உங்கள் வருகைக்கு நன்றி

மன அழுத்தத்திலேயே உழல்வதும், சோம்பேறியாக இருப்பதும் நியாயப்படுத்தப் படுவதில்லை.

வியாழன், 1 நவம்பர், 2012


முந்தைய தலைமுறைகளைச் சார்ந்தவர்கள் ஒரு பதவியில் பணியில் சேர்ந்தால் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அதே நிறுவனத்தில் பணி புரிந்தது சாதாரணமான ஒன்றாக இருந்தது. உலக அளவில் கம்ப்யூட்டர் துறை சார்ந்த இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐ.டி.,) துறையின் வளர்ச்சியும், இதன் உடன் விளைவாக ஐ.டி.இ.எஸ்., எனப்படும் ஐ.டி., எனேபிள்டு சர்வீஸஸ் துறைகளின் வளர்ச்சியும் வேலை வாய்ப்பு சந்தையின் ஒட்டு மொத்த தன்மையையே புரட்டிப் போட்டுள்ளது எனலாம்.
அட்ரிஷன், கட்டாய விடுவிப்பு, பணி நீக்கம் போன்ற தாக்குதல்கள்தான் இன்றைய நவீன வேலை வாய்ப்பு சந்தையில் அதிகம் பேசப்படும் வார்த்தைகளாக மாறி உள்ளன. இவற்றில் கட்டாயப் பணி நீக்கத்திற்கு உள்ளாகும் நபர்களின் மன ரீதியாக ஏற்படும் அழுத்தம் பெரும் சுமையாக மாறிவிடுகிறது.
சுயமாக பல்வேறு முயற்சிகளைச் செய்தால் ஒழிய இந்த நிலையிலிருந்து மீள்வது பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. எனவே வேலை இல்லாதோர் மற்றும் வேலை இழந்தோருக்கு ஏற்படும் மன அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கான முக்கிய நான்கு உத்திகளை மென்எக்ஸ்எஸ்பி இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் சாராம்சம்..
உங்களை நீங்களே தேற்றிக் கொள்ள வேண்டும்: 
ஒரு லேஆப்பின் காரணமாக உங்களுக்கு பணி இழப்பு ஏற்படும் போது உங்களை நீங்கள் இரண்டு விதமாகத் தேற்றிக் கொள்வது தேவை. முதலாவது, நீங்கள்தான் இது போன்ற நிலைக்கு முதலில் தள்ளப்பட்டவர் அல்ல. அதே போல், இப்படி வேலை நீக்கம் பெறும் இறுதி நபரும் நீங்கள் அல்ல.
உங்களுக்குள் ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்யுங்கள்: 
ஒரு வேலை இழப்பு ஏற்படுவதற்கு உங்கள் பணியில் நீங்கள் ஏதாவது ஒரு தவறைச் செய்வது ஒரு முக்கிய காரணமாக் இருந்திருக்கலாம். லே ஆப் என்பதை ஒரு நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் முயற்சி என்று பழி போட்டு அந்த வேலை இழப்பிற்கு காரணமான நமது தவறைப் பூசி மெழுகுவது நமக்கு நல்லதை தராது. ஒரு வேளை நமது தவறு இதற்கான முக்கிய காரணமாக இருக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அந்தத் தவறு நிகழாமல் இருப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும்.
இறுக்கங்களில் இருந்து விடுபடக் கற்றுக் கொள்ளுங்கள்: 
ஒரு வேலை உங்களிடமிருந்து பறிக்கப்படும் போது உள்ளபடியே நீங்கள் அதற்கான காரணங்கள் குறித்த நினைவுகளில் அடிக்கடி ஈடுபடுவீர்கள். இதன் இறுதி நிலை உங்கள் மன அழுத்தத்தில் தான் கொண்டு விடும் என்பதை உணருங்கள். எனவே உங்கள் மன இறுக்கத்தை எப்படிக் கட்டுக்குள் வைத்திருப்பது என்ற வழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.
தொழுகை, துஆ, புத்தங்களைப் படிப்பது, நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பது, விளையாடுவது போன்ற விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மன இறுக்கங்களைக் குறைத்துக் கொள்ள முடியும். சில சமயங்களில் உங்கள் நண்பர்களும், உறவினர்களும்கூட இந்த விஷயத்தில் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள் என்பதை உணருங்கள்.
புதிய வேலையைத் தேடத் துவங்குங்கள்: 
பணி பறிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக நீங்கள் மன அழுத்தத்திலேயே உழல்வதும், சோம்பேறியாக இருப்பதும் நியாயப்படுத்தப் படுவதில்லை. வேலை இழந்த நிலையில் வீட்டில் உட்கார்ந்தே இருப்பதை விட்டுவிட்டு உங்கள் பணி அனுபவத்தில் நீங்கள் கற்ற புதிய திறன்களையும் இணைத்த புதிய ரெஸ்யூமைத் தயார் செய்து, புதிய வேலைக்கான முயற்சிகளில் இறங்குவதுதான் உங்கள் எதிர்காலம் புதிதாக மலர வழி வகுக்கும் என்பதை உணருங்கள்.
இங்கே சொல்லப்பட்ட விஷயங்கள் ஒரு மாதிரிதான். ஆனால் இதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு இப்போதே செயலில் இறங்கி வெற்றி பெற முயற்சி செய்யுங்கள்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets