உங்கள் வருகைக்கு நன்றி

நீங்க புகை பிடிக்கல ஆனாலும் இதைப் படிங்க

புதன், 30 மே, 2012


புகை உயிருக்கு பகை: இன்று புகையிலை எதிர்ப்பு தினம்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தால் மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

புகையிலை ஒழிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

எத்தனை நச்சுபொருள்கள்: மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை.

அருகில் இருப்பவர்களுக்கும்: உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களால் அருகில் நிற்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இப்படி பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"
ஸ்டைல்':வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் வயது பாரபட்சம் இல்லாமல் "சிகரெட்' பிடிக்கின்றனர். பெரும்பாலும் வேலைப்பளு, உடல் பருமனை குறைக்க புகைக்கின்றனர் என்றும், சிலர் "ஸ்டைலுக்காக' புகைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இன்றே நிறுத்துங்கள்:புகை பழக்கத்தை: படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். புகை பிடிக்காமல் ஒருநாள் இருந்தால், ரத்தத்தில் கலந் திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும்.மூன்று நாட்களுக்கு பிறகு சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. புகை பிடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிடும் போது பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிட்டால் பாதியாக குறைகிறது. புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

வாய், கன்னப் புற்றுநோய்க்கு புகையிலையே காரணம்:மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புகையிலை பாதிப்பால் வாய், கன்னப் புற்றுநோய்க்கு ஆளாவோர் மாதம் 5 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.புற்றுநோய் வரும் காரணங்களில் புகையிலைக்கு 70 சதவீதம் பங்குள்ளது. இந்தியாவில் அதிகம்பேர் சிகரெட், பீடி மற்றும் வாய்க்குள் சுவைக்கும் புகையிலையால் பாதிக்கப்படுகின்றனர். இரண்டாவதில் பெண்கள் அதிகம் பேர் உள்ளனர். புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் கன்னம், நுரையீரலை மட்டுமின்றி, சிறுநீரகம், கணையம், சிறுநீர்ப்பையும் அதிகம் பாதிக்கும்.

மதுரை அரசு ஆஸ்பத்திரி புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு உதவிபேராசிரியர் ரமேஷ் கூறியதாவது: சிகரெட் புகையானது, அருகில் இருக்கும், "பாசிவ் ஸ்மோக்கர்' எனப்படும் பெண்கள், குழந்தைகள், உடன் பணியாற்றுவோரை பாதிக்கிறது. சிகரெட்டில் உள்ள "நிக்கோட்டின்' புகைபழக்கத்திற்கு அடிமைப்படுத்தும் நச்சுப் பொருள். புற்றுநோயை ஏற்படுத்தும் 40க்கும் மேற்பட்ட வேறுநச்சுப் பொருட்கள் சிகரெட்டில் உள்ளன. புற்றுநோயை தவிர்க்க புகைப்பழக்கத்தை நிறுத்துவது ஒன்றே வழி. இதற்கென சாக்லேட்டுகள் வந்துள்ளன. இதனால், சுற்றுச் சூழல் பாதிப்பு, இருதய, நுரையீரல், ரத்தக்குழாய் நோய்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும். பில்டர் சிகரெட்டுகளால் எவ்வித பயனும் இல்லை. மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு புகையிலையால் வாய், கன்னம், நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களில் 50 சதவீதம் பேர் வருகின்றனர். வாய்ப்புற்று நோயாளிகளுக்கு துவக்கத்தில் பற்களில் கறை ஏற்படும். நாக்கு, கன்னப்பகுதியில் வெள்ளைத் திட்டுகள் உருவாகும். அடுத்து லேசான புண் ஏற்படும். பின் கட்டியாக உருவெடுக்கும். ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்றால் நூறு சதவீதம் குணப்படுத்திவிடலாம். வாயில் ஆறாத புண், மூக்கில் ரத்தம் வருதல் இருந்தால் முதலிலேயே பரிசோதனை செய்துவிட வேண்டும். புகையிலையை அறவே தவிர்ப்பதே நல்லது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets