே 55 சவரன் நகைகளையும், 20 லட்சம் ரூபாயையும் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்திருக்கிறான்.
சென்னையில் ஒரு மாணவன் தனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்ணைத் தந்திரமாகப் பேசி, தனியாக வரவழைத்து, தன் நண்பர்களோடு சேர்ந்து கூட்டாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கி இருக்கிறான். பஸ்டேவைக் கொண்டாட அனுமதிக்காததால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாணவர்கள் கலவரம்; கல்வீச்சு. இவற்றுக்கெல்லாம் உச்சக்கட்டமாக சென்னையில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், பட்டப்பகலில், வகுப்பறையில் தன் ஆசிரியரையே கத்தியால் சரமாரியாகக் குத்தி கொன்ற கொடூரம்.
இளைஞர் சமூகத்திற்கு ஏனிந்த வெறி?
இந்தக் குற்றங்களை எல்லாம் ஒரு போலீஸ் அதிகாரியாக, சட்டம் ஒழுங்கு பிரச்னையாக நான் பார்க்கவில்லை. நான் யாரையும் விரல் நீட்டிக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. நாம் அனைவருமே ஒரு விதத்தில் இத்தகைய சமூகச் சீர்கேட்டுக்குக் காரணம், என்று கனத்த சோகத்தோடு பேச ஆரம்பித்தார் தமிழகக் கூடுதல் காவல்துறை டைரக்டர் ஜெனரல் கே.ராதா கிருஷ்ணன்.
2002-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற அகில உலகக் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். அங்கே சொற்பொழிவாற்றிய உலகப் புகழ்பெற்ற மனிதவளப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் கவி, அமெரிக்காவில் குற்றங்கள் பெருகி வருகின்றன. அமெரிக்கக் குடும்பங்களில் பணம் இருக்கிறது; வசதிகள் இருக்கின்றன. ஆனால் அமைதி இல்லை. காரணம் இங்கே குடும்பக் கட்டமைப்பு நிலை குலைந்து போய் விட்டது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று அமெரிக்காவின் நிலைமையைச் சுட்டிக் காட்டிவிட்டு, தொடர்ந்து, நாம் கிழக்கு நோக்கி, குறிப்பாக இந்தியாவைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் அங்கே காணப்படும் குடும்பக் கட்டமைப்பு என்கிறார். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் பத்தாண்டுகளில் இங்கே நிலைமை எப்படி மாறிவிட்டது?

ஒன்பதாம் வகுப்பு மாணவன் உணர்ச்சிவசப்பட்டு, கோபத்தில் தன் டீச்சரைக் குத்திக் கொல்லவில்லை; இரண்டு நாட்கள் கத்தியோடு தக்க தருணத்துக்காகக் காத்திருந்து கொலை செய்திருக்கிறான். இது சமூகத்துக்கு ஒரு அபாய மணி எச்சரிக்கை. பணத்தக்கும், அந்தஸ்துக்கும், வசதியான வாழ்க்கைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் கொடுக்கப்படவில்லை.
கன்ஸ்யூமரிசம் என்ற வெள்ளம் சமூகத்தில் அனைவரையும் அடித்து இழுத்துச் செல்கிறது. மேற்கத்திய நாடுகளில் இருக்கும் மோசமான விஷயங்களை நாம் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறோம்.
பெற்றோர்களுக்குப் பணம் சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. அந்தப் பணத்தின் மூலமாக, குழந்தைகளுக்கு சந்தோஷத்தை அளித்தவிடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். அவர்களுக்கு நல்லொழுக்கத்தைச் சொல்லித் தரத் தவறிவிடுகிறார்கள். இது மிகவும் தவறு. அபாயமானது. அதன் விபரீத விளைவுகளைத்தான் இன்று சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையைச் சீர் செய்வது சாத்தியமா என்று சந்தேகமாக உள்ளது.
ஒரு மாணவன், ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணி முதல் நான்கு மணி வரை சுறுசுறுப்பாக இருக்கும் பகல் பொழுதினை, பள்ளிக்கூடத்தில்தான் கழிக்கிறான். அவனைப் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிக்கு முக்கியமான பங்கு உண்டு. எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களிடம் எனக்கு இன்றும் பெரும் மரியாதை உண்டு. அவர்கள் முன்னால் உட்கார்ந்த பேசுவதற்கு எனக்குத் தயக்கமாக இருக்கும். பொதுவாக இன்று ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பதில்லை. அதேபோல் என்னுடைய ஆசிரியர்களிடம் இருந்த கடமையுணர்வும், கனிவும், அன்பும் இன்று ஆசிரியர்களிடம் அரிதாகவே காணப்படுகின்றன.
பள்ளிக்கூடங்களில் பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சாஃப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் படிப்புக்கும் அப்பாற்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள்ளும் வழிகளையும் சொல்லித்தர வேண்டும்.
மூன்றாவதாக இன்றைய சீரழிவுக்கு நான் மீடியாவை, குறிப்பாக சினிமாவைக் குற்றம்சாட்டுவேன். காவலர் பயிற்சிக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குற்றங்கள் மலிய காரணம் குறித்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட ஒரு சினிமா இயக்குனர், நாங்கள் சினிமாவில் நல்ல கருத்தக்களைச் சொல்கிறோமே. அவற்றை எல்லாம் எடுத்துக் கொள்ளாமல், கெட்ட விஷயங்களை மட்டும் மக்கள் ஏன் எடுத்துக் கொள்கிறார்கள்? என்று விவாதித்தார். அதற்குப் பதிலளித்த ஒரு அதிகாரி ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் மொத்த பாலும் விஷமாகி விடுகிறது. ஆனால், ஒரு குடம் விஷத்தில் ஒரு துளி பால் கலந்தால், அது விஷமாகவே தான் இருக்கிறது என்றார்.
மனித வாழ்க்கையின் அங்கமான சில விஷயங்களை, சினிமாவில் காட்டும்போது இலை மறை காயாகத்தான் சொல்ல வேண்டும். சினிமாவில் எதற்காக இவ்வளவு வன்முறையைக் காட்ட வேண்டும்? புதுமை என்ற பெயரில் ஆபாசம் அதிகரித்த வருகிறது. சமூகச் சீரழிவுக்கு அவர்கள் காரணமாகலாமா?
குழந்தைகளின் மீது டி.வி. சேனங்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சோட்டா பீம் என்ற குழந்தை பீமன் தொடரில் குட்டி பீமன் கெட்டவர்களை பஞ்ச் கொடுப்பதைப் பார்த்து, எங்கள் உறவினர் ஒருவரது மூன்று வயது குழந்தை, வீட்டில் எல்லோரையும் முஷ்டியை மடக்கிக் குத்த ஆரம்பித்துவிட்டான். இந்த வீபரீதத்தைப் பார்த்த அவனது பெற்றோர்கள் தங்கள் வீட்டு கேபிளில் அந்த சேனலை அகற்றி, அவனை வழிக்குக் கொண்டு வந்தார்கள்.
எப்படி ஊழலை சட்டத்தின் மூலமாக மட்டுமே ஒழித்துவிட முடியாதோ, அதே போல இந்தச் சமூகச் சீரழிவையும் சட்டத்தின் மூலமாகச் சரி செய்து விட முடியாது. இப்போது மக்கள் மத்தியில் எப்படி ஊழலைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதோ, அதேபோல சமூகச் சீரழிவு பற்றியும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும், பள்ளிக்கூடங்களும், இந்த சமூகமும், மீடியாவும் தங்கள் கடமையை உணர வேண்டும் என்று ராதா கிருஷ்ணன் ஐ.பி.எஸ். வலியுறுத்தினார்.

பள்ளிக்கூடம் என்ன செய்யும்? - கல்வியாளர் திருவள்ளூர் என்.சி.ஸ்ரீதரன்:
* இந்தச் சமூகத்தின் கொடூரங்கள் மாணவர்களைப் பாதிக்காதவாறு, அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசம் ஏற்படுத்தும் பொறுப்பு பள்ளிகளுக்கு இருக்கிறது. இதற்கு பெற்றோர்கள் பள்ளிகளோடு கைகோத்துச் செயல்பட வேண்டும்.

* வாழ்க்கையின் நெறிமுறைகளை எடுத்துச் சொல்லி, குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு, பெற்றோர்களுக்கு இருக்கிறது. மீண்டும் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் கொண்டுவரப்பட வேண்டும்.

* ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மீது கொண்ட அக்கறை காரணமாக என்ன சொல்கிறார்கள் என்பதைவிட, அதை எப்படிச் சொல்கிறார்கள் என்பது ரொம்ப முக்கியம். இத்தகைய பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கபட வேண்டும்.

*மாணவர்களை அடித்துத் திருத்துவதைவிட, அன்போடு எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதே சிறந்த முறை.


என்ன தீர்வு - பருவ வயதிதனர் சிறப்பு மருத்துவர் டாக்டர் யமுனா:
* பாடத்திட்டத்தில் வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்கள் இடம்பெற வேண்டும்.

* பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடல்களாக விளங்க வேண்டும்.

* பருவ வயதில், பிள்ளைகள் பெற்றோர்களின் அன்புக்கு ஏங்குகிறார்கள். அந்த வெற்றிடம் நிரப்பப் படாமல் போனால் விபரீதங்களைச் சந்திக்க நேரிடும்.

* டீன்-ஏஜ் குழந்தைகள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான் முக்கியம்.

* குழந்தைகளின் நடத்தையில், நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

* பெற்றோர்கள் குழந்தைகளோடு குவாலிடி நேரம் செலவிடுவது மிகவும் அவசியம்.

* அன்னப்பறவை போல மீடியாக்களில் இருந்து நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்தக் கொள்ள, குழந்தைகளைப் பழக்கும் மீடியா லிட்ரசி தேவை.


சமூகத்தில் சினிமாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பெற்றோர்கள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; வன்முறைகள் உள்ள படத்தின் வெற்றிக்குப் பிறகு, சினிமாவில் வன்முறை ரொம்பவே அதிகரித்துவிட்டது. சமூகச் சீர்கேட்டுக்குத் துணைபோகிறவர்களைத் தண்டிக்கக் கடுமையான சட்டம் வேண்டும்.


நம் சமூகத்தின் வேல்யூ சிஸ்டம் பாதுகாக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடலாக இருப்பதுதான் முதல் தேவை. இல்லாதுபோனால், நாளுக்கு நாள் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
-சாந்தி (குடும்பத்தலைவி)

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets