உங்கள் வருகைக்கு நன்றி

தூக்கமும் கண்களை தழுவட்டுமே

புதன், 15 பிப்ரவரி, 2012

டீன்ஏஜ் இளைஞர்களுக்கு 7 மணி நேரம் தூக்கம் போதும் என்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள பிர்காம் யங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எரிக் எய்ட் தலைமையிலான குழுவினர் தூக்கம் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தினர். தினமும் 7 மணி நேரம் தூங்கும் டீன்ஏஜ் பருவத்தினர் கல்வி கற்பதில் சிறந்தவர்களாக உள்ளனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் சுமார் 1,724 பள்ளி மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் தூங்கும் நேரம், தேர்வுகளில் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடந்தது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் எரிக் கூறுகையில், ‘16 வயதுள்ள ஒருவருக்கு 9 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று முன்பு நம்பப்பட்டது. அவர்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதும் என தற்போது தெரியவந்துள்ளது. வயது ஏற ஏற தூக்கத்தின் அளவை இன்னும் குறைக்கலாம். 10 வயது குழந்தைகள் 9 மணி நேரமும், 12 வயதினர் 8 மணிநேரமும், டீன்ஏஜ் வயதினர் 7 மணி நேரமும் தூங்குவது சரியான அளவுஎன்றார். தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. எல்லாருக்கும் தூக்கம் அவசியம். நீண்ட காலமாக 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், மந்தத் தன்மை ஏற்படும். செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கப்படும். சரியாக தூங்காத பெண்களுக்கு புற்றுநோய், குறிப்பாக மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிகளவு உடற்பயிற்சி செய்தாலும் சரியாக தூங்கினால் மட்டுமே அதன் முழு பலன் கிடைக்கும்என்கிறது அந்த ஆய்வு.

தூங்காவிட்டால் வரும் தொல்லைகள்!
நீங்கள் நன்றாகத் தூங்கும் நேரம், நீங்கள் தூங்கும் விதம், உங்களின் ஆழ்ந்த தூக்க நேரம், இவைகளை வைத்துதான் நீங்கள் விழித்திருக்கும் நேரம், உங்கள் ஞாபகசக்தி, மூளையின் செயல்பாடு, அறிவுத்திறன், சிந்தனை, உடலின் செயல்பாடு, எண்ணங்களின் வெளிப்பாடுகள், உடலின் சக்தி, உடலின் எடை ஆகியவை கணக்கிடப்படுகிறது. 

நான்கு நாட்கள் சரியாகத் தூங்கவில்லையென்றால், அரை கிலோ உடல் எடை குறைந்து விட்டது என்று சிலர் சொல்வார்கள். இது முற்றிலும் உண்மை. தூங்கும் நேரத்தை வைத்துத்தான், விழித்திருக்கும் நேரம் கணக்கிடப்படுகிறது. நன்றாகத் தூங்கிவிட்டு எழுந்தால் அடுத்தநாள் தூங்குகிறவரை களைப்பில்லாமல் உற்சாகமாக எல்லா வேலைகளையும் பார்க்க முடியும். 

எல்லா வேலைகளிலும் அதிகமாக கவனம் செலுத்தவும் முடியும். வேறு எந்த விஷயத்திலும் இவ்வளவு உற்சாகமும், ஆனந்தமும், சந்தோஷமும், தெம்பும், நிம்மதியும் கிடைக்காது. ஒருநாளைக்கு சுமார் 8 மணி நேரம் நாம் தூங்குவதாக வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதியை நாம் தூங்கிக் கழிக்கிறோம். அப்படியென்றால் ஒருவேளை நாம் எழுபது வயதுவரை வாழ்கிறோம் என்று வைத்துக் கொண்டால் சுமார் 23 வருஷத்தை நாம் தூங்கியே கழித்திருக்கிறோம் என்று அர்த்தம். 

ஆ... 23 வருட வாழ்க்கையை நாம் தூங்கியே கழித்துவிட்டோம் என்று எண்ணி நீங்கள் வேதனைப்பட வேண்டாம். உண்மை என்னவென்றால், 23 வருடம் ஒழுங்காக தூங்கியதால்தான், 70 வயது வரை நிம்மதியாக வாழ முடிந்திருக்கிறது என்பதுதான் நிஜம். அப்படி தூங்கவில்லை என்றால் அந்த வயது வரை வாழவே முடியாது. ஒழுங்காக தூங்காவிட்டால் நம் மூளையும் வேலை பார்க்காது. 

தினமும் சரியாகத் தூங்காதவருடைய உடல் எடை, வெகு சீக்கிரத்திலேயே குறைய ஆரம்பித்துவிடும். அதேபோல கண்களைச் சுற்றி கரு வளையமும், கண்கள் சற்று உள்ளேபோன மாதிரியும் தெரியும். உடலில் சோர்வு அதிகம் இருக்கும். தெம்பு இருக்காது. உடல் தசைகள் முழுவதிலும் வலி இருக்கும். ஞாபக மறதி இருக்கும். 

மனச் சோர்வு, கை விரல் நடுக்கம், தலைவலி, ஜலதோஷம் வருவது போன்ற உணர்வு, கண்கள் சிவந்து போகுதல், கண் கீழ் இமைக்குக் கீழே பை போல வீங்கிப் போகுதல்   (ஐ பேக்ஸ்) ரத்தக்கொதிப்பு அதிகரித்தல், உடலில் ஹார்மோன்கள் அதிகமாக சுரத்தல், சர்க்கரை வியாதி வருவதற்குண்டான வாய்ப்புகள், எரிச்சல், தலைசுற்றல், உடல் எடை சில பேருக்கு கூடுதல், கொட்டாவி முதலியவை ஏற்படும்.


தூக்கத்தை தொலைக்கும் பட்டயா நகர வியாபாரிகளுக்கும், இரவுப் பணி செய்பவர் களுக்கும் மேற்கண்ட பிரச்சினைகளில் அவரவர் தூக்க அளவைப் பொறுத்து ஏதேனும் பாதிப்புகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். பத்து வயது வரை நிறைய நேரம் குழந்தைகள் தூங்க வேண்டும். இது அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஆனால் இப்பொழுதெல்லாம் குழந்தைகளை பெற்றோர்கள் சரி வர தூங்க வைப்பதே இல்லை. இரவும் லேட்டாக குழந்தைகள் படுக்கிறார்கள். 



காலையில் ஸ்கூலுக்கு அனுப்ப அரைகுறை தூக்கத்திலேயே சீக்கிரம் எழுப்பி ரெடி பண்ணி வேனில் ஏற்றி விட்டு விடுகிறார்கள். இது சரியல்ல. குழந்தை வளர வளர, தூக்க நேரம் ஒவ்வொரு மணி நேரமாக குறைந்து கொண்டே வரும். 50 வயது வரும்போது 6 முதல் 8 மணி நேர தூக்கமாக குறைந்து விடும். இளம் வயதில் அதிக நேரம் படிப்பதனாலும், வேலை பார்ப்பதனாலும், விளையாடுவதாலும், மூளை சீக்கிரமே களைப்படைந்து விடுகிறது. 



ஆனால் இளம் வயதில் தூங்கும் நேரம் கொஞ்சமாக இருந்தாலும் அந்த தூக்கம் ஆழ்ந்த தூக்கமாக இருக்கும். மாவீரன் நெப்போலியன் 3 முதல் 4 மணி நேரம்தான் தினமும் தூங்குவாராம். பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சுமார் 10 மணி நேரம் தூங்குவாராம். `நல்ல பொழுதையெல்லம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்' என்று சினிமாப் பாடல் உண்டு. 



அப்படி தூங்கக்கூடாத நேரத்தில் தூங்கியும், தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமலும் இருந்து உடம்பைக் கெடுத்துக் கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். 

தூக்கமின்மை பிரச்னை


இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். தூக்கமின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன். சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால்கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும். 


30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம்சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 


அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும்.  
தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது. 

கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும்.  தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும். இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை துவங்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளலாம். 

மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது. குழந்தைகளுக்கு சிறு வயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம், குழந்தைகள் பயங்கரமான கனவுகளால் விழிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கனவு பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மரபு ரீதியான இரவு நேர பய உணர்வும் தூக்கத்தின் எதிரியே. 

தூக்கத்தில் எழுந்து நடப்பது, தானாகப் பேசுவது போன்ற குறைபாடுகளும் குழந்தைகளிடம் காணப்படலாம். இது குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகள் நிம்மதியான தூக்கம் பெற முடியும்.  


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets