உங்கள் வருகைக்கு நன்றி

மூலிகை டீ தயாரிக்கலாமா

வெள்ளி, 2 டிசம்பர், 2011


உடல்நலனுக்கு சிறந்த மூலிகை டீ, காபித்தூள் தயாரிப்பது எளிதானது. ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மூலிகை டீ, காபித்தூள் தயாரித்து விற்றால்  நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறுகிறார் கோவை, கோவைப்புதூர் பரிபூர்ணா எஸ்டேட்டில் தி யுனிவர்சல் குட்லைப் சென்டர் நடத்தி வரும் விநாயகம். அவர் கூறியதாவது: சிறுவனாக இருந்தபோது, தந்தை ஏலக்காய் டீ, சுக்கு காபி தயாரித்து விற்று வந்தார். பின்னர் மூலிகை டீ, காபித்தூள் விற்றார். அவருக்கு பின், நான் இந்த தொழிலை தொடர்ந்தேன். அதோடு, மூலிகை பல்பொடி, வல் லாரை, தூதுவளை, அருகம்புல் ஜூஸ், முகத்தை பளிச்சென்று வைத்து கொள்ள மூலிகை பேஸ்ட் உள்பட 150 வகை  மூலிகை பொடிகளை தயாரித்து விற்கிறேன்.

வீடுகளுக்கு நேரடி யாக சென்று விற்று வருகிறேன். ஒரு தடவை வாங்குபவர்கள் தொடர்ந்து வாங்குவதால், வாடிக்கையாளர்கள் அதிகரித்துவருகின்றனர். வழக்கமாக டீ, காபி அதிகம் குடித்தால் பித்தம் என்பர். தலைவலி, சளி, அஜீரணம், பசியின்மையை மூலிகை டீ நீக்கும். மூலிகை காபி ரத்த அணுக்களை அதிகப்படுத்தும். உடல் வலிமை, புத்துணர்ச்சி ஏற்படும். மூலிகைகள் பக்க விளைவுகள் இல்லா தவை. 

உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தி பலன் பெறலாம். குறைந்த முதலீட்டில் லாபம் கிடைக்கும் மூலிகை டீ, காபி பொடியை யார் வேண்டுமானாலும் எளிதில் தயாரிக்கலாம். தங்கள் பகுதியிலேயே விற்று லாபம் பார்க்கலாம். 

தயாரிப்பது எப்படி?

மூலிகை டீத்தூள்: மூலிகை டீத்தூள் தயாரிக்க ஆவாரம் பூ, தாமரை, ரோஜா, செம்பருத்தி, வாழை பூ, வேம்பு, அகத்திப் பூ ஆகிய 7 வகை பூக்கள் தலா ஒரு கிலோ எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை தனித்தனியாக நல்ல தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்து 2 மணிநேரம் காய வைக்க வேண்டும். பின்னர் அதை மெஷினில் அரைத்து, சலித்தால் மூன்றரை கிலோ மூலிகை பொடி கிடைக்கும். அதில் 2.5 கிலோ டீத்தூள் கலந்தால் மூலிகை டீத்தூள் தயார்.

மூலிகை காபி பொடி : சுக்கு, மிளகு விதை, திப்பிலி, மல்லி, சீரகம், விளாமிச்சை வேர், அஷ்வகந்தா போன்ற 7 வகை பொருட்கள் தலா ஒரு கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை தனித்தனியாக காய வைத்து, மெஷினில் அரைத்து, சலித்தால் மூன்றரை கிலோ மூலிகை பொடி கிடைக்கும். அதில் 2.5 கிலோ காபித்தூள் கலந்தால் மூலிகை காபித்தூள் தயார். மூலிகை டீ, மூலிகை காபி தூள்களை 100 கிராம் பாக்கெட்களில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

கிடைக்கும் இடங்கள் 

மூலிகை பொருள்கள் கோவை, மதுரை, தூத்துக்குடியில் உள்ள நாட்டு மருந்துக் கடைகளிலும், கேரள மாநிலம் மூவாட்டுப்புழா மற்றும் பாலப்பட்டியில் உள்ள நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.  மெஷின்கள் கோவை உள்பட முக்கிய நகரங்களில் கிடைக்கிறது. இதர பொருட்கள் உள்ளூரிலேயே கிடைக்கும்.

கட்டமைப்பு!

அரைக்கும் மெஷின், சலிக்கும் மெஷின், பேக்கிங் மெஷின் நிறுவ குறைந்தபட்சம் 20க்கு 10 அடி அறை. மூலிகை பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்களை இருப்பு வைக்க 10க்கு 10 அடி அறை. மூலிகைகளை காய வைக்க 10க்கு 10 அடியில் சிமென்ட் தளம் போட்ட வெட்டவெளி.

முதலீடு!

அரைக்கும் மெஷின் ரூ.25 ஆயிரம், சலிக்கும் மெஷின் ரூ.5 ஆயிரம், பேக்கிங் மெஷின் ரூ.3 ஆயிரம், தராசு ரூ.4 ஆயிரம், பாத்திரங்கள் ஆயிரம் ரூபாய் என மொத்த முதலீடு ரூ.38 ஆயிரம்.

உற்பத்தி செலவு (ஒரு மாதத்துக்கு) 

ஒரு இயந்திரம் மூலம் தினசரி 6 கிலோ மூலிகை டீத்தூள்,  6 கிலோ மூலிகை காபித்தூள் உற்பத்தி செய்யலாம். 6 கிலோ மூலிகை டீ தயாரிக்க தலா ஒரு கிலோ ஆவாரம் பூ (ரூ.50), தாமரை(ரூ.160), ரோஜா (ரூ.200), செம்பருத்தி (ரூ.200), வாழைப்பூ (ரூ.40), வேம்பு (ரூ.50), அகத்தி(ரூ.200) என 7 கிலோ மூலிகை பூக்கள்  மற்றும் 2.5 கிலோ டீத்தூள் (ரூ.335) தேவை. இதன் விலை ரூ.1235. 25 நாளில் 150 கிலோ மூலிகை டீத்தூள் தயாரிக்க ரூ.30,875 தேவை.
6 கிலோ மூலிகை காபித்தூள் தயாரிக்க தலா ஒரு கிலோ சுக்கு (ரூ.240), மிளகு விதை(ரூ.300), திப்பிலி(ரூ.500), மல்லி (ரூ.40), சீரகம் (ரூ.160), விளாமிச்சை வேர் (ரூ.120), அஷ்வகந்தா (ரூ.190) மற்றும் 2.5 கிலோ காபிதூள் (ரூ.400) தேவை. இதன் விலை ரூ.1950. 25 நாளில் 150 கிலோ மூலிகை காபித்தூள் தயாரிக்க ரூ.48,750 தேவை.


 2 தொழிலாளர் சம்பளம் ரூ.12 ஆயிரம், மின் கட்டணம் ரூ.3 ஆயிரம், இதர செலவுகள் ரூ.3 ஆயிரம் என ஒரு மாத உற்பத்திக்கு ரூ.98 ஆயிரம் தேவை.

வருவாய் மூலிகை டீ, காபித்தூள் 100 கிராம் பாக்கெட்களில் பேக்கிங் செய்யப்படுகிறது. மொத்த விற்பனை விலை ரூ.32 (சில்லரை விலை ரூ.40), காபி பாக்கெட் மொத்த விற்பனை விலை ரூ.42 (சில்லரை விலை ரூ.50)க்கு விற்கலாம். வருவாய் 150 கிலோ மூலிகைடீத்தூள் மூலம் ரூ.48 ஆயிரம், 150 கிலோ மூலிகை காபித்தூள் மூலம் ரூ.63 ஆயிரம் என மொத்தம் ரூ.1.11 லட்சம் கிடைக்கும். லாபம் ரூ.13 ஆயிரம். நேரடியாக விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும். 
 
விற்பனை வாய்ப்பு

டிபார்ட்மென்டல் ஸ்டோர், மொத்த மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்யலாம்.  சிறிய மளிகைக்கடைகளுக்கும் சப்ளை செய்யலாம், வீடு, வீடாகவும் அறிமுகப்படுத்தி விற்கலாம். சாதாரண டீ, காபியை விட மூலிகை டீ, காபி குடிப்பது ஆரோக்கியத்தை தருவதால் வாடிக்கையாளர் அதிகரிக்கின்றனர். விற்பனை பெருகி வருகிறது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets