உங்கள் வருகைக்கு நன்றி

இது ஒரு சிறு துளிதான்

புதன், 29 பிப்ரவரி, 2012


'கேரளம் கடவுளின் தேசம்' என்று அந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறையினர் விளம்பரம் செய்வார்கள். உலகத்தில் உள்ள அனைத்து தேசங்களும் கடவுளின் தேசங்கள்தான். ஆனால் கேரளாவை மட்டும் அவர்கள் அப்படி அழைப்பதேன்?.  பருவ மழைக்காலம். மழையென்றால் கொட்டித் தீர்க்கின்ற மழை. ஒரு துளிநீரும் தேங்கி நிற்காத அற்புதத்தை  அங்கே தான் பார்க்கலாம். மாநிலம் முழுவதும் அப்படி ஒரு வடிகால் அமைப்பு. முக்கால் வாசி இயற்கை செய்துகொடுத்தது. கால் வாசி மக்களும் அரசும் செய்வது. அந்தக் கால் வாசிதான் ஒவ்வொரு முறையும் கேரளம் என்னை ஆச்சரியப்படுத்துவது. ஊரில் உள்ள வடிகால்கள் அனைத்தும் முறைப்படிப் பராமரிக்கப்படுகின்றன. மக்கள் தங்கள் பங்குக்கு வடிகால்களில் வேண்டாததைப் போடாமல் பொறுப்போடு இருக்கிறார்கள்.
                                    
நம்மூர்களில், குறிப்பாக  நகரங்களில், புற நகர்ப் பகுதிகளில், அனேகமாக எல்லா மழை நீர் வடிகால்களும் அடைபட்டுக் கிடக்கின்றன. சாக்கடைகளின் நிலைமை இன்னும் மோசம். அவற்றில் அடைந்து கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. இதில் அரசை அல்லது உள்ளாட்சி அமைப்புக்களைக்  குறை கூறுவது எனக்கு உடன்பாடல்ல. காரணம் மக்களே நாள்தோறும் தமக்கு வேண்டாத-பழைய பேப்பர் வாங்குபவருக்குத் தேவை இல்லாத பொருட்களை, 'பிளாஸ்டிக்' பொருட்களை, சாக்கடைகளில் வீசி விடுகிறார்கள். நாலு பேர் பார்க்கும் போதே அப்படி! யாவரும் கண்ணயர்ந்து உறங்கும் நேரத்தில், போடுவதும் உண்டு !  பிளாஸ்டிகிற்கு அழிவில்லை!   இந்த பிளாஸ்டிக்கை எதைக் கொண்டு அழிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை! ஏதோ அறிவியல் ஆய்வுக் கூடங்களில்   அழிப்பது எப்படி என்று ஆய்வு செய்கிறார்களாம்.   பிளாஸ்டிக்கைக் கொண்டு சாலை அமைக்கலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசினார்கள். தூத்துக்குடியில் ஒரு பரிசோதனைச் சாலை போட்டார்கள். அந்தச் சாலை இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. அந்த முயற்சி சூழலுக்குச் சிக்கல் ஆக்காத நல்ல முயற்சியாக இருக்கட்டும். அதுவல்ல எனது இப்போதைய கவலை.இந்த பிளாஸ்டிக் கழிவுகளைச் சாக்கடைகளிலும் மழை நீர் வடிகால்களிலும் வீசி  எறிந்து விளையாடும் மக்கள் மற்றவர் உயிரோடு விளையாடும் மக்கள் என்று அடையாளப்படுத்துவதற்கு என்ன செய்யலாம்  

இந்தக் கவலையோடு திருவனந்தபுரத்திலிருந்து நமது நாகர்கோவிலுக்குச்  சென்றேன். ரயில் பயணம். என்னை அழைக்க வந்த நண்பர் நெடு நாளைக்குப் பின் சந்திப்பவர். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு கொஞ்சம் தாழ்ந்த குரலில் ஆனால் அவசரமாக 'உங்களிடம் பிளாஸ்டிக் பைகள் ஏதும் இல்லையே? இருந்தால் அபராதம்தான்!'என்று கூறினார். நல்ல வேளையாக என்னிடம் அப்படி ஒன்றும் இல்லை.'ஏன்?' என்று கேட்டேன். 'கன்யாகுமரி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை. ஆட்சித் தலைவர்  ஆணை!' என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். பயணிகளின் கையில் பிளாஸ்டிக் பை இல்லை! கண்களைக் கசக்கிக் கொண்டேன்! என்னைக் கிள்ளிக் கொண்டேன்!. வலித்தது! கனவல்ல நனவுதான்! 'அடடாவோ அடடா!இதுவல்லவா ஊர்!என்று வியந்தேன்.'ஊரா, மாவட்டமே அப்படித்தான்!'என்றார் நண்பர். 'அபராதம் எவ்வளவு?' என்று வினவினேன். 'நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை'என்றார். 'வசூல்  எப்படி?' என்றேன்.'ஆரம்பத்தில் அறியாதவர்கள், அகப்பட்டுக்கொண்டவர்கள் என்று அரசுக் கருவூலத்துக்கு நல்ல வருமானம் 'என்றார். 'இப்போதெல்லாம் அறவே இல்லை' என்ற நல்ல தகவலையும் சொன்னார். 'வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு எப்படித் தெரியும்?' என்று வினவினேன். 'அரசு விளம்பரங்களைக் காட்டினார். தெரியாமல் கொண்டு வந்தவர்களும் தப்பவில்லை. 'உங்களை விட்டால் உள்ளூர் ஆசாமிகளும் வெளியூர்ப் போர்வையில் தப்பிக்கப் பார்ப்பார்கள்' என்று அதிகாரிகள் மறுத்து விடுவார்களாம். 'காவல் துறையின் உண்மையான கெடுபிடியை இங்கேதான் பார்க்கவேண்டும்' என்றார். இரயில் நிலையத்துக்கு வெளியே காக்கிச் சட்டைக்காரர்கள் கன கச்சிதமாக தங்கள் கடமையைச் செய்து கொண்டிருந்தார்கள்.
                                      
'ஆணை பிறப்பித்து அதனை எல்லா வகையிலும் நடைமுறைப்படுத்தும் அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் எனும் மகானுபாவர் யார்?' என்றேன் 'திரு.ராஜேந்திர ரத்னூ'.என்றார். அந்த அதிசய மாவட்ட ஆட்சித் தலைவரை எப்படி பாராட்டினாலும் மிகையில்லை.
                                         
சட்டம் போட்டதோடு நில்லாமல் பிளாஸ்டிக் தீய விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் பல நிலைகளில், பல வகைகளில் அவர் செயல் படுத்தி வருவதை நண்பர் விரிவாகக் குறிப்பிட்டார். இதில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்கு பற்றியும், அரசு அதிகாரிகளின் ஈடுபாடு மிக்க ஆர்வத்தையும் பாராட்டிப் பேசினார். 'வணிகர்கள், நுகர்வோர் அனைவரும் தம் பங்கைச் சிறப்பாகச் செய்கிறார்கள் 'என்றார். 'காகிதப் பையோ, துணிப் பையோபாத்திரமோ  இன்றி இன்று கடைக்குச் செல்வார் யாரும் இல்லை' என்றார். சூழலைக்  காப்பதில் இது ஒரு சிறு துளிதான்  எனினும் இதுவே ஒரு பெரு வெள்ளமாக வளரும்.! மற்ற மாவட்டங்கள் இந்த மாபெரிய இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொள்ளும் நாள் எது?
                                         
கன்யாகுமரி மாவட்டம் கேரளத்தை அடுத்துள்ள மாவட்டம் என்பதால் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் எனும் புகழ் உடையது.  படித்தவர்கள் என்பதோடு அறிவியல் உணர்வு கொண்டவர்களாகவும், சுற்றுச் சூழல் உணர்வு மிக்கவர்களாகவும், சட்டத்தை மதிக்கின்றவர்களாகவும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது.                                                          

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets