உங்கள் வருகைக்கு நன்றி

பெண்ணாகப் பிறந்துவிட்டாலே இந்த உலகில் பல பிரச்சினைகள்

சனி, 9 ஜூன், 2012


என்னதான் பெண்கள் படித்துவிட்டு வேலைக்குப் போய் ஆண்களுக்கு நிகராகச் சம்பாதித்தாலும் அவர்கள் ஆண்களைப் போல சுதந்திரமாக நடமாட முடிவதில்லை. வீட்டை விட்டு வேலைக்காகவோ, படிப்பதற்காகவோ வெளியே செல்லும் பெண்ணாகட்டும், வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்ணாகட்டும் அவர்களுக்கு ஆண்களால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் ஏற்படலாம்.

தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எப்போதும் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்ணாகப் பிறந்துவிட்டாலே இந்த உலகில் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆண்களால் பலாத்காரம் செய்யப்படுதல், ஈவ் டீசிங் செய்யப்படுதல் என்று எந்தப் பெண்ணுக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நிகழலாம்.

அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் எப்போதும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் இன்றைய பல கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் பலரும் "எங்களுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது" என்ற நம்பிக்கையுடனேயே இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த ஆபத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

இப்படி இருப்பதனால் அவர்களுக்கு உண்மையிலேயே ஆபத்து நேரக்கூடிய சந்தர்ப்பங்களில் எதுவும் செய்ய முடியாமல் அதிர்ச்சியால் உறைந்து போகிறார்கள். இந்த நிலையை மாற்ற பெண்கள் எப்போதும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். ஆபத்துகளைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

* முதலில் பெண்கள் யாருமில்லாத இடங்களில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சில நூலகங்கள் மிகப் பெரியவையாக அதிக ஆள் நடமாட்டம் இல்லாததாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் பெண்கள் தனியாகப் போகக் கூடாது.

* அதுபோல அலுவலகத்திலும் கூட தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

* ஷாப்பிங் போகும் போது இருசக்கர வாகனத்தை, காரை மிக தூரமான இடத்தில் நிறுத்திவைத்துவிட்டுச் செல்லக் கூடாது.

* பொது இடங்களில், பார்ட்டிகளில் பெண்கள் தாங்கள் குடிக்க இருக்கிற குளிர்பானத்தை உடனே குடித்துவிட வேண்டும். மேஜையில் வைத்துவிட்டுச் சற்று எழுந்து போனால்கூட அதில் மயக்க மருந்தோ, வேறு எதையோ பிறர் கலந்து வைத்துவிட வாய்ப்புண்டு.

* இப்போது கால்சென்டர், பிபிஓ போன்றவற்றுக்கு பெண்கள் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. நள்ளிரவில் கூட நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனத்தில் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. அல்லது அலுவலகத்தில் வேலை முடிந்து நேரம் கழித்து வீட்டிற்கு வர வேண்டியிருக்கிறது. அப்போது காரில் ஏறும் முன்பு பெண்கள் டிரைவரை முதலில் கவனிக்க வேண்டும்.

அவர் குடித்திருக்கிறாரா என்பதை அவர் கண்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். காரில் டிரைவருக்குப் பக்கத்தில் சம்பந்தமில்லாத ஆள் யார் உட்கார்ந்திருந்தாலும் காரில் ஏறக் கூடாது. அந்த ஆள் காரில் இருந்தால் நான் காரில் வரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட வேண்டும். காரில் ஏறி உட்கார்ந்தவுடன் செல்போனைக் கையில் எடுத்துப் பேச ஆரம்பிக்கக் கூடாது.

இடையில் யார் காரில் ஏறுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். புதியதாக யாரும் காரில் ஏறுகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். கார் செல்லும் பாதையை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேறுபாதையில் கார் செல்லுமானால் அதை உரிய நேரத்தில் போன் மூலம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். காரில் செல்லும் போது தூங்கக் கூடாது.

* பஸ்ஸில் போகும் போது ஆண்களின் பால்ரீதியான தொந்தரவுக்குள்ளாக நேரிடுகிறது. இதைச் சண்டை போடாமல் சமயோசிதமாகச் சமாளிக்க முடியும். உதாரணமாக பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஆண் தொந்தரவு கொடுக்கும் போது வாந்தி வருவது போல நடித்தால் அந்த ஆண் தள்ளி உட்கார்ந்து கொள்வான்.

இவ்வாறு அந்தந்த இடத்திற்கு ஏற்ப பெண்கள் சாமர்த்தியமாக தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets