உங்கள் வருகைக்கு நன்றி

தெரிந்து கொள்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரிந்து கொள்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வீட்டை இப்படி பாதுகாக்க

வெள்ளி, 31 டிசம்பர், 2021

 மழைக் காலத்தில் வீட்டின் உட்புற சுவர்களில் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். வெளிப்புறச் சுவர் நேரடியாக மழை நீரில் நீண்ட நேரம் படும்போது, அது சுவர்களில் ஈரப்பதத்தை ஏற்படுத்தும். வெளிப்புற பூச்சு வேலை, பெயின்டிங்கின் தரம் மற்றும் வேலைப்பாடு மோசமாக இருந்தால், அது உள்சுவர்களின் ஈரப்பதத்துக்கு வழிவகுக்கும்.

நீரைத் தடுக்கும் பூச்சு செய்யப்படாவிட்டால், தண்ணீர் கசியும்; இது சுவர்களிலும் ஈரப்பதத்தை ஏற்படுத்தும்.ஒரு வீடு; அதனுள்ளே தண்ணீர் தேங்கவில்லை; ஆனால், வெளியே வீட்டைச் சுற்றி ஓரடிக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்நிலையில், அந்த வீட்டின் அடித்தளத்தில் உள்ள செங்கற்களில் நீர் ஊறும். அதன் தொடர்ச்சியாக அதன் மேலுள்ள செங்கற்களிலும் நீர் ஏறி, ஊறும்; இதை, 'கேப்பிலரி' என்கிறோம்.
இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளாமலிருக்க, அடித்தளத்தில் கான்கிரீட்டுடன், 'வாட்டர் ப்ரூபிங்' ரசாயனத்தைக் கலந்து, செங்கற்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் போடுவதன் வாயிலாக, ஈரப்பதம் தங்குவதைத் தவிர்க்கலாம். வெளிப்புறச் சுவரில் சிறிய விரிசல்கள் இருந்தாலும், அது சுவரில் ஈரப்பதத்துக்கு வழிவகுக்கும்; இதுவும் பூஞ்சையை உருவாக்கும்.
ஈரப்பதம் காரணமாக உருவான பூஞ்சையை, மழைக்காலம் முடிந்த பின் உப்புத் தாள் பயன்படுத்தி தேய்க்கலாம்; அதன்பின் மறுபடியும் பெயின்ட் அடித்துக் கொள்ளலாம். வெளிப்புறச்சுவரில், 'டேம்ப் ஷீத் ப்ரைமர்' என்ற பூச்சை, முதல் பூச்சாக பூச வேண்டும். கட்டடம் கட்டி முடித்ததும், வெளிப்புறத்தில் 'ஒயிட் சிமென்ட்'டால் பூசுவர். அதற்கு பதில் டேம்ப் ஷீத் ப்ரைமரை அடித்தால், கட்டடத்தை ஈரம் ஊடுருவாமல் பாதுகாக்கும்
இன்று பெரும்பாலான வீடுகளின் சுவர்களில் விரிசல்களைப் பார்க்கிறோம். அந்த விரிசல்களின் வழியே தண்ணீர் ஊடுருவி, சுவர்களில் ஈரப்பதம் தேங்கும். ஹார்டுவேர் கடைகளில், 'க்ராக் பில்லிங் பேஸ்ட்' என்றே பிரத்யேகமாக கிடைக்கும்; சிறிய விரிசல்களில் இந்த பேஸ்ட்டை வைத்து நிரப்புவர். சற்றே பெரிய விரிசல் என்றால், சிமென்ட்டும், நீரும் கலந்த கலவையான சிமென்ட் பால் கலவையை சிறிய குழாய் வழியே விரிசலுக்குள் செலுத்துவர். அது உள்ளே பயணித்து நிரம்பி, விரிசல்களை மூடும். வீட்டை இப்படி பாதுகாக்கலாம்!

சென்னையைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் எஸ்.சதீஷ்குமார்

Read more...

எதுவாக இருந்தாலும் யோசிக்கனும்!.

வியாழன், 8 ஜூலை, 2021

ஒரு பொருளை வாங்குவதற்கு முன், அதை வாங்கணுமா என்று பல முறை யோசிப்பது சிக்கனத்திற்கான முக்கியமான வழி. ஆனால், அந்த யோசனை நம்மை வாங்க விடாமல் செய்யுமா என்பது சந்தேகம் தான்.

நாம் வாங்க விரும்பும் பொருட்கள் தொடர்பான தகவல்களும், விளம்பரங்களும் நம் ஆசையை தொடர்ந்து துாண்டிக் கொண்டே இருக்கும். 'ஆசையை, இன்னும் ஏழு நாட்களுக்கு தள்ளிப் போடுவோம்' என மனதில் உறுதியாக நினைத்து தள்ளி போட வேண்டும். ஒரு வாரத்திற்கு அப்படி தள்ளிப் போடும் போது, நாம் விரும்பிய, அதிக தேவையற்ற பொருள் மீதான ஆசை குறைந்திருக்கலாம் அல்லது மிகவும் அதிகரித்திருக்கலாம்.
மிகவும் அதிகரித்திருக்கும் பட்சத்தில், அந்த பொருளை வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலான நேரங்களில் நாம் வாங்க நினைத்த பொருள், அதிக முக்கியத்துவம் இல்லாத பொருளாக இருந்தால், அந்த ஏழு நாட்களில் நம் ஆசை குறைந்து விடும். இந்த முறை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட முறை. எனவே, பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என நினைப்பவர்கள், இந்த முறையை பின்பற்றலாம்.ஆசைப்பட்ட பொருளை ஏழு நாட்கள் கழித்து வாங்கலாம் என்று முடிவெடுத்து விட்டால், அந்த இடைவெளி நாட்களில், கிரெடிட் கார்டை இந்த பொருள் வாங்க பயன்படுத்தி தான் ஆக வேண்டுமா;  இ.எம்.ஐ., கட்ட சிரமமாக இருக்குமே என்பன போன்ற மன ஓட்டங்கள் அதிகரித்து, ஏழு நாட்கள் முடிவில், அந்த பொருள் மீதான ஆசையை அறவே துண்டித்து விடும்.அதுபோல, மற்றொரு பொருள் மீதான ஆசை, அதன்பின் வர வாய்ப்பு உள்ளது. முந்தைய பொருளை, கையில் பணம் கிடைக்கும் போது வாங்கிக் கொள்ளலாம் என தள்ளிப் போடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி நாட்களை தள்ளிப் போடுவதால், நல்ல பொருட்களை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு கிடைக்கும். உதாரணமாக, பிரபலமான பிராண்ட் ஒன்றின் பொருளை, அதிக விலைக்கு வாங்க முடிவு செய்திருப்பீர்கள். அதுபோன்ற பொருள், விலை குறைவாகவும் கிடைக்கும். இப்படி தள்ளிப் போடுவதால், விலை குறைந்த பொருளை வாங்கவும் நம்மால் முடியும். இதனால் வீணாக கூடுதல் பணம் கொடுப்பது குறைந்து விடும்.முக்கியமாக, 'ஆபர்' போட்டுள்ளனர் என்பதற்காக, பார்த்த உடனே வாங்க துடிக்க கூடாது. அந்த எண்ணத்தை தள்ளிப் போட்டால், ஏழு நாட்களில் அந்த ஆபர் மீதான ஆர்வம் நம்மிடம் குறைந்திருக்கும். இதுபோன்ற 'டெக்னிக்'குகளை பயன்படுத்தி, வீணான பொருட்களை வீட்டில் சேர்க்காமல் இருக்க முடியும்!

Read more...

வாகன காப்பீடு.

சனி, 19 ஜூன், 2021

இந்த கொரோனா நேரத்தில் பொது போக்கு வரத்து முடங்கியுள்ளதாலும், அதிக தொற்றுக்கு வாய்ப்பு இருப்பதாலும், தனியார் தங்கள் வாகனங்களைத் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இதனால் விபத்து அபாயமும், நிறுத்தியுள்ள இடத்தில் திருட்டு அபாயமும் உள்ளது. விபத்தில் வாகனம்சேதமடைந்தால், அதற்கான இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் செய்துள்ள நிறுவனத்திடம் இருந்து பெறலாம்.அதற்கு முதலில் செய்ய வேண்டியது, விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவலை, முறைப்படி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். காவல் துறையும், இன்சூரன்ஸ் நிறுவனமும் தெரிவிக்கும் வரை, விபத்து நடந்த இடத்திலிருந்து வாகனங்களை அப்புறப்படுத்தக் கூடாது. அனுமதி கிடைத்த பிறகு வாகனங்களை எடுத்துச் சென்று பழுது பார்த்தால், அதற்கான தொகை கிடைக்கும்.ஒரு வேளை வாகனம் திருட்டு போய்விட்டது என்றாலும், உடனடியாக அந்த வாகனம் நிறுத்தியிருந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக திருட்டு போன வாகனம் குறித்த தகவலை, காப்பீடு செய்துள்ள நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.பின், வாகனம் திருடப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை, ஓட்டுனர் சான்று, வாகன பதிவுச் சான்று ஆகியவற்றை, காப்பீடு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். 90 நாட்களுக்கு பிறகும் வாகனம் கண்டுபிடிக்கப்படாவிட்டால், வாகனம் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவலை சான்றாக, காவல் நிலையத்திடம் பெற வேண்டும். அதை வைத்து விண்ணப்பித்தால் தான், 'கிளெய்ம்' நடைமுறைகளை காப்பீடு நிறுவனம் துவக்கும்.எனினும், இப்போது பல முன்னணி நிறுவனங்கள், மொபைல் போன் செயலி அல்லது இணையதளம் மூலம் உடனடியாக, 'ஸ்பாட் கிளெய்ம்' பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளன. விபத்து நடந்த இடத்தில் வாகனம் இருக்கும் நிலையை படமாக எடுத்து, 'அப்லோடு' செய்தால், கிளெய்ம் வழங்கும் நடைமுறையை, காப்பீடு நிறுவனம் துவக்கும். அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், 20 நிமிடங்களில் கூட காப்பீடு நிறுவனம், நம் வங்கிக் கணக்கிற்கு, தொகையை மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.எனவே, மோட்டார் வாகன இன்சூரன்ஸ், வாகனங்களுக்கு அவசியமானது மட்டு மின்றி, இந்த காலத்தில் மிகவும் அவசியமானது!

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ராமலிங்கம்: 


Read more...

உங்கள் மொபைல் எங்கேயுள்ளது ?.

சனி, 12 ஜூன், 2021

அனைவரும் மொபைல் போன் வைத்துள்ளோம். எல்லா இடங்களுக்கும் அவற்றை எடுத்துச் செல்கிறோம். அது தொலைந்து விட்டால் எப்படி கண்டு பிடிப்பது; அதில் உள்ள விபரங்களை அழிப்பது எப்படி?  நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக, 'ஸ்மார்ட் போனும், ஆப்'களும் மாறிவிட்ட நிலையில், அதன் பாதுகாப்பும் மிக அவசியமாகிறது.எனவே, ஸ்மார்ட் போனை பத்திரப்படுத்தி வைப்பதுடன், ஒருவேளை தொலைந்துவிட்டால் என்ன செய்யலாம் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பாக இருப்பதற்கு முயல வேண்டும். அப்படியும் பிரச்னைகள் ஏற்பட்டால், அதில் இருந்து வெளியில் வருவதற்கும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.நாம் ஆசை ஆசையா வாங்கிய ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டதா... கவலை வேண்டாம்; கண்டுபிடித்து விடலாம்.முதலில் போனை வாங்கியவுடன், போனின், ஐ.எம்.இ.ஐ., எண்ணை தெரிந்து கொள்ளணும். போனில், '*#06#' என்று டைப் செய்து டயல் செய்தால், போனின் ஐ.எம்.இ.ஐ., எண் வெளிப்படும்; அதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து, அந்த ஸ்மார்ட் போனில் நமக்கான, 'இ - மெயில்' முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் அக்கவுன்ட் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.போன் தொலைந்து போனால், அந்த அக்கவுன்ட் மூலம் நம் போன் எங்குள்ளது என, தெரிந்து கொள்ள முடியும். அதோடு, அதை, 'லாக்' செய்யவும் முடியும்; அதிலுள்ள தகவல்களை அழிக்கவும் முடியும்.எனவே, போனின் மாடல் எண், ஐ.எம். இ.ஐ., எண், போன் அக்கவுன்டுக்கான இ - மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் போன்ற வற்றை மறந்து விடாமல் இருக்க, பத்திரமாக எங்கேனும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.நம் போன் காணாமல் போனால்android.com/devicemanager ' அல்லது https://findmymobile.samsung.com/' என்ற 'வெப்சைட் லிங்க்கு'கள் மூலம் கண்டுபிடித்து விட முடியும்.இந்த இணைய தளத்திற்கு சென்று, நம், 'ஜி - மெயில்' முகவரி மற்றும் 'பாஸ்வேர்டு' மூலம் 'லாகின்' செய்து கொள்ள வேண்டும். இப்போது கிடைக்கும் திரையில், 'ரிங், லாக், எரேஸ்' என, மூன்று விபரங்கள் இருக்கும்.'ரிங்' என்ற விபரத்தைகிளிக் செய்தால், ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி செய்து எங்கிருக்கிறது என, கண்டறியலாம்.'லாக்' ன்ற விவரத்தை கிளிக் செய்தால், நம் மொபைல் லாக் ஆகும்படி செய்து விடலாம். 'எரேஸ்' என்ற விவரத்தை கிளிக் செய்தால், நம் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி செய்து கொள்ளலாம்.முக்கியமாக, நம் போன் தொலைந்து விட்டால், போன் தொலைந்த அடுத்த நிமிடம் கம்ப்யூட்டர் மூலம் நம் இ - மெயில், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிட வேண்டும்.      'காம்கேர்' கே.புவனேஸ்வரி:

Read more...

யூடியூப்பில் பணம் சம்பாதிப்பது எப்படி?

திங்கள், 28 செப்டம்பர், 2020

சமீபகால இளைஞர்களின் சுலபமான வேலைகளில் யூடியூப் சேனல் உருவாக்கமும் ஒன்று. மாடித்தோட்டம் அமைப்பது, செடி வளர்ப்பு முறைகள், சினிமா விமர்சனம், சமையல் குறிப்புகள், ஆடல்-பாடல்-நாடக பயிற்சிகள், மென்பொருள் மொழி வகுப்புகள், தொழில்வாய்ப்பு பயிற்சிகள், மீன்பிடி தொழில்நுட்பங்கள், படகு வாழ்க்கை முறைகள், கட்டிட வடிவமைப்பு திட்டங்கள், செல்லப்பிராணி வளர்ப்பு ஆலோசனைகள், மலிவு விலை சந்தை ரவுண்ட்அப், சுற்றுலா தலங்கள்.... என எத்தனையோ தலைப்புகளில், யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அதில் தினந்தோறும் புதுப்புது வீடியோக்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. விருப்பமான காட்சிகளை நம் கண்முன் கொண்டு வருவதால், மக்களும் அதை ரசிக்கிறார்கள். யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்கிறார்கள். இதனால் நமக்கு லாபம்தான், யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கும் லாபம்தான்.


ஆமாங்க....! யூடியூப் வீடியோக்களின் தரத்தை பொறுத்து, அதை பதிவேற்றிய, உருவாக்கிய சேனல்களுக்கு யூடியூப்பில் இருந்து வெகுமதி கொடுக்கப்படும். அதனால்தான், இளைஞர் பட்டாளம் கேமராவையும், மைக்கையும் கையில் ஏந்தியவாறு, சாலைகளில் உலா வருகிறார்கள். பிராங்க் கலாட்டா, கணவன்-மனைவி அன்பு சண்டைகள், குடும்ப உறவுகளின் பிரம்மாண்ட விழாக்கள், பாட்டி வைத்தியம், கிராமத்து சமையல், குழந்தைகளின் சுட்டித்தனம் என ரொம்ப எதார்த்தமான விஷயங்களை எல்லாம், வீடியோவாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்.

இதுபோல உங்களுக்கும் திறமை இருந்து, யூடியூப் சேனல் ஆரம்பிக்க ஆசை இருந்தால், இந்த கட்டுரை உதவியாக இருக்கும். படியுங்கள். யூடியூப்பில் சம்பாதியுங்கள்.

*
எப்படி சேனல் உருவாக்குவது?

யூடியூப்பில் உங்களுக்கு என தனிப்பட்ட கணக்கை உருவாக்கவேண்டும். டிரெண்டிங்கான பெயர்களை யூடியூப் சேனலுக்கு சூட்டினால், வெகு விரைவாகவே பிரபலமாகலாம். யூடியூப் சேனல் பெயர், வீடியோக்களில் தோன்றும் நபர்கள், பகிரும் கருத்துக்கள்... இவற்றை அடையாளமாக வைத்தே, சேனலின் வளர்ச்சி இருக்கும். ஒரே நாளில் பணக்காரனாக ஆகலாம் என்றெல்லாம் கனவு காணாதீர்கள்! ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் சம்பாதிக்கலாம், அது நீங்கள் பகிரும் வீடியோவைப் பொறுத்தது.

*
எதை வீடியோவாக மாற்றுவது?

எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறந்த கேமராவை அல்லது சிறந்த எடிட்டிங் மென்பொருள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடியுங்கள். நாய்க்குட்டி, பூனைக்குட்டி, குழந்தை செய்யும் சேட்டை, மனைவி செய்யும் சமையல், மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எதை வேண்டுமானாலும் வீடியோவாக உருவாக்கலாம்.

*
மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி?

யூடியூப் சேனலை பிரபலப்படுத்த நினைத்தால், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களின் வழியே பிரபலப்படுத்தலாம். சமூக வலைத் தளங்களில் உலா வரும் உங்கள் வீடியோக்களையும், யூடியூப் சேனல் பற்றிய தகவல்களையும் பார்த்து மக்கள், உங்கள் யூடியூப் கணக்கை பின் தொடர வாய்ப்பிருக்கிறது. எத்தனை நபர்கள் உங்களை பின் தொடர்கிறார்களோ, அதற்கு ஏற்ப பணம் உங்கள் வங்கி கணக்கில் வந்து சேரும்.

*
எப்படி பணம் பெறுவது?

யூடியூப்பின் பக்கத்தில் எனது சேனல்என்பதைக் கிளிக் செய்தால் இதற்கான வழிமுறைகள் தோன்றும். அதில் மோனெட்டைசேஷன் என்ற வசதி இருக்கும். அதை ஆக்டிவேட் செய்தால் உங்கள் வீடியோக்களைப் பொறுத்து விளம்பரம் தெரியும். அதில் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் பெறுவதற்கு ஆட்சென்ஸ்என்ற கணக்கு இருக்க வேண்டும். ஆட்சென்ஸ்கணக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை. யூடியூப் சேனலுக்காகவே புதிய கணக்கு தொடங்கி, அதில் பணம் பெறலாம்.

*
எதை பதிவேற்றக்கூடாது?

வர்த்தக உரிமம் இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்தக்கூடாது. கவர்ச்சியான காட்சிகள், கருத்துகளை தவிர்க்கவேண்டும். ஏற்கனவே யூடியூப்பில் இருக்கும் வீடியோவை பதிவிறக்கம் செய்து, அதை புதிய பெயரில் உங்கள் கணக்கில் பதிவேற்றக்கூடாது. அதேபோல பிறர் பாடுவது, ஆடுவது, நடிப்பது, விளையாடுவது ஆகியவற்றை அவர் அனுமதியின்றி வீடியோவாக எடுத்து, பதிவேற்றுவதையும் தவிர்க்கவேண்டும்.

*
எப்போது பணம் கிடைக்கும்?

பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க, குறைந்தது பத்தாயிரம் பார்வையாளர்கள் உங்கள் வீடியோவை பார்க்கவேண்டும். பல்வேறு விளம்பரங்கள் மூலம் தான் நீங்கள் பணம் சம் பாதிக்க முடியும். மேலும் உங்கள் சேனலில் உள்ள அனலிட்டிக்ஸ் விருப்பத்தை சொடுக்கவும். மதிப்பிடப்பட்ட வருவாய்கள் உங்களுக்கு கிடைக்கும். அனலிட்டிக்ஸை பொறுத்தவரை வீடியோ பார்வைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பலவற்றை இங்கே பார்க்கலாம். நீங்கள் எத்தனை வீடியோக்கள் அப்லோடு செய்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால் அதற்கேற்ற வருமானம்தான் கிடைக்கும்.

*
எதில் உஷாராக இருக்கவேண்டும்?

பதிவேற்ற இருக்கும் வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் யூடியூப் தரும் ஆடியோ ஸ்வேப் வசதியை பயன்படுத்தக் கூடாது. காரணம் அந்த ஆடியோ ஸ்வேப் வசதியைப் பயன்படுத்தும் வீடியோவுக்கு காட்டப்படும் விளம்பரங்களுக்கான வருமானம் உங்கள் கணக்கில் வந்து சேராது. மாறாக அது கூகிள் கணக்கில்தான் போய் சேரும்.

*
பணம் அதிகமாக சம்பாதிக்கும் விஷயங்கள் எவை?

சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தல வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள் போன்றவை அதிகமாக பணம் சம்பாதிக்க பயன்படும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets