உங்கள் வருகைக்கு நன்றி

நினைவில் நின்றவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவில் நின்றவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எல்லாருக்கும் எப்போதும் டென்ஷன்,டென்ஷன்.

வியாழன், 1 மார்ச், 2012

வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சிறுகச் சிறுக குருவி சேர்க்கிற மாதிரி சேமித்து வைப்பது எதற்காக? தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தானே? ஆனால் சேர்த்து வைத்த பணம் எல்லாம், ஏதோ ஒரு நோய் வந்து அதற்கு மருத்துவம் பார்ப்பதற்காகச் செலவழிந்து போகிறது என்றால்?... அப்படியானால் இவ்வளவு நாட்கள் பட்ட துன்பத்துக்குப் பொருளே இல்லையா?
இப்போதுள்ள மருத்துவச் செலவுகளைப் பற்றி எண்ணிப் பார்த்தால், இந்தக் கேள்வி ஏழை மக்களுக்கு மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினருக்கும் எழுவதைத் தவிர்க்கவே முடியாது.
அதிலும் சிறுநீரகத்தில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டு வாரத்துக்கு இருமுறையோ, மூன்று முறையோ டயாலிஸிஸ் செய்ய வேண்டும் என்றால்...
பொதுவாக ஒருமுறை டயாலிஸிஸ் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 2,500 ரூபாய் ஆகும். வாரத்தில் இரண்டு நாட்கள் என்றால் ஐந்தாயிரம் ஆகும். மாதத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.
ஏழைகளால் இப்படிச் செலவு செய்ய முடியுமா? இல்லை மாதம் 20 ஆயிரம் சம்பளம் வாங்குபவரால் கூட முடியுமா?
அப்படியானால் என்ன செய்வது? நோய்க்கு மருத்துவம் பார்க்க முடியாமல் இறக்க வேண்டியதுதானா? என்று கலங்குபவர்களுக்கு ஆறுதல் கரம் நீட்டி அரவணைக்கிறது சென்னை நுங்கம்பாக்கம் அருகே உள்ள மகாலிங்கபுரத்தில் செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்.
ஒருமுறை டயாலிஸிஸ் செய்வதற்கு வெறும் 500 ரூபாயை மட்டுமே கட்டணமாக வாங்கி,பெரும் சமூகப் பணி ஆற்றி வருகிறது அது.
இந்த டயாலிஸிஸ் சென்டரை நடத்தி வரும் "நந்தலாலா மெடிகல் பவுண்டேஷனின்' மூல ஊற்று "நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளை'. அந்த அறக்கட்டளை உறுப்பினரான லலிதா பாலசந்தர்.

தெற்காசிய நாடுகளில், அதிலும் குறிப்பாக இந்தியாவில்தான் சர்க்கரை வியாதி அதிகம். நமது வாழ்க்கைமுறை, உணவுமுறை மாறிவிட்டதே இதற்குக் காரணம். இயந்திரத்தனமான மனித வாழ்க்கையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் எப்போதும் டென்ஷன்... டென்ஷன். இதுவே சர்க்கரை வியாதி அதிகம் வரக் காரணமாக இருக்கலாம்.
சர்க்கரை வியாதி வந்தால், உடலின் பிற உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதயம், சிறுநீரகம் போன்றவை அதிகம் பாதிக்கப்படுகின்றன.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போய்விட்டால் மாற்றுச் சிறுநீரகம்தான் பொருத்த வேண்டும். மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கு அதிகச் செலவு ஆகும். மேலும் பொருத்தமான மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பதும் சிரமம். இந்தச் சூழ்நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிருடன் வாழ வேண்டுமானால், வாரத்துக்கு இருமுறையோ அல்லது மூன்று முறையோ டயாலிஸிஸ் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நமது நாடு ஏழைகள் அதிகம் உள்ள நாடு. டயாலிஸிஸ் செய்து கொள்வதற்கோ அதிகம் செலவாகும். அப்படியானால் ஏழைகள் என்ன செய்வார்கள்? மேலை நாடுகளில் அங்குள்ள அரசுகளே இந்த விஷயத்தில் போதிய கவனம் செலுத்தி, ஏழைகளும் குறைந்த செலவில் டயாலிஸிஸ் செய்து கொள்ள ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன. ஆனால் நம்நாட்டில் அப்படிப்பட்ட வசதிகள் இல்லை. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தார் நந்தலாலா சேவா சமிதியின் நிறுவனரான பூஜ்யஸ்ரீ மதிஒளி ஆர். சரஸ்வதி. அவருடைய முயற்சியால் உருவானதுதான் ஏழைகளுக்குக் குறைந்த கட்டணத்தில் டயாலிஸிஸ் செய்யும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்.
2005 ஆம் ஆண்டு வெறும் ஆறு டயாலிஸிஸ் செய்யும் இயந்திரங்களுடன் இந்த சென்டர் ஆரம்பிக்கப்பட்டது. 2009 இல் மேலும் மூன்று இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இப்போது ஆண்டுக்கு சுமார் 5,400 பேருக்கு டயாலிஸிஸ் செய்யும் அளவுக்கு இது திறன் கொண்டதாக இருக்கிறது.
டயாலிஸிஸ் செய்து கொள்ளும்போது தேவைப்படும் பொருட்களை வாங்க இங்கே கட்டணம் எதுவும் வாங்கப்படுவதில்லை.
சிலநேரங்களில் இயந்திரப் பழுது காரணமாக ஒருவேளை டயாலிஸிஸ் பாதியில் நின்றால் அதற்குக் கட்டணம் வாங்குவதில்லை. முழுமையாக டயாலிஸிஸ் செய்தால் மட்டுமே இந்தக் குறைந்த கட்டணத்தை வாங்குகிறோம். பிற டயாலிஸிஸ் செய்யும் இடங்களில் இந்த நடைமுறை இல்லை. ஒரு மணி நேரம் டயாலிஸிஸ் செய்தாலும் முழுக்கட்டணத்தையும் வசூலித்துவிடுவார்கள்.
இந்த டயாலிஸிஸ் சென்டரை நடத்துவதால் மாதம் ஒன்றுக்கு ஏறக்குறைய ரூ.2 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. எங்களுடைய சேவையைத் தெரிந்து கொண்டு உதவும் நல்ல மனமுடைய பலரின் உதவியாலும் ஒத்துழைப்பாலும்தான் இந்த இழப்பை எங்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது. தொடர்ந்து செயல்பட முடிகிறது. மேலும் ஒவ்வோராண்டும் நன்கொடை திரட்டுவதற்காக கலை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். நந்தலாலா மெடிகல் பவுண்டேஷனில் பல தொண்டுள்ளம் உள்ள மருத்துவர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். இந்த டயாலிஸிஸ் சென்டரை டாக்டர் ஆர்.வெங்கட்ராமன் கவனித்துக் கொள்கிறார்.

நந்தலாலா மெடிகல் பவுண்டேஷன் இந்த டயாலிஸிஸ் சென்டரை மட்டுமல்ல, பல மருத்துவப் பணிகளையும் செய்து வருகிறது. திண்டிவனம் அருகில் மாம்பட்டு எனும் கிராமத்தில் உள்ள 600 குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச மருத்துவமுகாம் நடத்தி வருகிறது.
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தொடர்பாகவும், எலும்புத் தேய்வு நோய் தொடர்பாகவும் விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகிறது'' என்ற அவரிடம், இங்கு டயாலிஸிஸ் செய்து கொள்ள வருகிறவர்களை ஏழைகள் என்று எப்படித் தெரிந்து கொள்கிறீர்கள்?'' என்று கேட்டோம்.
அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. டாக்டர்கள் பலரும் சொல்லித்தான் டயாலிஸிஸýக்காக இங்கே வருகிறார்கள். டாக்டர்கள் நோயாளிகளைப் பற்றி விசாரிக்காமல் இங்கே அனுப்பமாட்டார்கள். மேலும் ஒருவரிடம் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தாலே அவர்களைப் பற்றித் தெரிந்துவிடும்'' என்கிறார் சிரித்துக் கொண்டே லலிதா பாலசந்தர்.
நன்றி - தினமணி

Read more...

வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்பதே ஆசை.

புதன், 15 பிப்ரவரி, 2012


மாணவருடன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்பவர் ஆசிரியர் வெங்கட்ராமன்(70). தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர். கடந்த 10 நாள் முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய கோளாறை சரிசெய்ய அறுவைசிகிச்சை செய்ய டாக்டர்கள் கூற, வெங்கட்ராமன் மறுத்துவிட்டார். அவரிடம் எஸ்எஸ்எல்சி படித்துவரும் 20க்கும் அதிகமான மாணவர்கள், தேர்வு எழுதுவதற்கு தான் அளித்து வரும் பயிற்சி தடைபடக்கூடாதே என்பதே, இதற்கு காரணம். முன்னாள் மாணவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுக்க, நிராகரிக்க முடியாமல் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார். அறுவைசிகிச்சை முடிந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 1964ல் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். ஆசிரியர் என்பதை தாண்டி மாணவர்களுக்கு நட்புக்கரம் நீட்ட துவங்கினார். வகுப்பு முடிந்த பின்னரும் மாணவர்களுக்கு இவர் கல்வி கற்றுக்கொடுத்தார். இதை பள்ளி நிர்வாகம் விரும்பவில்லை. ஒரே ஆண்டில் பெட்டி படுக்கையுடன் மீண்டும் சொந்த ஊர் செல்ல ரயில் நிலையம் சென்றவரை மாணவர்கள் சிலர் பின்தொடர்ந்து சென்று, ‘நீங்க போனீங்கன்னா எங்களோட எதிர்காலமே பாழாயிடும்Õ என கதறினர்.

மேட்டுப்பாளையத்திலேயே ரெயின்போ கல்வியகம் என்ற தனி பயிற்சி பள்ளியை துவக்கினார். சமூக அக்கறை உள்ளவர்களின் உதவியுடன், அனைவருக்கும் இலவசமாக கல்வியை கற்றுக்கொடுத்தார். தனக்கென ஒரு குடும்பம் உருவான பின்புதான் கட்டணம் வாங்க துவங்கினார். அதுவும், ஏழை மாணவர்களுக்கு இல்லை. தற்போது, அவரை நலம் விசாரிக்க வருபவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் மாணவர்கள். பலர் இவரது மையத்தில் படித்து பட்டம் பெற்று 25 ஆண்டுக்கு மேல் அரசின் பல்வேறு துறைகளில் வேலை பார்ப்பவர்கள். மின் வாரிய மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெகநாதன் கூறுகையில், ‘‘நான் உயர காரணமே சார்தான். காசு கொடுத்து படிக்கவேண்டிய பல படிப்புகளை இலவசமாக சொல்லி கொடுத்ததால் அஞ்சல் வழியிலேயே பட்டப்படிப்பு முடித்தேன்’’ என்றார். மின்வாரிய ஊழியர் சந்திரன், ‘‘எஸ்எஸ்எல்சி படிக்கறப்ப நான் ரொம்ப சுமாரான மாணவன். சாதாரண கணக்கு கூட போட தெரியாமல் இருந்த என்னை இன்று அக்கவுன்டன்டாக மாத்தினது சார்தான்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.  மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 40 ஆண்டுகளில் சிறுக, சிறுக சேர்த்த தொகை முழுவதும் இழந்தபோதும் வைராக்கியம் மட்டும் மாறவில்லை. முன்னாள் மாணவர்கள் பலர் சிகிச்சைக்கான செலவை முழுமையாக ஏற்க முன்வந்தபோதும் அதை நிராகரித்து விட்டார்.

புனிதமான நேசம்

மருத்துவமனையில் இருந்த வெங்கட்ராமன் கூறியதாவது: மாணவர்களுடனான நேசம் புனிதமானது. இப்போது மாறி விட்ட வாழ்க்கை சூழலும், மாணவர்களிடம் பெருகிவரும் மன அழுத்தம்தான் இந்த உறவை சீர்குலைக்கிறது. பள்ளிக்கு வரும் 40 மாணவர்களும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அவர்களது பிரச்னையை அறிந்து கொள்வதில் பெற்றோரை காட்டிலும் ஆசிரியருக்கு தான் பங்கு அதிகம். சென்னையில் ஆசிரியை மாணவனால் கொல்லப்பட்டது போன்ற சம்பவம் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது. எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்பதே ஆசை. உயிர் உள்ளவரை என் கையில் சாக்பீஸ் இருக்கும்.

Read more...

கதாநாயகர்கள்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012


இன்றைய உலகில் தினமும் மாலைப்பொழுதில் சூரியன் மறைந்த பின்பு இரவிலும், பகலைப் போல மின்னுகிறதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசன் தான்.
இவர் அமெரிக்கவின் மிலன் நகரில் 1847ல் பிப்.,11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே வெளிச்சம் கொடுத்தவர். இவர் மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிராப், டெலி பிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். இவர் அமெரிக்காவில மட்டும் தன் பெயரில் 1,093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களை பதிவு செய்துள்ளார். இøத் தவிர பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் தனது கண்டுபிடிப்புகளை பதிவு செய்துள்ளார். சில படைப்புகள், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டதை மேம்படுத்தி உருவாக்கப்பட்டவை.

அறிவியல் ஆர்வம்: பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்தவர் எடிசன். பள்ளிப்பருவத்தின் போது, காது கேளாமையால் பாதிக்கப்பட்டார். ஆசிரியர் இவரை திட்டியதால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார். இருப்பினும் இவரது தாயார் ஆசிரியை என்பதால், வீட்டிலேயே கல்வி கற்றார். 12வது வயதிலேயே படிப்புக்கு முடிவு கட்டினார். காரணம், அறிவியலில் கொண்ட ஆர்வம். டெட்ராய்ட் ரயில் நிலையத்தில் செய்தித்தாள், காய்கறி விற்கும் பணியில் ஈடுபட்டார். அப்போதெல்லாம், தந்திப்பதிவு (டெலிகிராப்) மூலம் ரயில் போக்குவரத்து நடந்தது. புள்ளிக்கோடுகளாக பதிவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் தந்திப்பதிவு ஆபரேட்டர் வேலையில் எடிசன் சேர்ந்தார். 1871ல் திருமணம் செய்தார். மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

முதல் கண்டுபிடிப்பு: டெலிகிராப் ஆபரேட்டர் வேலையில் இருந்து விலகி, நியூயார்க் சென்றார். அங்கு தான் கண்டுபிடிப்பாளராக வாழ்க்கையை தொடங்கினார். "போனோகிராப்' எனும் ரிகார்டிங் கருவி, ஒலி நாடா, மின் டெலிகிராப் கருவிகளை கண்டுபிடித்தார். டெலிகிராப் மட்டும் 10 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விலை போனது. இதன் மூலம் பெரிய தொழில் அதிபராக உயர்ந்தார்.

சரித்திர கண்டுபிடிப்பு: அக்காலத்தில் வாயு விளக்குகள் தான் பயன்பாட்டில் இருந்தன. மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது கனவாகவும் இருந்தது. மின் விளக்கு ஆராய்ச்சிக்காக "எடிசன் மின்விளக்கு கம்பெனி' தொடங்கப்பட்டது. பிரான்சிஸ் அப்டன் என்பவரும் எடிசனின் ஆய்வுக்கூடத்தில் சேர்ந்தார். இவர்கள் சேர்ந்து 1879ல், பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன்படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில், உலகின் முதல் மின்விளக்கை எடிசன் குழுவினர் கண்டுபிடித்தனர். இதற்குப்பின் எலக்ட்ரிக் மோட்டார், சினிமா கேமரா உள்ளிட்ட பல கண்டுப்பிடிப்புகளை உருவாக்கினார். இவர் படித்து தெரிந்து கொள்வதை விட, ஒரு செயலை திரும்ப, திரும்ப செய்து செய்முறை மூலமே கற்றுக்கொண்டார். இவரிடம் எப்படி இவ்வளவு கண்டுபிடிப்புகளை உருவாக்கினீர்கள் என்று கேட்ட போது, "படைப்புக்கு தேவை ஒரு சதவீதம் ஊக்கமும், 99 சதவீதம் கடின உழைப்பும் தான்' என்றார்.

இறுதி மரியாதை: எடிசன், 1931 அக்., 18ல் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் மறைந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஹெர்பர்ட் ஹூவர், எடிசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் தேவையான விளக்குகள் தவிர மற்ற அனைத்தையும் ஒரு நிமிடம் அணைக்க உத்தரவிட்டார். இவரது கண்டுபிடிப்பை போற்றுவோம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets